விழுப்புரம், பிப். 13- தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போம் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் காணை ஒன்றியத்திற்கு உட்பட்ட அரியலூர் திருக்கை கிராமத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் சுமார் 25 பேருக்கு 100 நாள்வேலை கடந்த பல மாதங்களாக வழங்கப்பட வில்லை. இதுகுறித்து மாவட்டச் செயலாளர் ஏ.கிருஷ்ணமூர்த்தி, மாநிலக் குழு உறுப்பினர் வி.ராதாகிருஷ்ணன் ஆகியோர் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுடன் காணை வட்டார வளர்ச்சி அலுவலகம் சென்றனர். அங்கு வட்டார வளர்ச்சி அலுவலர் ஜோசப் கிருத்துராஜை சந்தித்து 100 நாள் வேலை வழங்குமாறு கோரினார். இதையடுத்து அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் 100 நாள் வேலை வழங்கப்படும் என வட்டார வளர்ச்சி அலுவலர் உறுதியளித்தார். இதில் மாவட்டத் தலைவர் சவுந்தரராஜன், மாவட்டக் குழு உறுப்பினர் குணசேகரன், கிளை செயலாளர்கள் வி.முருகன், சி.முருகன், உட்பட பலர் கலந்து கொண்டனர்.