tamilnadu

img

‘கருத்துப்போருக்கு தேவையான ஆயுதங்களை அளித்துவிட்டே யெச்சூரி மறைந்துள்ளார்

சென்னை, நவ.12 - இந்திய சமூக விஞ்ஞானக் கழகம் சார்பில்,  சீத்தாராம் யெச்சூரி மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், அவரது “இந்து ராஷ்டிரம்  என்றால் என்ன?” நூல் வெளியீட்டு விழா திங்க ளன்று (நவ.11) சென்னையில் நடைபெற்றது. பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ள இந்நூலை  பத்திரிகையாளர் என்.ராம் வெளியிட, தொழிற் சங்கத் தலைவர் க.சுவாமிநாதன் பெற்றுக் கொண்டார். இந்நிகழ்வில் தலைவர்கள் ஆற்றிய உரையின் அம்சங்கள் வருமாறு:

டி.கே.ரங்கராஜன்

அறிவு கூர்மையும் மொழிவல்லமையும் கொண் டவராக யெச்சூரி திகழ்ந்தார். அனைத்துக் கட்சித்  தலைவர்கள், அயல்நாட்டு தூதரகங்கள், வெளி நாட்டு தலைவர்கள், நிர்வாக ரீதியான தொடர்பு கள் என அவரது விரிந்த தொடர்புகள் கட்சிக்கு  மிகவும் பயனளித்தன. ஒரு கருத்தின்பால் அனை வரையும் இணைக்கும் அவரது திறமை அசாதார ணமானது. மேற்கு வங்க உயர்நீதிமன்ற நீதிபதி சுனித்ரா சென்குப்தாவை தகுதி நீக்கம் செய்வதற்கான தீர்மானத்தை மாநிலங்களவையில் முன்மொ ழிந்தபோது, ஒன்றிரண்டு உறுப்பினர்களைத் தவிர அனைவரும் ஏற்கும் வகையில், அவர்  நகர்த்தியது வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வாகும்.  கட்சி பாகுபாடின்றி அனைவரும் ஏற்கும் வகை யில் பக்குவமான வார்த்தைகளை பயன்படுத்து வது அவரின் சிறப்பாகும். தன்னை முன்னிலைப்படுத்தாமல் அனை வரையும் ஈடுபடுத்தி, கற்றுக்கொடுக்கும் தன்மை  அவருக்கு எப்போதும் உண்டு. தனக்குத் தெரி யாதவற்றை மற்றவர்களிடம் மிகுந்த நிதான மாகக் கேட்டு புரிந்துகொள்வார். என்.ராம்  யெச்சூரி எனது 50 ஆண்டுகால நண்பர், தோழர். அவரது இழப்பு இடதுசாரிகளுக்கு மட்டு மல்லாமல், ஜனநாயகத்தையும், ஒற்றுமையை யும், மதச்சார்பின்மையையும் நம்பும் அனை வருக்குமான இழப்பாகும். 1993 இல் நான்  ஃப்ரண்ட்லைன் இதழின் ஆசிரியராக இருந்த போது, பாபர் மசூதி இடிப்புக்குப் பின்னர் இந்நூல் முதலில் கட்டுரையாக வெளியானது. ஆர்எஸ்எஸ்-ன் இரண்டாம் தலைவர் கோல் வால்கர் 1938 இல் எழுதி 1939 இல் வெளி யான “நாம் அல்லது நமது தேசம் குறித்த வரை யறை” நூலை யெச்சூரி கண்டெடுத்து, அதன் உண்மை நோக்கங்களை அம்பலப்படுத்தினார். மநுஸ்மிருதியை உலகமே ஏற்க வேண்டும் என்று கோல்வால்கர் கூறியதையும், இட்லரின் கொள்கைகளை அவர் ஆதரித்ததையும் யெச்சூரி வெளிச்சமிட்டுக் காட்டினார்.

பீட்டர் அல்போன்ஸ்

நாட்டின் மீதும், ஜனநாயகம், மதச்சார் பின்மை மீதும் பற்றுகொண்டு அவற்றைப் பாது காக்க கருத்தியல் தளத்திலும் செயலிலும் முன்னின்றவர் யெச்சூரி. 1996 இல் அமைந்த கூட்டணி அரசிற்கான பொது செயல் திட்டத்தை  உருவாக்குவதில் மகத்தான பங்களிப்பு செய்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல்  தலைமைக் குழுவிற்கு யெச்சூரி தேர்வு செய்யப் பட்ட காலம் நெருக்கடி மிகுந்த நேரம். சோவி யத் ரஷ்யா வீழ்ந்திருந்தது. அத்வானி ரதயாத்திரை  நடத்தி இந்தியாவை கொடும் கலவர களமாக மாற்றி பாபர் மசூதி இடிக்கப்பட்டிருந்தது. பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இடஒதுக்கீடு அமலாக்கத்திற்கு எதிராக நாடெங்கும் போராட் டங்கள் தூண்டப்பட்டன. இந்த காலக் கட்டத்தில்  தனது சித்தாந்தத் தெளிவுடன் யெச்சூரி வினை யாற்றினார்.

ஜி.ராமகிருஷ்ணன் 

கட்சியின் தத்துவார்த்த நிலைகளை விளக்கி வெளியாகும் பீப்பிள்ஸ் டெமாக்ரசி இதழின்  ஆசிரியராக 20 ஆண்டுகாலம் யெச்சூரி செயல் பட்டார். ஆர்எஸ்எஸ்-ன் வேர்கள் வெளியே தெரி வதில்லை என்பதற்கு மண்டைக்காடு கலவரம் குறித்த நீதிபதி வேணுகோபால் ஆணைய அறிக்கை சான்றாகும். சாவர்க்கர் 1923 இல் அந்தமான் சிறையில் அடைக்கப்பட்டு, பத்து ஆண்டுகளுக்குப் பின்  முழுமையான இந்துத்துவ கருத்தாக்கத்திற் குள் வந்து நின்றார். இந்து மதத்திற்கும் இந்துத்து வாவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதே  அவரின் வாக்கு. இந்துத்துவா என்பது முழு மையான அரசியல் திட்டம். ஹிட்லரிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும் என்கிறார் கோல்வால்கர். மூஞ்சே முசோலினியுடன் பத்து நாட்கள் தங்கி அவர்களின்  செயல்பாட்டைக் கற்றார். வெறிபிடித்த சித்தாந்தத் திற்கு ஹிட்லரை அவர்கள் போற்றினர். அதன்  அமலாக்கத்திற்கு முசோலினியை பின்பற்றினர்.

கவிதா முரளிதரன்

இன்றைய காலகட்டத்தில் நாம் நடத்த வேண்டியுள்ள கருத்துப் போருக்கு தேவையான  ஆயுதங்களை அளித்துவிட்டே அவர் மறைந் துள்ளார். நிர்மலா சீதாராமன் ‘ஆணாதிக்கம் என்பது இடதுசாரி கருத்தியல்’ என்று கூறுவது தவறானது. இடதுசாரிகள்தான் குடும்பம், திரு மணம் உள்ளிட்ட சமூக அமைப்பில் உள்ள ஆணா திக்கத்தை வெளிக்கொண்டு வந்தனர். மகளிர்  தினத்தின் வேர்கள் இடதுசாரி இயக்கத்தி லிருந்தே முளைத்தது. திருமணமான பெண்கள் வீட்டுக் கடமை களை சரியாகச் செய்யவில்லையெனில், ஆண்கள் தனியாகச் செல்லலாம் என்று கூறிய வர்தான் தற்போதைய ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத். சாதி, பாலின பாகுபாடுகளை  ஆதரித்தவர் கோல்வால்கர். ஆணாதிக்கத்தை யும் பெண் அடிமைத்தனத்தையும் நிறுவனப் படுத்தியது ஆர்எஸ்எஸ்-ம் அதன் அமைப்பு களுமே. நிகழ்வில் பாரதி புத்தகாலய பதிப்பாளர் க.நாகராஜன், சிபிஎம் மாநிலக்குழு உறுப்பி னர் ஆர்.பத்ரி, சூழலியலாளர் டி.சுந்தர் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.