அரசு புறம்போக்கு நிலங்களில் வசிக்கும் ஏழை-எளிய மக்களுக்கு குடிமனைப்பட்டா வழங்கக் கோரி வி.தொ.ச மனு
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் திங்களன்று நடைபெற்றது. இதில், அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்க மாவட்டத் தலைவர் தங்கதுரை, மாவட்டச் செயலாளர் ராஜேஷ் கண்ணா, மாவட்டப் பொருளாளர் இளங்கோவன் ஆகியோர் அதிகாரியிடம் கொடுத்த மனுவில் கூறியிருந்ததாவது: தமிழகம் முழுவதும் அரசு புறம்போக்கில் வசிக்கும் ஏழை, எளிய மக்களுக்கு குடிமனைப்பட்டா வழங்க அரசு முடிவு எடுத்து அதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலும் அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் கிராமப் பகுதிகளில் வசிக்கும் ஏழை,எளிய மக்கள் அரசு புறம்போக்கில் அவர்களுடைய பொருளாதார நிலைக்கு ஏற்ப சிறியதாக ஒரு வீடு கட்டி வாழ்ந்து வருகிறார்கள். பெரும்பாலான கிராமப்புற மக்கள் ஆடு, மாடுகள் வளர்த்து வருகின்றனர். இவற்றை தாங்கள் வசிக்கக்கூடிய வீடுகளுக்கு அருகில் கொட்டகை அமைத்து கால்நடைகளை கட்டும் நிலை உள்ளது. தற்சமயம் குடிமனைப்பட்டா வழங்க வருவாய் துறையினர் கணக்கு எடுக்கும் பொழுது வீட்டின் அளவை மட்டும் நில அளவை செய்து அந்த இடத்திற்கு மட்டும் குடிமனைப்பட்டா வழங்கப்படும் என்று கூறுவதால் ஏழை, எளிய மக்கள் கலக்கம் அடைந்துள்ளனர். இதனால் அவர்கள் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்படுவதுடன், எதிர்காலத்தில் கால்நடைகளை வளர்ப்பது என்பது கேள்விக் குறியாகிவிடும். மேலும் பால் உற்பத்தியாளர்கள் பெரும்பாலானோர் அரசு புறம்போக்கில் வசிக்கும் ஏழை, எளிய மக்கள் என்பதை அரசு கவனத்தில் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம். ஆகவே திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் அரசு புறம்போக்கில் வசிக்கும் ஏழை, எளிய மக்களுக்கு கிராமப்புறத்திற்கு 3 சென்ட் நிலத்திற்கும், நகராட்சி, பேரூராட்சி பகுதிகளுக்கு 2 சென்ட் நிலத்திற்கும் மற்றும் மாநகராட்சி பகுதியில் 1 சென்ட் நிலத்திற்கும் குடிமனை பட்டா வழங்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு ஏழை, எளிய மக்கள் சார்பில் கேட்டுக் கொள்கிறோம் என கூறியிருந்தனர். 25-க்கும் மேற்பட்டோர் மனு கூட்டத்தில் அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்க ஒன்றிய துணை செயலாளர் முத்துக்குமரன், மாவட்டத் தலைவர் தங்கதுரை ஆகியோர் தலைமையில் 25-க்கும் மேற்பட்டோர் அதிகாரியிடம் கொடுத்த மனுவில் கூறியிருந்ததாவது: திருவெறும்பூர் வட்டம், கும்பகுடி கிராமம் மேட்டு தெருவில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வீடு கட்டி வசித்து வருகிறோம். மேற்படி வீட்டிற்கு வீட்டு வரி, மின் கட்டணம் செலுத்தி வருகிறோம். தற்போது சுமார் 60 க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு பட்டா வழங்கவில்லை. இது தொடர்பாக ஆட்சியர் அலுவலகம் மற்றும் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடமும் பலமுறை மனு கொடுத்துள்ளோம். ஆனால், இதுநாள் வரை பட்டா வழங்கப்படவில்லை. எனவே, இந்த விவகாரத்தில் தலையிட்டு உடனடியாக இப்பகுதி மக்களுக்கு பட்டா வழங்குமாறு கேட்டுக் கொள்கிறோம். என கூறியிருந்தார்.