tamilnadu

img

மேட்டூர் அணை திறப்பு

மேட்டூர்,ஆக.13- மேட்டூர் அணை நீர் மட்டம் 100 அடியைக் கடந்துள்ள நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பாசனத்துக்காக செவ்வாயன்று அணையை திறந்து வைத்தார்.  கர்நாடகப் பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் அங்குள்ள அணைகள் நிரம்பி வருகின்றன. இதனால் கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டதால் மேட்டூர் அணை நீர்மட்டம் 100 அடியை கடந்துள்ளது. இந்நிலையில் செவ்வாயன்று முத லமைச்சர் எடப்பாடி பழனிசாமி பாசனத்துக்காக அணையிலிருந்து தண்ணீரை திறந்து வைத்தார். மேட்டூர் அணை 85-வது முறையாக பாச னத்துக்கு திறக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக வினாடிக்கு 3 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இது படிப்படியாக வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி வரை அதிகரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் பேசுகையில்,  மேட்டூர் அணை திறக்கப்பட்டுள்ளதால் மொத்தமாக 16.05 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும். கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய்களில் 137 நாட்களுக்கு தினமும் தண்ணீர் திறக்கப்படும் என்பதால் ஈரோடு, சேலம் மாவட்ட விவசாய நிலங்களும் பாசனம் பெறும்.விவசாயிகள் தண்ணீரை சிக்கனமாகவும், முறை வைத்தும் பயன்படுத்த வேண்டும். கர்நாடகாவில் 2 முக்கிய அணைகளும் நிரம்பிவிட்டதால் அவர்கள் தண்ணீரை திறந்தே ஆக வேண்டிய நிலை நிலவு வதாகவும் மழை நீர் வீணாகாமல் இருக்க மேட்டூர் - கொள்ளிடம் இடையே மேலும் 3 தடுப்ப ணைகள் உட்பட 5 தடுப்பணைகளை கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும்  முதல்வர் தெரிவித்தார்.

கடைமடைக்கு தண்ணீர்

காவிரி நீரை அதிகளவில் கொள்ளிடத்தில் திறந்து கடலில் வீணாக்காமல், பாசனம் மேற்கொள்ளும் கடைமடை பகுதிக்கு செல்லும் வகையில் தண்ணீரை திறந்து விட வேண்டும் என தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரிடம் செவ்வாயன்று அனைத்து கட்சியினர் முறையிட்டனர். தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்களவை உறுப்பினர் எஸ்.எஸ்.பழனி மாணிக்கம், மாநிலங்களவை உறுப்பினர் மு.சண்முகம், எம்எல்ஏக்கள் துரை.சந்திரசேக ரன், கோவி.செழியன், டிகேஜி.நீலமேகம் உள்ளிட்ட அனைத்து கட்சியினர், ஆட்சியர் ஆ.அண்ணாதுரையை நேரில் சந்தித்து கோரிக்கை மனுவை வழங்கினர். பின்னர் செய்தியாளர்களிடம் எஸ்.எஸ்.பழனி மாணிக்கம் கூறியதாவது: மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடியை தாண்டிய பின்னர் டெல்டா  பாசனத்துக்கு திறக்க வேண்டும் என ஒருங் கிணைந்த தஞ்சாவூர் மாவட்டத்தினைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகள், அனைத்து கட்சியினர் இரு தினங்களுக்கு முன் கூடி ஆலோசனை செய்து  முடிவெடுத்து தமிழக அரசுக்கு வேண்டுகோளாக விடுத்தோம். அதனை ஏற்று தற்போது மேட்டூர் அணை 100 அடியை தாண்டிய பின் திறக்கப்பட்டுள்ளது.

காவிரி ஆற்றில் தற்போது அதிகளவு தண்ணீர் வருகிறது. இந்த தண்ணீரை கொள்ளிடம் ஆற்றில் திருப்பி, வீணாக கடந்த காலங்களில் கடலில் கலந்தது போல் இல்லாமல், வெண்ணாறு, வெட்டாறு, கல்லணைக் கால்வாய் உள்ளிட்ட ஆறுகளில் அதிகளவு திறந்து கடைமடைப் பகுதிக்கு தண்ணீர் விரைந்து செல்ல உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும் என ஆட்சியரிடம் எடுத்துரைத்துள்ளோம். இதற்காக காவிரி டெல்டா மாவட்டங்களில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணி, குடி மராமத்துப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். பல இடங்களில் இந்த பணிகள் 50 சதவீதமும், இன்னும் பல இடங்களில் பணிகள் தொடங்கப் படாமல் உள்ளது. அந்த பணிகளை தொடங்காமல் அந்த நிதியை விரயம் செய்யக்கூடாது. மேட்டூர் அணை திறக்கப்பட்டுள்ள ஆக.13 ஆம் தேதி முதல் அந்த அணை மூடப்படும் ஜனவரி 28 ஆம் தேதி வரை நீர் பாசன  ஆலோசனை களுக்கான இணை ஆணையர் (தனி அலுவலர்) தஞ்சாவூரில் முகாமிட்டு களநிலவரங்களை அறிந்து நீர் நிர்வாகத்தை அரசின் ஆலோசனை யோடு நடைமுறைப்படுத்திட வேண்டும். காவிரி  நீரை முறையாக கடைமடைப் பகுதி  வரை கொண்டு செல்ல தமிழக அரசு எடுக்கும் நடவடிக்கை களுக்கு டெல்டா மாவட்டங்களில் உள்ள அனைத்து  அரசியல் கட்சியினர், விவசாய சங்கத்தினர் முழு ஆதரவை அளிப்போம்என்றார். இதில், மாவட்ட செயலாளர்கள் சு.கல்யாண சுந்தரம் (திமுக), கோ.நீலமேகம் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்), மு.அ.பாரதி(இந்திய கம்யூனிஸ்ட்), கோ.உதயகுமார்(மதிமுக), என்.வி.கண்ணன் (தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்), காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் டி.ஆர்.லோகநாதன், பி.ஜி.ராஜேந்திரன், ஐஜேகே மாவட்ட தலைவர் சிமியோன்சேவியர்ராஜ் மற்றும் விவசாயிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.