tamilnadu

img

பசியின் கொடுமை: வடமாநில இளைஞர் பலி

கும்மிடிப்பூண்டி அருகே சோகம்

திருவள்ளூர், மே 19- ஊரடங்கு உத்தரவால் கும்மிடிப்பூண்டி அருகே பசியின் கொடுமையால் வடமாநில இளைஞர் ஒருவர் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை அடுத்த கவரப்பேட்டை ஒட்டியுள்ள சென்னை- கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் ஊரடங்கு காரணமாக சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பணியாற்றும் வடமாநில இளைஞர்கள் சாலை வழியாக ஆயிரக்கணக்கானோர் ஒடிசா, பீகார், ஜார்க்கண்ட் மாநிலங்களுக்கு நடந்தும், சைக்கிள்களிலும் பயணித்து வருகின்றனர்.

இந்நிலையில் வடமாநில  இளைஞர்களை தமிழக ஆந்திர எல்லையான பனங்காடு பகுதியில் தடுத்து நிறுத்தி தடியடி  நடத்தியும், அவர்களை இழிவு படுத்துகின்றனர்.  இதைத் தொடர்ந்து செவ்வாயன்று (மே19)  அதிகாலை சென்னை போரூரிலிருந்து கட்டுமான தொழிலில் ஈடுபட்டு வந்த ஒடிசா மாநிலத்தை சேர்ந்த ராம்திவாஸ் (44) என்ற  இளைஞர்  நடந்து வந்துள்ளார். உணவில்லாமல் கவரைப்பேட்டை  பஜார் பகுதியில் வந்தபோது பசி மயக்கத்தில் உடல் சோர்வு ஏற்பட்டு கடை அருகே மயங்கி விழுந்துள்ளார். இதை அறிந்த அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்று உணவு தண்ணீர் கொடுக்க எழுப்பி உள்ளனர். ஆனால், அவர் உடல் அசைவு ஏதும் இல்லாததால் அருகே இருந்த மருத்துவரை அழைத்து வந்த பொதுமக்கள் பரிசோதனை செய்தனர். அப்போது, அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர் தெரிவித்துள்ளார். இத்தகவலை அறிந்த கவரைப்பேட்டை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து அந்த இளைஞரின் உடலை கைப்பற்றி பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு  அனுப்பிவைத்தனர். பசியின் கொடுமையால் வடமாநில இளைஞர் ஒருவர் உயிரிழந்தது கும்மிடிப்பூண்டி பகுதியில்  பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.