tamilnadu

img

விருந்து! - வரத.ராஜமாணிக்கம்

ஒரு நிமிடக் கதை

இந்த விசேஷத்திற்காக கரகரவென்று கடந்த மூன்று நாட்களாக பழனியப்பன் அலைந்து திரிந்து கொண்டிருந்தார். இன்று காலை பண்ணாடியின் மகன்களுக்கு மலைக் கோவிலில் காதுகுத்து. மதியம் மண்டபத்தில் கறி விருந்து. போலியோவினால் பாதிக்கப்பட்ட பத்து வயது மூத்தவனை பழனியப்பன் தோளில் சுமந்து நெஞ்சு வலிக்க மலை மீது சேர்த்தார்.
மதியம் மண்டபம் நிறையக் கூட்டம். மண்டபத்திற்கு முன்பு நின்றிருந்த விலை உயர்ந்த கார்கள் பண்ணாடியின் செல்வாக்கை பறைசாற்றின. பழனியப்பனுக்கு ஒரே பெருமை. அடுத்து அடுத்து வந்த வேலைகளை அசராமல் செய்து கொண்டிருந்தார். காலையிலிருந்து சாப்பிடவில்லை. பிரியாணி வாசம் மண்டபத்திற்கு வெளியேயும் வீசியது. பழனியப்பனுக்கு பசி வயிற்றைக் கிள்ளியது. எங்காவது ஒரு இடத்தில் ஒய்ந்து உட்கார்ந்து ஒரு வாய் சாப்பிட வேண்டும் போலிருந்தது.
 

மாலை நான்கு மணி ஆகி விட்டது. “என்றா பழனியப்பா நீ இன்னும் சாப்பிடலயா?” என பண்ணாடிச்சி கேட்டார். “இல்லை” என மெதுவாக பழனியப்பன் தலையசைத்தார். “சரி சரி வாடா.. வந்து சாப்பிடு” என மண்டபத்தின் முன்வாசலில் தரையில் இலை போட்டார். பழனியப்பனும் சம்மணம் கட்டி உட்கார்ந்து விட்டார். இலை நிறைய கறித் துண்டுகளுடன் பிரியாணி பரிமாறப்பட்டது. இவர் இது போன்ற மணம் மிகுந்த உணவை சாப்பிட்டது இல்லை. பக்கத்தில் எச்சில் இலைகள் கொட்டப்பட்டிருந்த மூங்கில் கூடையை நான்கைந்து தெரு நாய்கள் ஒரே நேரத்தில் முற்றுகை இட்டிருந்தன. இலைக்கான சண்டையில் ஒன்றின் மீது ஒன்று பாய்ந்தன. அதில் தோல்வியுற்ற நாய் ஒன்று ஊளையிட்டு கொண்டே பழனியப்பன் இலை மீது வந்து விழுந்தது. அதிர்ச்சியில் பழனியப்பன் சாப்பிடாமல் எழுந்து கொண்டார். நாய் பிரியாணியை சாப்பிட்டது. “என்றா பழனியப்பா சாப்பிடலையா?” பண்ணாடிச்சி தான் கேட்டார். “நாய் சாப்புடுற பிரியாணியை நான் சாப்பிட முடியாதும்மா” என்று சொல்லியவாறே மண்டபத்தை விட்டு பழனியப்பன் பசியுடன் நடையைக் கட்டினார்.