1951 - உலகின் முதல் பாரம்பரிய ரயில்வேயாக, டேலில்லின் ரயில்வே, வேல்சில் செயல்படத் தொடங்கியது. தன்னார்வலர்களால் இயக்கப்படும் உலகின் முதல் ரயில்வேயும் இதுதான். பிரிட்டன் நாடாளுமன்றம் சட்டமியற்றி அனுமதித்த முதல் நேரோ-கேஜ் நீராவி என்ஜின் பயணிகள் ரயிலும் இதுதான். கற்பலகைகளை எடுத்துச் செல்வதற்காகத் திட்டமிடப்பட்டு, கற்பலகைகள், பயணிகளுடன் 11.67 கி.மீ. தொலைவுக்கு 1865இலிருந்து இது இயங்கத் தொடங்கியது. இப்பகுதியில் கற்பலகை வெட்டியெடுக்கும் தொழில் 1830களில் தொடங்கினாலும், செதுக்கப்பட்ட பலகைகள் குதிரைகளில் எடுத்துச் செல்லப்பட்டு, பின் படகுகள்மூலம் ஆற்றில் பயணித்து, கப்பல்களுக்கு எடுத்துச் செல்லப்படும். 1861இல் அமெரிக்க உள்நாட்டுப்போர் தொடங்கியதும், பருத்தி வரவு குறைந்தது. அதனால் ஆலை உரிமையாளர்களில் சிலர் கற்பலகை தயாரிக்கத் தொடங்கினர். அவ்வாறு தொடங்கிய வில்லியம் மெக்-கான்னல், ப்ரைன் இகில்வைசிலிருந்த குவாரியிலிருந்து, அருகாமை ரயில்பாதைகளிருந்த டைவின்வரை உருவாக்கியதே இந்த ரயில்பாதை. இப்பாதையில், தண்டவாளங்களுக்கிடையிலுள்ள வழக்கத்திற்கு மாறான இரண்டே-கால் அடி இடைவெளி, உலகிலேயே இன்னும் 3 ரயில்வேக்களில்தான் (இங்கிலாந்தில்தான்) உள்ளது. இப்பாதையை அமைக்கும்போது, இது செல்லவேண்டியிருந்த மேம்பாலங்கள் போதுமான அகலத்துடன் இல்லை. அவற்றுக்கடியில் வண்டி நிற்க நேர்ந்தால், பயணிகள் இறங்க இடம் வேண்டும் என்பதால், ஒருபுறம் அதிக இடம்விட்டு தண்டவாளம் அமைக்கப்பட்டது. அதனால், இதில் இயக்கப்பட்ட பயணிகள் வண்டிக்கு ஒருபுறம் மட்டுமே கதவு அமைக்கப்பட்டு, இன்னும் அவ்வாறே தொடர்கிறது. இப்பாதையையும் உள்ளடக்கிய கிராண்ட் டூர் என்னும் கோரிஸ் ரயில்வேயின் சுற்றுலா 1886இலிருந்து 1930வரை நடத்தப்பட்டது. 1946இல் குவாரி மூடப்பட்டதையடுத்து, 1950இல் இந்த ரயில்வேயும் மூடப்பட்டது. பாரம்பரியச் சின்னங்களில் ஆர்வமுள்ள எழுத்தாளர் டாம் ரோல்ட் இதுபற்றி பர்மிங்ஹாம் போஸ்ட் இதழில் எழுத, எதிர்பார்த்ததைவிட உதவிகள் குவிந்தன. நன்கொடைகள்மூலம் இதனை வாங்கி, அனைத்துப் பணிகளையும் தன்னார்வலர்களே செய்து, 60 ஆண்டுகளுக்கும்மேலாக இயக்கிக்கொண்டிருக்கின்றனர். உலகம் முழுவதும் பல்வேறு பாரம்பரிய ரயில்களுக்கு இதுவே தொடக்கமாக அமைந்தது என்றால் மிகையல்ல.அறிவுக்கடல்