தமிழ்நாடு ஆளுநர் திரு.ஆர். என். இரவி அவர்கள் பள்ளி விழா ஒன்றில் பேசும் போது தமிழ்நாடு பாடத்திட்டம் மிகவும் கீழ் நிலையில் உள்ளது என்று பேசியிருப்பது அவர் வகிக்கும் பொறுப்பிற்கு மிகவும் கண்ணிய குறைவான செயல். ஆர்.என்.ரவி பேசியுள்ளது உண்மைக்கு புறம்பானது மட்டுமல்ல, மாணவர்களை மிகப்பெரும் மன உளைச்ச லுக்கு உள்ளாக்கும் செயல். மாணவர்கள் அவர்தம் பெற்றோருக்கு தாழ்வு மனப்பான்மையை உருவாக்குவதுடன், தனியார் நடத்தும் மத்தியப் பாடத் திட்டப் பள்ளிகளை ஊக்குவிக்கும் சூழ்ச்சிமிக்க உரை. தமிழ்நாடு அரசு மாநிலப் பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களிடம் அவர்கள் படிக்கும் பள்ளியின் நூற்றாண்டு விழாவில் பங்கேற்றுப் பேசிய ஆளுநர், அப்பள்ளியின் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் நமக்கு ஒரு பாடத்திட்டம் உள்ளது, அதை நீங்கள் பின்பற்றுகிறீர்கள். அதைத் தாண்டி நீங்கள் சிந்திக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். ஏனெனில், நமது மாநிலத்தில் உள்ள பாடத்திட்டம், குறிப்பாக மாநிலப் பாடத்திட்டம் மிகவும் கீழ் நிலையில் உள்ளது” என்று கூறியுள்ளார். இந்த உரை மிகவும் அநாகரிகமானது. பெண்கள் கல்வியில் முன்னேற வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்திற்காக, தொண்டுள்ளம் கொண்ட பெரியவர்களால் உருவாக்கப்பட்டு, சென்னையின் முதன்மையான பெண்கள் பள்ளிகளில் ஒன்றாக திகழும் நூற்றாண்டுப் பழமை வாய்ந்த வரலாற்று சிறப்புமிக்க அரசு உதவிபெறும் பெண்கள் மேல்நிலைப் பள்ளி நிர்வாகம், கடந்த நூறு ஆண்டுகளாக தரம் தாழ்ந்த பாடத்திட்டத்தை மாணவர்களுக்கு நடத்தி வருகிறதா என்ற கேள்வியை எழுப்பும் உரையாகஆளுநர் உரை அமைந்துள்ளது.
கடந்த நூறு ஆண்டுகளில் இந்த பள்ளி பின்பற்றும் மாநிலப் பாடத்திட்டத்தில் படித்த மாணவிகள் யாரும் எந்த பயனும் அடையாமல் போய்விட்டனரா? இப்பள்ளியில் பின்பற்றும் மாநிலப் பாடத்திட்டத்தில் பயின்ற மாணவிகளின் அறிவு நம் சமூகத்திற்கும், நாட்டிற்கும் பயன்படாமல் போய்விட்டதா? வடசென்னையின் மையப் பகுதியில் இயங்கி வரும், மாநிலப் பாடத்திட்டத்தைப் பின்பற்றும், நூற்றாண்டு பழமை வாய்ந்த பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் மாணவிகள் இந்திய சமூக, பொருளாதார வளர்ச்சிக்கு எந்த பங்களிப்பும் செய்யவில்லையா? - என்ற கேள்விகளை ஆளுநர் உரை எழுப்புகிறது. மாநிலப் பாடத்திட்டம் போட்டிகளுக்கு தகுதியானதாக இல்லை என்ற விமர்சனத்தை போகிறபோக்கில் பொத்தாம் பொதுவாக வைப்பது மாநிலப் பாடத்திட்டத்தைச் சிறுமைப் படுத்தும் நோக்கம் கொண்டது. என்சிஇஆர்டி (NCERT) தயாரித்த இயற்பியல் பாடப் புத்தகம் அணு குறித்து, 2017யில் ஒரு விதமாகவும், 2020க்கு பின்னர் வேறு விதமாகவும் உள்ளதாக தேசிய தேர்வு முகமை (NTA) உச்ச நீதிமன்றத்தில் “நீட்” முறைகேடுகள் தொடர்பான வழக்கில் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் கூறியுள்ளது. வேறு வழி இல்லாமல் இரண்டு வகையான விடைகள் மாணவர்கள் எழுத வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது, அதன் விளைவாக இரண்டு விதமான பதில்களுக்கும் மதிப்பெண் வழங்கப்பட்டதாக தேசியத் தேர்வு முகமை தெரிவித்தது.
ஒரு கேள்விக்கு ஒரு பதில்தான் இருக்க முடியும் என்று கருதிய உச்சநீதிமன்றம், எது சரியான விடை என்று கண்டறிய தில்லி ஐஐடியை நாடவேண்டிய அவசியம் ஏற்பட்டதை உலகமே பார்த்து சிரித்தது என்ற செய்தியை ஆளுநர் ஆர்.என்.ரவி படிக்கத் தவறிவிட்டாரா? தமிழ்நாட்டில் மாணவர்கள் மனங்களில் தாழ்வு மனப்பான்மை உருவாகக் கூடாது என்ற உயர்ந்த நோக்கத்தில் கல்வி சமச்சீராக இருக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு பாடத்திட்டத்தை உருவாக்கியது. தேசியத் தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET) என்ற ஒரு சூழ்ச்சி வலையில் மாணவர்கள் சிக்கித் தவிக்கும் நிலையில், எத்தகையப் போட்டியையும் எதிர்கொள்ளும் உள்ளடக்கம் கொண்டதாக பாடநூல்கள் மாநில அரசால் தயாரிக்கப் பட்டுள்ளச் சூழலில், மாணவர்களிடையே ஆளுநர் நிகழ்த்தி யுள்ள, எந்தவித அடிப்படை ஆய்வும் இல்லாத, அவதூறு பரப்பும் உரை கண்டனத்திற்குரியது. தமிழ்நாடு அரசு பல்கலைக்கழகங்கள், அதன் ஏற்பில் இயங்கும் பல நூறு கல்லூரிகள், இவற்றில் பயிலும் பல இலட்சம் மாணவர்களில் பெரும் பகுதியினர் மாநிலப் பாடத்திட்டத்தில் பயின்றவர்கள். விண்வெளி ஆய்வில் கோலோச்சும் இஸ்ரோ விஞ்ஞானிகள் பலரும் மாநிலப் பாடத்திட்டத்தில், மாநில அரசுக் கல்லூரிகளில் பயின்றவர்கள். மிகப்பெரும் அளவில் துறை சார்ந்த ஆளுமைகளை உருவாக்கித் தந்துள்ளதன் மூலம் இந்திய அறிவியல், பொருளாதார, சமூக வளர்ச்சிக்கு அளப்பரிய தொண்டு செய்துள்ளது மாநில அரசுப் பள்ளிகளும் அதில் பின்பற்றப்படும் மாநிலப் பாடத்திட்டமும்.
ஆளுநர் என்ற பதவியை வகிப்பதனால், பதவி வழிப் பொறுப்பாக தமிழ்நாடு மாநிலப் பல்கலைக்கழகங்களுக்கு வேந்தராக பொறுப்பு வகிக்கும் ஆர்.என்.ரவி, பள்ளி முதல் பல்கலைக்கழகம் வரை அனைத்து நிலையிலும் செயல்படும் தமிழ்நாடு மாநில ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களை மிகவும் சிறுமைப்படுத்தும் விதமாக பேசியுள்ளார். குழந்தைப் பருவ மாணவர்களிடம் பாடத்திட்டம் குறித்த தவறான விமர்சனங்களை முன்வைத்ததின் விளைவாக, மாநிலப் பாடத்திட்டதில் பயிலும் மாணவர்களை மன உளைச்சலுக்கு ஆளாக்கி உள்ளார். மன ரீதியாகவும், அதன் விளைவாக உடல் ரீதியாகவும் மாணவர்கள் பாதிப்படையும் வகையில் பேசப்பட்டப் பேச்சு கண்டனத்திற்குரியது. மாநிலப் பாடத்திட்டம் தரம் தாழ்ந்தது (“State Board is very low...”) என்ற தனது கூற்றை, ஆளுநர் ஆர்.என்.இரவி திரும்பப் பெற வேண்டும் அல்லது ஆளுநர் பொறுப்பில் இருந்து உடனடியாக விலக வேண்டும்.