போக்சோ சட்டத்தில் ஆட்டோ ஓட்டுனர் கைது
அருப்புக்கோட்டை, ஜூன்.4-விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் 8 வயதுசிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஆட்டோ ஓட்டுனரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். அருப்புக்கோட்டை, சொக்கலிங்கபுரம் காமாட்சியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன்(45). ஆட்டோ ஓட்டுனராக உள்ளார். இந்நிலையில், இவரதுவீட்டின் அருகே உள்ள 8 வயது சிறுமிக்கு அடிக்கடி பாலியல் தொந்தரவு கொடுத்ததோடு, வெளியே கூறினால், கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்தாராம். இதுகுறித்து அச்சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர், அருப்புக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில்புகார் செய்தனர். அதன்பேரில், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார், ராதாகிருஷ்ணனை கைது செய்தனர்.
கணவர் இறந்த சோகத்தில் மனைவி தற்கொலை
தூத்துக்குடி, ஜூன் 4-தூத்துக்குடி முத்தையாபுரம் அருகே கணவர் இறந்த 2ஆவது நாளில் மனைவி தூக்கிட்டுத் தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது..தூத்துக்குடி முத்தையாபுரம் அருகே தங்கம்மாள்புரம், அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஜெயமுருகன். இவரது மனைவி ராமலெட்சுமி (50). இந்த தம்பதியருக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்னர் ஜெயமுருகன் உடல் நலக்குறைவால் இறந்து விட்டார். கணவன் இறந்த துக்கத்தில் இருந்து வந்த ராமலெட்சுமி ஞாயிறு இரவு தனது வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து முத்தையாபுரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.