tamilnadu

img

மதுரை சித்திரைத் திருவிழா நடைபெறுமா?

மதுரை, ஏப்.6- மதுரையில் சித்திரைத் திருவிழா நடைபெறுமா என்பது ஏப்ரல் 14-ஆம் தேதிக்குப் பிறகுதான் தெரியவரும் என அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார். மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் உள்ள மக்களின்கு வீடுகளுக்கேச் சென்று இலசமாக சுமார் 60,000 மாஸ்க்குகள் வழங்கும் நிகழ்வில் தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ திங்களன்று பங்கேற்றார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "அரசாங்கம் சட்டம் போட்டு மக்களைக் கட்டுப்படுத்த முடியாது. மக்களாகவே தாங்களாக முன்வந்து சூழ்நிலை அறிந்து செயல்பட வேண்டும். உலக வல்லரசு நாடான அமெரிக்காவே கொரோனாவால் முடங்கியிருக்கிறது. அங்கு மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த வைரஸ் தாக்கத்தினால் பலர் சுயகட்டுப்பாட்டைக் கடைப்பிடித்து வீடுகளில் இருக்கிறார்கள். தமிழக மக்களைக் காப்பதற்காக அனைத்து பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மதுரையில் சித்திரைத் திருவிழா நடைபெறுமா என்பது வருகிற ஏப்ரல் 14-ஆம் தேதிக்குப் பிறகுதான் தெரியவரும். வைரஸ் தாக்கம் கூடுகிறதா? குறைகிறதா? என்று அறிந்த பின்னரே சித்திரைத் திருவிழா பற்றிய அறிவிப்பு வெளியிடப்படும். இந்தியா முழுவதும் அனைத்து மக்களும் ஒற்றுமையாக விளக்கேற்றிய காட்சியைப் பார்க்க முடிந்தது. இது உண்மையிலேயே அனைவரும் ஒற்றுமையாக இருப்பதை எடுத்துக் காட்டுகிறது. மதுரையில் பல இடங்களில் பொதுமக்கள் பட்டாசு வெடித்து உற்சாகமாக இருந்தனர்" என்றார்.

திருக்கல்யாணம்-தேரோட்டம்-கள்ளழகர் ஆற்றில் இறங்குதல்
ஏற்கனவே உள்ளபடி, மதுரை சித்திரைத் திருவிழா ஏப்.25-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்க வேண்டும். ஏப்.26-ஆம் தேதி முதல் மே 3-ஆம் தேதி வரை பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும். மே 4-ஆம் தேதி மீனாட்சியம்மன் திருக்கல்யாணமும், மே 5ஆம் தேதி தேரோட்டமும் முத்தாய்ப்பு நிகழவான கள்ளழகர் வைகையாற்றில் இறங்கும் நிகழ்ச்சி மே 7ஆம் தேதியும் நடைபெற வேண்டும்.

கொரோனா ஊரடங்கு ஏப்.14-ஆம் தேதியோடு நிறைவு பெறுமா? அல்லது தொடருமா? எனத் தெரியவில்லை. ஊராடங்கு நிறைவு பெறுத் தினத்திலிருந்து  11 தினங்கள் கழித்து திருவிழா தொடங்குகிறது. இதற்கிடையில் மதுரை நான்கு மாசிவீதிகளிலும்  மாநகராட்சி பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறது. ஏப்.15-ஆம் தேதியிலிருந்து பத்து தினங்களுக்குள் மாநகராட்சி பணிகள் முழுமையாக நிறைவேறுமா என்ற ஐயமும் உள்ளது.கொரானோ தாக்கம் தீர்ந்துவிடும், மாநகராட்சியும் பணிகளை முழுமையாக முடித்துவிடும். மதுரை நகர் வீதிகளில் இந்தாண்டு தேரோட்டம் நடைபெறும் என்ற நம்பிக்கையில் உள்ளனர் மதுரை மக்கள்.

;