tamilnadu

img

வாழை இந்த சமூகத்திற்கு சொல்லும் செய்தி என்ன? - முனைவர் மோ.கௌசல்யா

எளிய மக்களை மையப்படுத்தி எடுக்கப்படுகிற தமிழ்த் திரைப்படங்கள் தற்போது அதிகரித்து சூழலில் வாழைத் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. பெரும்பாலும் தென் மாவட்டங்கள் என்றாலே கட்டப்பஞ்சாயத்து, சாதி பெருமை பேசுதல், வன்முறை, ஆணவப் படுகொலைகள், பெண்களுக்கெதிரான வன்முறைகள் என்று இவைகள் மட்டுமே காட்சிப் படுத்தப்பட்ட நிலயில் அதே தென் மாவட்ட களில் வசிக்கும் ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வியலை ஒரு சிறந்த கலைப்படைப்பாக நம் கண் முன்னே நிறுத்தியிருக்கிறார் இயக்குநர்.

1999 ஆம் ஆண்டு ஸ்ரீ வைகுண்டத்தில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு வாழைத் திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. வாழைத்தார் சுமக்கும் தொழிலாளர்களின் வாழ்க்கையையும் அவர்களின் வாழ்வில் சந்திக்கும் அவலங்களையும் நம் கண் முன்னே கொண்டு வந்து விடுகிறது. இது வரை வாழைப்பழங்களையோ, வாழை இலைகளையோ பார்க்கும் போது அதன் பின்னால் இருக்கும் தொழிலாளர்களின் உழைப்பை பற்றி ஒருபோதும் சிந்தித்து இல்லை. அந்த மக்களின் சிரிப்பு, ஆனந்தம், காதல், வலி, வேதனை, அழுகை என்று அனை‌த்தையு‌ம் காட்டி கண்ணீர் வர வைக்கும் படைப்பாகவே வாழை உள்ளது.
பெரும்பாலான இன்றைய திரைப்படங்கள் வன்முறை, கதாநாயகன் வழிபாடு, ஆபாசம், கவர்ச்சி, ஆணவப் படுகொலைகள் மற்றும் சாதிப் பெருமை இவைகளை மையப்படுத்தி எடுக்கப்படும் வேளையில் எளிய மக்களின் வாழ்க்கை முறையை அப்படியே பிரதிபலிக்கும் கண்ணாடியாக இத்திரைப்படம் அமைந்துள்ளது.
 

இத்திரைப்படத்தில் வர்க்கப்போராட்டமும் ஆங்காங்கே காட்டப் பட்டுள்ளது. உழைப்புச் சுரண்டல் மூலம் எளிய மக்கள் படும் துன்பத்தை இன்றைய இளைஞர்களுக்கும் குறிப்பாக நகர்ப்புறங்களில் எந்த ஒரு துன்பமும் இன்றி வளரும் பிள்ளைகளுக்கும் காண்பிக்க வேண்டிய திரைப்படம்.  படத்தில் வரும் ஒரு உரையாடலில் நாயகன் சக தொழிலாளர்களைப் பார்த்து “நம் உரிமையை பிச்சை என்று கூற எங்கே கற்று கொண்டீர்கள் என்று கேட்பது இன்றைய கள யதார்த்தத்தை காட்சிப்படுத்துவதாகவே உள்ளது. இரண்டு சிறுவர்களை மையப்படுத்தி கதை நகர்ந்தாலும் எளிய மக்களின் அடிப்படை வாழ்வியலை ஒருங்கே காட்சிப்படுத்தியிருப்பது சிறப்பு. சாதிய மற்றும் வர்க்கக் கட்டமைப்பு இரண்டும் சேர்ந்து எளிய மக்களை எவ்வாறு சுரண்டலுக்கு உள்ளாக்குகிறது என்பது இப்படத்தில் தெளிவாக காட்டப்பட்டுள்ளது. இந்தியாவில் சாதி மற்றும் வர்க்கம் இரண்டும் பிணைந்து எளிய மற்றும் விளிம்பு நிலை மக்களை சுரண்டுவது இன்றும் தொடர்ந்து கொண்டு தானே இருக்கிறது.அதிலும் குறிப்பாக சாதி, வர்க்கம் மற்றும் பாலினம் என்ற மூன்றின் அடிப்படையிலும் அதிகமாக ஒடுக்கப்படுபவர்கள் பெண்களே.  சமீப காலங்களில் வெளியான தமிழ்த்திரைப்படங்கள் கூட வெறும் சாதிய ஒடுக்குமுறையை சொல்வதாக இருக்கும் அல்லது வர்க்கக் கட்டமைப்பை உடைக்கிற நோக்கில் இருக்கும். ஆனால் வாழைத் திரைப்படம் சாதி மற்றும் வர்க்கம் இரண்டும் இணையும் புள்ளியை காட்டுகிறது. குறிப்பாக இப்படத்தின் ஒரு காட்சியில் சிறுவனின் மாடு இடைத்தரகரின் வயலுக்குள் மேய்ந்து விட்டதை காரண‌ம் காட்டி அக்குடும்பத்தினர் அந்த இடைத்தரகருக்குத் தர வேண்டிய வட்டிப்பணத்தை தருமாறு பெண்களை மிரட்டுவார். உடனே அந்த சிறுவனின் தாய் தன் காதில் இருக்கும் காதணியை கழற்றி அவர் முகத்தில் எறிந்து விட்டு மகளை தன் வீட்டிற்கு அழைத்துச் செல்வார். இந்தக் காட்சியும் ஏழை மற்றும் ஒடுக்கப்பட்ட பெண்கள் சந்திக்கும் அவமானங்களை காட்டுவதாக அமைந்தது.

இன்றும் கூட சாதி மற்றும் வர்க்க ரீதியாக ஒடுக்கப்படும் பெண்கள் பாலியல் சீண்டல்களுக்கு உள்ளாவதும், ஆபாசப்பேச்சுகளை சகித்துக் கொள்வதும் இயல்பான ஒன்றாகவே சமூகத்தில் உள்ளது. இதே போன்று இப்படத்தின் மற்றொரு காட்சியில் பசிக்காக அந்த சிறுவன் வாழைப்பழத்தை திருடி சாப்பிட்டதற்காக அத்தோட்டத்தின் உரிமையாளர் அந்த சிறுவனை அடிப்பார். அடிக்கும் போது அவன் ஊர் பெயரை கேட்பார். பெயரை கேட்ட உடனே இன்னும் வேகமாக அடிப்பார். இ‌ன்னு‌ம் கிராமப் புறங்களில் ஊர்ப் பெயரை கேட்டவுடன் அவர்களின் சாதியை எ‌ளி‌தி‌ல் அடையாளம் கண்டு கொள்ளும் நிலைமை தான் நிலவுகிறது. சாதி மற்றும் வர்க்க ரீதியாக ஒடுக்கப்படும் ஒவ்வொருவரும் இப்படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் தன்னைப் பொருத்திப் பார்ப்பதாக உள்ளது. இப்படத்தில் பள்ளி சிறுவன் ஆசிரியர் மீது காட்டும் அன்பும், சிறுவனின் அக்காவின் காதலும் மிக இயல்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. முதல் பாதி முழுவதும் மகிழ்ச்சி மற்றும் சோகம் கலந்த அம்மக்களின் வாழ்வியலை காட்சிப்படுத்திவிட்டு இறுதி அரை மணி நேரம் அழ வைத்து விடுகிறார். கூலி உயர்வு கேட்டு போராடிய வாழைத்தார் சுமக்கும் தொழிலாளர்கள் இறுதியில் தங்கள் உயிரையே விடுகின்றனர். படிப்பு மற்றும் விளையாட்டு என மகிழ்ச்சியாக துள்ளித் திரிய வேண்டிய குழந்தை பருவத்தில் குடும்ப வறுமை காரணமாக குழந்தைத் தொழிலாளர்களாக வேலைக்குச் செல்லும் குழந்தைகள் இன்னும் நம் நாட்டில் இருக்கத் தானே செய்கிறார்கள். அவர்களின் மன நிலையை அப்படியே படம் பிடித்துக் காட்டுகிறது இந்த வாழைத் திரைப்படம். முற்போக்கு மற்றும் இடதுசாரி சிந்தனையாளர்கள், சாதிய எதிர்ப்பாளர்கள் அனைவரும் இப்படத்தை வெகுவாக பாராட்டி வரும் சூழலில் ஒரு சில சாதிய உணர்வாளர்கள் மற்றும்  மேட்டுக்குடி மனப்பான்மை உள்ளவர்கள் இந்த திரைப்படத்தை சமூக வலைத்தளங்களில் குறை சொல்வதையும் காணலாம்.  இரத்தம் தெறிக்கும் வன்முறை காட்சிகள், பெண்களை போகப் பொருளாக சித்தரித்தல் இல்லாமல் அவர்களின் உணர்வுகளை எளிமையாக காட்டி இருப்பதும் இப்படத்தின் மிக முக்கிய அம்சமாக உள்ளது.

வழக்கமான தமிழ் சினிமா பாணியிலிருந்து வாழைத் திரைப்படம் வேறுபட்டு இருப்பதற்கு காரணம் எளிய மக்களின் வாழ்க்கையானது எந்தவொரு மிகைப்படுத்தலும், செயற்கைத் தன்மையும் இன்றி காட்சிப்படுத்தியிருப்பதே ஆகும். இது போன்று விளிம்பு நிலை மனிதர்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வியலை வெறும் திரைப்படமாக மட்டும் காட்சிப்படுத்தாமல் இவர்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்தும் பேச வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது என்பதையும் நாம் உணர வேண்டும். குறிப்பாக தலித்திய இலக்கியங்கள் மற்றும் திரைப்படங்கள் அவர்களின் வாழ்வியலை மட்டுமே காட்சிப் படுத்தாமல் அவர்களின் சமூக - பொருளாதார மற்றும் அரசியல் மேம்பாடு குறித்த உரையாடல்களை சமூகத்தில் உருவாக்க வேண்டிய தேவையும் இன்றைய சூழலில் முக்கியமானதாகக் கருதப்படுகிறது.