tamilnadu

img

சரக்கு கையாளுவதில் வ.உ.சி துறைமுகம் சாதனை சரக்குபெட்டக பரிமாற்ற முனையமாக்க முயற்சி

தூத்துக்குடி, செப். 7- வ.உ.சிதம்பரனார் துறைமுகம் ஆகஸ்ட் மாதம் 2019இல் சரக்கு கையாளுவதில் 30.93 சதவிகிதம் வளர்ச்சி கண்டு புதிய சாதனை படைத்துள்ளது. தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகம்  இந்த நிதியாண்டு  ஆகஸ்ட் மாதம்; 34.29  லட்சம் டன் சரக்குகளை கையாண்டு கடந்த நிதியாண்டின் ஆகஸ்ட் மாத்தில் கையாண்ட சரக்குகளை ஒப்பிடுகையில் 30.93 சதவிகிதம் வளர்ச்சி கண்டுள்ளது. இந்த நிதியாண்டு ஆகஸ்ட் மாதம் வரை 15.15 மில்லியன் டன் சரக்குகளை கையாண்டு கடந்த நிதியாண்டை ஒப்பிடுகையில் 7.29 சதவிகிதம் வளர்ச்சி அடைந்துள்ளது. இதன் மூலம் இந்திய பெருந்துறைமுகங்களுள் சரக்குகள் கையாளுவதின் வளர்ச்சி விகிதத்தில் வ.உ.சிதம்பரனார் துறைமுகம் மூன்றாவது இடத்தை பெற்றுள்ளது. இந்த வளர்ச்சிக்கு முக்கியமாக தொழிலகக் கரி, சரக்குபெட்டகங்கள், உரம், ராக் பாஸ்பேட், கந்தக அமிலம், பாமாயில் மற்றும் மரத்தடிகள் ஆகியவை அதிகமாக இறக்குமதி செய்யப்பட்டமையாலும், கந்தக செறிவுகள், இயந்திரங்கள் மற்றும் கிரைனேட்டுகள் போன்றவை அதிகமாக ஏற்றுமதி செய்யப்பட்டமையாலும் இந்த வளர்ச்சி கண்டுள்ளது.

மேலும் துறைமுகம் சரக்குபெட்டகங்கள் கையாளுவதில் தக்சின் பாரத் சரக்குபெட்டக முனையம் மற்றும் பி.எஸ்.ஏ. சிக்கால் சரக்குபெட்டக முனையம் ஆகிய சரக்குபெட்டக முனையங்கள் ஒரே மாதத்தில் 80,474 டிஇயுக்களை (ஆகஸ்ட் மாதம்) கையாண்டு  புதிய சாதனை படைத்தது மட்டுமல்லாமல் கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் 27.20 சதவிகிதம் வளர்ச்சி கண்டுள்ளது. வ.உ.சிதம்பரனார் துறைமுக பொறுப்புக் கழகத் தலைவர் ராமசந்திரன், இச்சாதனைக்கு மிகவும் ஈடுபாடுடன் உழைத்த அனைத்து துறைமுக உபயோகிப்பாளர்கள், கப்பல் முகவர்கள், அனைத்து அதிகாரிகள், ஊழியர்கள் அனைவருக்கும் தனது பாராட்டுக்களை தெரிவித்தார். மேலும் அவர் இச்சாதனை புரிவதற்கு முக்கியமான காரணியாக துறைமுக உபயோகிப்பாளர்களின் தேவையை அறிந்து அதற்குரிய நடவடிக்கைகளை உடனுக்குடன் பரிசீலித்து செயல்படுத்தி வருகிறது என்று கூறினார். மேலும் அவர் துறைமுகத்தில் சரக்குபெட்டகங்களின் வளர்ச்சி அதிகப்படியில் இருப்பதாலும் பல்வேறு வளர்ச்சி பணிதிட்டங்கள் மூலம் வ.உ.சிதம்பரனார் துறைமுகம் அதிவிரைவில் ஒரு சரக்குபெட்டக பரிமாற்ற முனையமாக மாறுவதற்கான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.