tamilnadu

img

கல்வராயன்மலை கோடை விழா ரத்தா...?

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கல்வராயன் மலையில்ஆண்டுதோறும் ஜூன் மாதத்தில் நடைபெறும் கோடை விழா மக்களவைத் தேர்தலில் ஆளும் கட்சியான அதிமுக படுதோல்வி அடைந்ததை ஒட்டி இந்த ஆண்டு நடைபெறுமா என சந்தேகம் எழுந்துள்ளது.தமிழகத்தில் உள்ள ஊட்டி,ஏற்காடு, ஏலகிரி, கல்வராயன்மலை உள்ளிட்ட மலைகளில் ஆண்டுதோறும் கோடை காலத்தின்போது தமிழக அரசால் கோடைவிழா நடத்தப்படுவது வழக்கம். இப்படி நடத்தப்படும் கோடை விழாக்களில் மாநில அமைச்சர்கள், அந்தந்த மாவட்டத்தின் அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்று பல்வேறுதுறைகளின் சார்பில் கண்காட்சிகள் மற்றும் மலர்க் கண்காட்சியும் நடைபெறும். அதே போல இந்த கோடை விழா நடைபெறும் நாட்களில் நடத்தப்படும் விழாக்களில் பொதுமக்களுக்கான பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்படுவது வழக்கம். தமிழக அரசின் சார்பில் மலைவாழ் மக்களுக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்படும்.இந்தாண்டு நீலகிரி மாவட்டம் ஊட்டி, ஏற்காட்டில் கோடை விழா என்பது கடந்த வாரத்தில் நடைபெற்றுள்ளது.

கனவாகவே சுற்றுலா மேம்பாடு...
தமிழ்நாட்டின் பெரிய மாவட்டமான விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெறும் கல்வராயன்மலை கோடை விழா என்பதுகடமைக்கு அல்லது ஒப்புக்கு நடத்தப்படுவதுபோல நடத்தப்படுகிறது. கல்வராயன் மலை கோடை விழாவிற்குசேலம், விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் வருகை தருவர். ஆனால் குடிநீர் கழிப்பறை தங்குமிட வசதி என எந்த அடிப்படை வசதிகளும் பெரிய அளவிற்கு ஏற்படுத்தப்படவில்லை. இருக்கும் வசதிகள் முறையாக பராமரிக்கப்படாமல் உள்ளன. விளையாட்டு போட்டிகளும், கண்காட்சிகளும் அதற்கே உரித்தான வகையில் நடத்தப்படாமல் வருடத்திற்கு இரண்டு நாட்கள் மட்டுமே இந்த கோடைவிழா பெயரளவுக்கு நடத்தப்படுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

பண்பாட்டைப் பாதுகாக்க...
சுற்றுலாத் தளங்களுக்கான பல்வேறு வசதிகளை கல்வராயன்மலையில் ஏற்படுத்தி இங்கிருக்கும் பெரியார் நீர்வீழ்ச்சி, படகு குழாம் உள்ளிட்ட சுற்றுலாதளங்களின் வசதிகளை மேம்படுத்துவது, மலை கிராமங்களுக்கு இடையே சாலை வசதிகளை ஏற்படுத்தி வெள்ளி மலையோடு இணைப்பது என்பதன் மூலம் கல்வராயன்மலையில் ஆண்டுதோறும் நடைபெறும் கோடை விழாவை கூடுதலான நாட்களுக்கு சிறப்பாக நடத்திட முடியும். அதன் மூலம் இங்கு வசிக்கும் கிட்டத்தட்ட 173 மலை கிராமங்களின் மலைவாழ் மக்களும் பல்வேறு வகைகளில் பலன் அடைய வாய்ப்புகள் உள்ளது. மலைவாழ் மக்களின் பண்பாடு,கலாச்சாரம், பழக்கவழக்கங்கள் உள்ளிட்டவற்றை பாதுகாத்திடவும் அதனை பிற பகுதி மக்கள் அறிந்து கொள்ளவும் வாய்ப்பு ஏற்படும்.

தேர்தல் தோல்வி காரணமா...?
வழக்கமாக மே மாதத்திலேயே விழுப்புரம் ஆட்சியர் அலுவலகம் மூலம் திட்டமிட்டு ஜூன் மாதத்தில் நடைபெற்று வரும் கல்வராயன் மலை கோடை விழா என்பது இந்த ஆண்டு நடைபெறுவது சந்தேகம் என்கின்றனர். ஏனென்றால் கல்வராயன்மலை அமைந்துள்ள சட்டமன்ற தொகுதியான சங்கராபுரத்திலும் அதேபோல தற்போது நடைபெற்று முடிந்த கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதியிலும் எதிர்க்கட்சியான திமுக வெற்றி பெற்றுள்ளது. கள்ளக்குறிச்சி சட்டமன்றத் தொகுதியிலும் அதிமுகவில் வெற்றிபெற்ற எம்எல்ஏ பிரபு தினகரன் அணியில் உள்ளார்.எனவே கோடைவிழா நடத்தப்பட்டால் சட்டமன்ற, மக்களவை உறுப்பினர்கள் என்றவகையில் இவர்களது பெயர் மற்றும் பங்கேற்பு என்பது இருக்கும்என்பதால் தேர்தலை காரணம் காட்டி இந்த ஆண்டு கல்வராயன்மலை கோடைவிழாவை ரத்து செய்து விடலாம் என்ற எண்ணத்தில் மாவட்ட அமைச்சரும், விழுப்புரம் தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

- எஸ்.சித்ரா.