tamilnadu

img

வங்கிகளில் ரூ.40,859 கோடி பணப்பற்றாக்குறை - புளூம்பெர்க் தகவல்


மக்களவை தேர்தலை நடத்தை விதிமுறை அமலில் உள்ள நிலையில், மத்திய மற்றும் மாநில அரசுகள் நலத்திட்டங்களுக்கு செலவிடும் பணத்தை குறைத்துக்கொண்டு அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே வங்கிகளில் இருந்து பணத்தை எடுப்பதால் பணப்புழக்கம் குறைந்துள்ளதாகவும், வங்கிகளில் பணப்பற்றாக்குறை ரூ.40,859 கோடியாக அதிகரித்துள்ளதாக புளூம்பெர்க் நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரிவித்துள்ளது. 

கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் ரொக்க கையிருப்பானது சுமார் ரூ.15,857 கோடியாக இருந்துள்ளது. இதே நிலை தொடர்ந்து நீடிக்குமானால், இதன் தாக்கம் வங்கிகளின் வட்டி விகித பரிமாற்றத்திலும் எதிரொலிக்கக்கூடும் என்றும் புளூம்பெர்க் தெரிவித்துள்ளது. பணப்புழக்கத்தை அதிகரிக்கும் பொருட்டு மத்திய ரிசர்வ் வங்கி நடப்பு ஆண்டில் கடந்த பிப்ரவரி மாதத்திலும் பின்னர் ஏப்ரலிலும் வங்கிகளக்கு அளிக்கும் கடனுக்கான வட்டிவிகிதத்தை குறைத்து குறிப்பிடத்தக்கது.

பொதுவாக அனைத்து வங்கிகளும் தங்களின் தினசரி பணப்பரிமாற்றத்தில், அதாவது வாடிக்கையாளர்கள் தங்களின் கணக்குகளில் செய்யும் ரொக்க டெபாசிட் (Cash Deposit) மற்றும் ரொக்க எடுப்புகள் (Cash Withdrawal) போக மீதமுள்ள ரொக்க இருப்புகளை (Surplus Cash) ரிசர்வ் வங்கிகளுக்கு மாற்றிவிடுவது வழக்கம்.

சில நாட்களில் ரொக்க டெபாசிட்களை விட ரொக்க எடுப்புகள் (Withdrawal) அதிகமாக இருக்கும்போது வங்கிகளின் ரொக்க இருப்பு பற்றாக்குறையாக (Shortage or deficit) மாறிவிடும். இதை சரிக்கட்ட ரிசர்வ் வங்கியிடம் இருந்து கடனாக பெற்றுக்கொள்ளும். இதுதான் நடைமுறையாக இருந்து வருகிறது. இதற்கு வங்கிகள் வட்டி அளிக்கின்றன.

தற்பொழுது மக்களவை தேர்தல் உச்ச கட்டத்தை எட்டியுள்ளது. இருந்தாலும் தேர்தல் நடைமுறை கடந்த மார்ச் மாதமே தொடங்கிவிட்டதால், நன்னடத்தை விதிகள் அமலில் உள்ள சூழலில் மத்திய மற்றும் மாநில அரசுகள் அத்தியாவசியத் தேவைகளான சம்பளம் மற்றும் அன்றாடத் தேவைகளுக்கு மட்டுமே வங்கிகளில் இருந்து பணத்தை எடுக்கின்றன.

நன்னடத்தை விதிகளின் காரணமாக மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்த முடியாத நிலையிலும், ரொக்கப் பரிமாற்றமும் அடியோடு குறைந்துவிட்டது. இதனால் அரசு கருவூலகத்திலிருந்து வங்கிகளுக்கு செல்லும் ரொக்கமும் தடைப்பட்டுள்ளது. இதனால் வங்கிகளிலும் பணப்புழக்கம் அடியோடு குறைந்துவிட்டது

இது குறித்து எஸ்பிஐ வங்கியின் தலைமை பொருளாதார நிபுணர் சவும்யா கந்தி கோஷ் கூறுகையில், மத்திய அரசின் செலவினங்கள் அனைத்தும் கடந்த ஏப்ரல் மாதத்திலேயே முடக்கப்பட்டுவிட்டதால் அதன் தாக்கம் வங்கிகளிலும் எதிரொலித்து அதிக அளவில் பணப்பற்றாக்குறை ஏற்பட்டுவிட்டது. வங்கிகளின் ரொக்க பரிமாற்றத்தை சரி செய்யும் விதமாக ரிசர்வ் வங்கி எடுத்த தொடர் முயற்சிகளினால் தற்போது நிலைமை கொஞ்சம் கொஞ்சமாக சீரடைந்து வருகிறது. நிலைமை சகஜமாக இன்னும் 2 வாரங்கள் வரை பொறுத்திருக்க வேண்டியது அவசியமாகும். இந்த மாத இறுதியில், தேர்தல் விதிமுறைகள் முடிந்தவுடன் ஜூன் மாதத் தொடக்கத்தில் இருந்து வங்கிகளின் பணப்புழக்கம் அதிகரித்து பற்றாக்குறை நீங்கும் என்று தெரிவித்துள்ளார்.

இது குறித்து, கோட்டக் மஹிந்த்ரா வங்கியின் மூத்த பொருளாதார நிபுணர் உபஷ்ணா பரத்வாஜ் கூறுகையில், ஏப்ரல் மாதத்தில் வங்கிகளுக்கு ஏற்பட்ட ரொக்கப் பற்றாக்குறை என்பது முன் எப்போதும் இல்லாத அளவில் உள்ளது. இந்த நிலை மேலும் இரண்டு வாரங்களுக்கு நீடிக்குமானால், நிலைமை இன்னும்கூட மோசமாகலாம். அதோடு ஜிஎஸ்டி வருவாயும் இல்லாத நிலையில் அரசாங்க செலவினங்களுக்கு திண்டாடவேண்டியது இருக்கும். அடுத்த மாதத் தொடக்கத்தில் மத்திய அரசின் வழக்கமான செலவினங்கள் தொடங்கினால் வங்கிகளின் பணப் பற்றாக்குறை நீங்கி பழைய நிலைமைக்கு திரும்பும் என்று தெரிவித்தார்.

கடந்த ஏப்ரல் மாதத்தில் வங்கிகளின் ரொக்க இருப்பு அதளபாதாளத்திற்கு சென்றுள்ளது. வங்கிகளின் ரொக்க இருப்பு ஏப்ரலில் காணாமல் போய் ரொக்கப் பற்றாக்குறையாக 1.49 லட்சம் கோடி ரூபாயாக கூடிவிட்டது. இதை முன்கூட்டியே உணர்ந்து, ரிசர்வ் வங்கியும் பணப்புழக்கத்தை அதிகரிக்கும் நோக்கில் கடந்த பிப்ரவரி மற்றும் ஏப்ரல் மாதங்களில் வட்டி விகிதத்தை குறைத்தது. பின்னர் படிப்படியாக குறைந்து ஏப்ரல் இறுதி நாளில் 79 ஆயிரத்து 406 கோடி ரூபாய் உபரியாக உயர்ந்தது. இது மேலும் அதிகரித்து மே 13-ஆம் தேதியன்று ரொக்க உபரியாக 44 ஆயிரத்து 315 கோடி ரூபாயாக உயர்ந்தது. 

ரொக்கப் புழக்கத்தை அதிகரிக்கும் பொருட்டு கடந்த வாரத்தில் ரிசர்வ் வங்கி வெளிச் சந்தையில் சுமார் 70ஆயிரத்து 226 கோடி ரூபாய் மதிப்புள்ள டாலர்களை விற்று பணமாக்கி வங்கிகளின் புழக்கத்திற்கு விட்டது. இதன்பின்பு பணப்புழக்கம் சீரடைந்து தற்போது உபரி ரொக்க இருப்பாக 44ஆயிரத்து 315 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.