tamilnadu

img

காத்திருப்பு போராட்டம்... 100 நாள் வேலை வழங்க உடன்பாடு

திருவெண்ணெய்நல்லூர். செப். 12-  100 நாள் வேலையை பயனாளிகளுக்கு உடனடியாக வழங்கக் கோரி திருவெண்ணெய் நல்லூர் ஒன்றியம் கிராமம் என்கிற திருமுண்டீச்சரத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தையடுத்து உடனடியாக வேலை வழங்க அதிகாரிகள் உறுதியளித்தனர். இக்கிராமத்தில் நிலவிவரும் தண்ணீர் பஞ்சத்தை உடனடியாக போக்க வேண்டும், அரசு கான்கிரீட் வீடுகளை முறையாக ஒதுக்கீடு செய்ய வேண்டும், கிராமம் முதல் கீரிமேடுவரை குண்டும், குழியுமாக உள்ள சாலையை தார் ச்சாலையாக அமைத்துத்தர வேண்டும்,  ஓடை வாய்க்காலை அரசூர் வரை மராமத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு எஸ்.அன்பழகன் தலைமை தாங்கினார்.  தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் முன்னாள் மாநில பொதுச் செயலாளர் டி.ஏழுமலை, விழுப்புரம் தெற்கு மாவட்டச் செயலாளர் ஏ.வி.ஸ்டாலின்மணி, மாவட்டத் தலைவர் ஆர்.தாண்டவராயன், மூத்த தலைவர் கே.எம்.ஜெயராமன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். சங்கத்தின் ஒன்றியச் செயலாளர் கே.சிவக்குமார், சிபிஎம் ஒன்றியச் செயலாளர் எஸ்.மணிகண்டன் உள்ளிட்ட பலர் பேசினர். ஆர்ப்பாட்டம் நடைபெற்றபோது அதிகாரிகள் யாரும் அங்கு இல்லாததால் ஆர்ப்பாட்டம் காத்திருப்பு போராட்டமாக அறிவிக்கப்பட்டது. இதனால் ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் இரண்டு பேரும் மற்றும் ஒன்றிய பணி மேற்பார்வையாளர் ஆகியோர் போராட்ட இடத்திற்கு  வந்து 100 நாள் வேலையை வழங்குவதாக உறுதியளித்து பட்டியல் தயாரித்து எடுத்துச்சென்றனர்.  உடன்பாடு ஏற்பட்டதால் போராட்டம் முடிவிற்கு வந்தது.