- மோடிக்கு தலையாட்டி பொம்மைகள்னா ரொம்ப ரொம்பப் புடிக்கும்னு எங்களுக்குத் தெரியும். அதனால்தான் எங்களுக்குத் தெரிஞ்ச தஞ்சாவூர்க்காரங்களோட பேசி அவருக்கு தலையாட்டி பொம்மைகளை அனுப்பி வச்சோம். நாங்க நெனச்ச மாதிரியே அந்த பொம்மைகளைப் பார்த்ததும் மோடிஜி அகமகிழ்ந்து போனார். உங்களைச் சுத்திதான் ஏகப்பட்ட தலையாட்டி பொம்மைகளை வச்சிருக்கீங்களே.. அது போதாதான்னு அவரைக் கேட்டோம். அவங்களுக்கெல்லாம் ஒரு இன்ஸ்பிரேஷன் வேண்டாமான்னு பதில் சொல்லிட்டு ஒரு பொம்மையை எடுத்து மார்போடு அணைத்துக் கொண்டார்.
- “அச்சே தின்.. அச்சே தின்”னு அடிக்கடி காதிலே விழுதே.. உங்களுக்கு உண்மையிலேயே அச்சே தின் எதுன்னு கேக்கறீங்க.. பொதுத்துறை நிறுவனங்கள் எதையும் மோடிஜி விக்காம ஒரு நாள் போச்சுன்னா அந்த நாள் எங்களுக்கு ஒரு “அச்சே தின்..” முஸ்லிம்கள் மீது தாக்குதல்கள் நடக்காம ஒரு நாள் போச்சுன்னா அந்த நாளும் எங்களுக்கு அச்சே தின்-தான்.. !
- இந்தியாவில எட்டு வருஷமாத்தான் நல்லாட்சி நடக்குது, அதுக்கு முன்னாலே குடும்ப ஆட்சிதான் நடந்தது.. ஒரே ஊழல், சீரழிவுதான்னு மோடிஜி சொல்றாரு.. பழைய ஆட்சியிலே எங்களுக்கு எவ்வளவோ குறைகள் இருந்துது, இல்லேன்னு சொல்லலை.. ஆனா அப்பல்லாம் நாங்க நெனச்சதை வெளியே சொல்லவாவது முடிஞ்சுது.. பழைய ஆட்சி எப்ப திரும்பும்னு எங்களுக்கு ஏக்கம் வர மாதிரி பண்ணிப்புட்டீங்களே இது நியாயமா ஜீ..?
- 2014 முதல் மோடிஜி வசூலிச்ச வரி 27 லட்சம் கோடி ரூபா.. அதுல கொஞ்சம் கிள்ளி 1 லட்சம் கோடியைக் குறைச்சிட்டு நாங்க குறைச்சாச்சு.. அடுத்து எல்லா மாநிலங்களும் குறைக்கணும்னு அடம் புடிக்கறீங்களே.. எங்களுக்கு வர வேண்டிய ஜிஎஸ்டி நிலுவைத் தொகையைப் பெறவே தமிழக முதல்வர் எத்தனை தடவை காவடி எடுக்க வேண்டியிருக்கு..? இந்த அடாவடித்தனத்தை எல்லாம் நாங்க யார்கிட்ட போய் சொல்றது?
- அயோத்திக்குப் பிறகு வேறு எந்த மசூதி பிரச்சனையையும் எழுப்பக் கூடாதுன்னு நரசிம்ம ராவ் 1991-லே நாடாளுமன்றத்தில் சட்டம் கொண்டு வந்தார் ஞாபகம் இருக்கா..? சுதந்திரம் கிடைச்ச 1947-லே ஒரு இடத்திலே ஒரு மசூதி இருந்ததுன்னா அது எப்பவுமே மசூதிதான்.. அந்த இடத்திலே ஒரு கோவில் இருந்ததுன்னு யாரும் சொல்லக் கூடாதுன்னு அந்தச் சட்டம் தெளிவா சொல்லுது. அதை அப்படியே தூக்கிக் கடாசிட்டு இப்ப வரிசையா வாரணாசி, மதுரா, தாஜ்மகால், குதுப்மினார்னு பட்டியலை சங்பரிவார ஆட்கள் நீட்டிக்கிட்டே போறாங்களே.. சரி.. அவங்கதான் இப்படி கலவரம் பண்றாங்கன்னா, நீங்க மவுனகுருவா இருந்து அதுக்கு பச்சைக் கொடி காமிக்கறது எங்களுக்குத் தெரியாதா மோடிஜீ..? நீங்க சப்கா சாத்.. சப்கா விகாஸ், சப்கா விஸ்வாஸ்னு அடிக்கடி சொல்றதெல்லாம் யாரை ஏமாற்ற..?
- ஊடகத்தைச் சேர்ந்தவங்களுக்கெல்லாம் மோடிஜி பாடம் நடத்தப் போறதா கேள்விப்பட்டோம். பொய் சொல்வது எப்படின்னு அவங்களுக்கு சொல்லித்தரப் போறாராம்.. அந்த வகுப்பிலே சேரணுங்கறது கட்டாயம் இல்லைன்னு மோடி அரசு சொன்னாலும், சேரலைன்னா ரெய்டு வரும்னு அவங்களுக்குத் தெரியாதா..?
- உழுபவனுக்கே நிலம் சொந்தம்னு கம்யூனிஸ்டுகள் சொல்வாங்க.. மோடிஜிக்கு அது நல்லாவே தெரியும். ஆனா அவரோட ஆட்சியிலே மசூதியை இடிச்சவங்களுக்கே நிலம் சொந்தம்னு உச்சநீதிமன்றத்தையே சொல்ல வச்சுட்டாரு.. தேர்தல் ஆணையத்தில ஆரம்பிச்சு ரிசர்வ் வங்கி, சிபிஐ, அமலாக்கத் துறை, மாநில உரிமைகள்னு கடந்து, இப்ப நீதிமன்றம் வரை வந்தாச்சு.. இதுலே அவசர நிலையைக் கொண்டு வந்து ஜனநாயகத்தையே இந்திரா காந்தி அழிச்சுட்டார்னு குறை சொல்ல சங்பரிவாரத்திற்கு என்ன யோக்கியதை இருக்கு..?
- நாட்டின் முக்கியப் பிரச்சனைகளில் இருந்து மக்கள் கவனத்தைத் திசைதிருப்ப சில எதிர்க்கட்சிகள் முயற்சி செய்யறதா மோடிஜி சொல்றாரு.. ஜாதி, மதம், கோவில், மசூதி, ஹிஜாப்னு விதவிதமா மக்கள் கவனத்தைத் திசைதிருப்பறது யாரு? அவர் கதை விடறதுக்கு அளவே கிடையாதா? அவரோட வாழ்க்கை வரலாறு “பொய் மனிதனின் கதை”-ங்கற தலைப்பிலே புத்தகமாக வந்தாச்சு தெரியுமா?
- தேசத் துரோகச் சட்டம் பிரிவு 124ஏ செயல்படுவதை உச்சநீதிமன்றம் நிறுத்தி வச்சு ஒரு நல்ல தீர்ப்பு கொடுத்திருக்கே.. இனிமேயாவது அந்தச் சட்டத்தின் கீழே மனித உரிமையாளர்களைக் கைது பண்ணாம இருப்பீங்களா? மோடி-அமித் ஷா ஒரு கூட்டம் போட்டு “அயோத்தி ராமர் கோயில் தீர்ப்பு மாதிரி நமக்குச் சாதகமா இருந்தா கோர்ட் சொல்றதைக் கேட்போம்.. சாதகமா இல்லேன்னா நாம வழக்கமா போற ரூட்டிலே போய்க்கிட்டிருப்போம்.. கோர்ட்டெல்லாம் நம்மை என்ன பண்ணிட முடியும்”-னு பேசியிருக்காங்களாம். இது உண்மையான்னு நாங்க யார்கிட்ட கேக்க முடியும்? காலப் போக்கிலே நாங்களாத்தான் தெரிஞ்சுக்கணும்…
- தமிழ்நாட்டிலே சில இடங்கள்லே பல்லக்கு தூக்கிட்டு பவனி வர்றதை தடை பண்ணதா ஒரு தகவல் வந்தது. “தடை பண்ணா நடக்கறதே வேற”-ன்னு அண்ணாமலை ஒரு அறிக்கை விட்டாரு.. இப்ப தமிழக அரசே அதிலே தலையிட வேண்டாம்னு முடிவு பண்ணிட்டுதாம்.. “பல்லக்கு தூக்கறவங்களே எங்களைத் தூக்க விடுங்க, தடுக்காதீங்க”-ன்னு சொல்லும்போது யார்தான் என்ன செய்ய முடியும்? ஆனாலும் அதை எதிர்த்துப் பிரச்சாரம் பண்ணுவோம்.. ஒரு நாள் எங்களோட சொல் எடுபடாமயா போகும்?
- மோடிஜி ஆட்சியிலே அவங்க கிட்ட பணத்துக்கு கொறைச்சலே கிடையாது. ஒரு மாநிலத் தேர்தல்லே பரிவாரத்துக்கு மெஜாரிட்டி கிடைக்கலைன்னா எதிர்க்கட்சி எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கி அவங்க ஆட்சி அமைச்சுடுவாங்க.. இதுக்கு “ஆபரேஷன் தாமரை”ன்னு முன்னாலே பேர் இருந்துது.. இப்ப கொஞ்ச நாளா புல்டோசரை வச்சு முஸ்லிம்களோட வீடுகள், கடைகளையெல்லாம் இடிச்சுத் தள்ள ஆரம்பிச்சிருக்காங்க.. அதனாலே அதோட பேரை “ஆபரேஷன் புல்டோசர்”னு மாத்தப் போறதா ஒரு பேச்சு அடிபடுது.. உண்மையா சார்..?
நமஸ்தே டு ஆல் ஆஃப் யூ.. எங்களோட அடுத்த “மன் கி பாத்” நிகழ்ச்சியைக் கேட்க ஒரு மாதம் காத்திருங்க.. மனசிலே ஆயிட்டா..?
கற்பனை: ராஜகுரு