tamilnadu

தண்ணீர் தட்டுப்பாட்டை சமாளிக்க விவசாயக் கிணறுகளின் நீர்

சென்னை, ஜுன் 16- சென்னையில் தண்ணீர் தட்டுப்  பாட்டை சமாளிக்க  சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள 316 விவசாயக் கிணறுகளில் இருந்து  தண்ணீர் எடுக்க குடிநீர் வாரியம் திட்டமிட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை பொய்த்துப் போனதால் நிலத்தடி நீரின் அளவு வெகுவாக குறைந்து விட்டது. இதனால் சென்னையில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது.  பெரும்பாலான மக்கள் குடிநீர் வாரிய லாரிகள் மூலம் வழங்கப்படும் தண்ணீரையே நம்பியிருக்கின்றனர்.  இந்நிலையில், வீராணம் ஏரியில் இருந்து தினசரி 180 எம்.எல்.டி தண்ணீரும், மீஞ்சூர் மற்றும் நெம்மேலி யில் உள்ள கடல் நீர் குடிநீராக்கும் திட்டத்தின் கீழ் 150 எம்.எல்.டி தண்ணீரும், பூண்டியிலிருந்து 55 எம்.எல்.டி தண்ணீரும் சென்னையின் குடிநீர் தேவைக்காக பெறப்பட்டு வருகிறது. 140 விவசாயக்கிணறுகளில் இருந்து பெறப்பட்டு வந்த 55 எம்.எல்.டி தண்ணீரின் அளவு போதாது என்பதால், தண்ணீர் தட்டுப்பாட்டை சமாளிக்க சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள 316 விவசாயக்கிணறுகளில் இருந்து நீர் எடுக்க ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. மேலும் குறுகிய தெருக்களில் தண்ணீர் வினியோகிக்கும் 2000, 3000 லிட்டர் கொள்ளளவு கொண்ட லாரி களின் எண்ணிக்கையை 140 லிருந்து 300 ஆக உயர்த்தவும் சென்னை குடிநீர் வாரியம் முடிவு செய்துள்ளது. லாரிகள் செல்லமுடியாத குறுகிய சந்துகளில் குழாய்கள் மூலம் தண்ணீர் விநியோகிக்கும் பணிகள்  நடப்பதாக குடிநீர் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.