tamilnadu

img

உலக வரலாற்றையும் ஐரோப்பிய தத்துவங்களையும் இளைஞர்கள் படிக்க வேண்டும் : வே.மீனாட்சி சுந்தரம்

சென்னை, பிப். 10 - மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தோழர் வே.மீனாட்சி சுந்தரம் எழுதிய “முரட்டு இளைஞன் மார்க்ஸ் மூலதன அறிஞனான கதை” நூல் வெளியீட்டு விழா சென்னை கேரள சமாஜத்தில் நடைபெற்றது. சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் ஆர்.பத்ரி தலைமையில் நடந்த இந்நிகழ்வில் அரசியல் மற்றும் இலக்கிய செயல்பாட்டாளர்கள், இளைஞர்கள் கலந்துகொண்டனர்.  மார்க்சிய சிந்தனைகள் வெறும் ஆவணங்கள் அல்ல!  விழாவில் தலைமையுரையாற்றிய ஆர்.பத்ரி, மார்க்சியம் என்பது வெறும் ஆவணம் அல்ல, உயிருள்ள தத்துவம் என்றார். மார்க்ஸின் வாழ்க்கை குறித்த சுவாரஸ்யமான தகவல்களை இந்நூல் கொண்டுள்ளதாக பேச்சாளர்கள் சுட்டிக்காட்டினர். தற்போதைய சூழலில் முதலாளித்துவம் முட்டுச்சந்தில் சிக்கியுள்ளதாகவும், சுரண்டலற்ற சமூகத்திற்கு மார்க்சியமே சிறந்த வழிகாட்டி என்றும் பத்ரி குறிப்பிட்டார்.  தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன் பேசுகையில், 30 இடைக்குழுக்களில் தலா 50 பேருக்கு இந்நூலை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார். வாசகர் வட்டங்கள் அமைத்து விவாதங்கள் நடத்தவும், 5,000 பிரதிகளை 15 மையங்கள் வழியாக விநியோகிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.  இளைஞர்கள் கூட்டாக படித்து விவாதிக்க வேண்டும்  நிகழ்வில் பேசிய இளைஞர் பிரதிநிதிகள், வாசிப்பும் தேடலும் இருந்தால் புதிய மார்க்ஸ்கள் உருவாக முடியும் என்றனர். தலைவர்களை புனிதப்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்றும், இளைஞர்கள் கூட்டாக படித்து விவாதிப்பது அவசியம் என்றும் வலியுறுத்தினர்.  நிறைவுரையில் நூலாசிரியர் வே.மீனாட்சி சுந்தரம், இளைஞர்கள் உலக வரலாறு மற்றும் ஐரோப்பிய தத்துவங்களை ஆழமாக படிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். மாணவர் சங்கம், வாலிபர் சங்கம் ஆகியவை போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என்றும், விமர்சனங்களை வரவேற்பதாகவும் தெரிவித்தார். மரணம் வரை தொழிலாளி வர்க்கத்திற்காக எழுதிக்கொண்டே இருப்பேன் என உறுதியளித்தார்.  நிகழ்வில் மத்திய சென்னை மாவட்டச் செயற்குழு உறுப்பினர் இரா.முரளி வரவேற்புரை வழங்கினார். பாரதி புத்தகாலய பதிப்பாளர் நாகராஜன் நன்றியுரை கூறினார்.