சிபிஎம் வலியுறுத்தல்
மதுரை, ஏப்.30- கொரோனா நிவாரணமாக வழங்கும் ரேசன் பொருட்கள் மதுரை மாவட்டத்தில் அனைவருக்கும் கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக கட்சியின் மதுரை புறநகர் மாவட்டச் செயலாளர் சி.ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை:- கொரோனா நோய்க்கு முன்னுரிமை அளித்து மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்படுகிறது. அதே நேரத்தில் வழக்கம் போல் மற்ற நோய்களுக்கு சிகிச்சைபெற வரும் நோயாளிகளுக்கும் தனிக் கவனம் செலுத்தி சிகிச்சையளிக்க வேண்டும்.
முறைசாராத் தொழிலாளர்களுக்கு நிவாரணம் அறிவித்து 40 நாட்கள் ஆகியும் பெரும்பாலானோர்க்கு இன்னும் நிவாரணம் கிடைக்ககவில்லை. இந்த நிலையில் இரண்டாம் கட்ட நிவாரணமும் அறிவிக்கப்பட்டுள்ளது. நிவாரணங்கள் அனைவருக்கும் கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டும். ரேஷன் கடைகளில் வழங்கப்படும் அரிசி மிகவும் மோசமாக உள்ளது என்ற குற்றச்சாட்டு இன்றைக்கும் மக்கள் மத்தியில் உள்ளது. ரேஷன் கடைகளில் தரமான அரிசி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பல கடைகளில் ரேஷன் பொருட்கள் "வழக்கம் போல் இல்லை" என்கின்றனர். மதுரை மாவட்டத்திற்கு எவ்வளவு அரிசி, பருப்பு, எண்ணெய், கோதுமை, சீனி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்ற விவரத்தை மாவட்ட நிர்வாகம் பகிரங்கமாக அறிவிக்க வேண்டும்.
100 நாள் வேலையை சமூக இடைவெளியுடன் உடனடியாகத் தொடங்க வேண்டும். அவர்களுக்கு உரிய சம்பளம் கிடைப்பதையும் உறுதிப்படுத்த வேண்டும். கொரோனா கால நிவாரணமாக ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும்.