tamilnadu

img

அடிப்படை வசதி கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

விழுப்புரம், பிப். 15- விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் தாலுக்காவிற்கு உட்பட்ட சென்னகுனம், கூடலூர், குயவன் காடுவெட்டி, காரணைபெருச்சானூர் ஆகிய 4 ஊராட்சிகளில் நூறு நாள்வேலை, சாலைவசதி, குடிநீர் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் செய்து கொடுக்காமல் புறக்கணிக்கும் அதிகாரிகளின் அலட்சியப் போக்கைக் கண்டித்து அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் திருக்கோவிலூர் அருகே உள்ள ஆயந்தூரில் வெள்ளியன்று (பிப். 14)  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  ஆர்ப்பாட்டத்திற்கு விதொச வட்ட துணைத்தலைவர் எம்.நாராயணன், விச கிளை செயலாளர் எஸ்.சேவா ஆகியோர் தலைமை தாங்கினர். ஆர்ப்பாட்டத்தில் மாநில பொதுச்செயலாளர் வி.அமிர்தலிங்கம் கலந்து கொண்டு பேசுகையில், இந்த கிராம மக்களுக்கு தொடர்ந்து நூறுநாள் வேலை வழங்க வேண்டும், கூலி பாக்கியை உடனே வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், தலித் பகுதியில் கேட் வால்வு அமைத்து தினசரி குடிநீர் வழங்க வேண்டும், நிரந்தர கிராம நிர்வாக அலுவலர், தெருவிளக்கு, சாலை, கழிவுநீர் வாய்க்கால், விளையாட்டு மைதானம் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். ஆர்ப்பாட்டத்தில் விதொச மாவட்டத் தலைவர் வி.அர்ச்சுணன், தவிச மாவட்டச் செயலாளர் ஆர்டி.முருகன், தலைவர் பி.சிவராமன், வட்டச் செயலாளர் ஓ.கே.முருகன், தலைவர் எம்.ஸ்ரீதர், செயலாளர் ஏ.ஏழுமலை, பொருளாளர்கள் பி.வெங்கடேசஷ், எம்.ராமலிங்கம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.