விழுப்புரம், மே 31- விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா பொது முடக்கத்திலும் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களுக்கு தற்போது விவசாயிகள் அறுவடை செய்யும் நெல், எள், உள்ளிட்ட பல்வேறு தானியங்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. மாவட்டத்தில் இயங்கி வரும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில், பொன்னி உள்ளிட்ட சன்ன ரகங்கள் மூட்டை ரூ.1,800 முதல் ரூ.2,000 வரையிலும், இதர ரகங்கள் ரூ.1,500க்கும் கொள்முதல் செய்யப்படுகின்றன. ஆனால் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில், பொன்னி நெல் உள்ளிட்ட சன்னரகம் (75 கிலோ) மூட்டை ரூ.1,600-க்கும், இதர ரகங்கள் ரூ.1,300க்கும் வியாபாரிகளால் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.
குமளம், முட்டத்தூர், அனந்தபுரம், வெள்ளிமேடுப்பேட்டை உள்ளிட்ட 13 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் இயங்கி வருகின்றன. இவற்றில், கிளியனூர், அரகண்டநல்லூர், சித்தலிங்கமடம் ஆகிய நேரடி நெல் கொள்முதல் மையங்கள் நெல் வரத்தின்றி மூடப்பட்டுள்ளன. கொரோனா பாதிப்பின் அச்சத்திலும், கோடை வெயிலிலும் விளைவித்து எடுத்து வரும் நெல்லுக்கு சரியான விலை வழங்கப்படுவதில்லை என்றும், இதை விற்பனைக் கூட அதிகாரிகள் கண்காணிப்பதில்லை என்றும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர். மேலும் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களுக்கு விற்பனைக்காக கொண்டு வரப்படும் மூட்டைகளுக்கு சாக்கு மாற்றுவதற்கு ரூ.10, எடைபோடுவதற்கு ரூ.30 என விவசாயிகளிடம் அடாவடியாக வசூலிக்கப்படுவதாக விவசாயிகள் தரப்பில் கூறப்படுகிறது.
ஒப்பந்த எடைத் தொழிலாளர்கள், சாக்கு
இதற்கென தனியாக கூலி வழங்கப்படும் நிலையில், விவசாயிகளை மிரட்டி கட்டாய வசூல் செய்து வருவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. விக்கிரவாண்டி, திண்டிவனம் உள்ளிட்ட விற்பனைக் கூடங்களில் மூட்டைக்கு ரூ.20 வசூலிக்கும் நிலையில், விழுப்புரத்தில் மட்டும் ரூ.40 வசூலிக்கப்படுகிறது. இதே போல், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களிலும் மூட்டைக்கு ரூ.40 வசூலிக்கப்படுகிறது. இதுகுறித்து விவசாயிகள் குறைதீர் கூட்டங்களில் பலமுறை மாவட்ட நிர்வாகத்திடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என விவசாயிகள் கூறுகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் அனைத்து ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களுக்கும் விவசாயிகள் கொண்டு வரும் விளை பொருட்களுக்கு சரியான விலையில் வியாபாரிகள் கொள்முதல் செய்கிறார்களா என்பதை கண்காணித்து, அங்கு நடக்கும் முறைகேடுகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.