விவசாய நிலங்கள் பயன்படும் வகையில் கால்வாய் அமைக்க வலியுறுத்தல்
திருச்சிராப்பள்ளி, ஜூன் 4 - ஆர்பிஐ அறிவித்துள்ள 9 நிபந்தனைகளையும் முழுமையாக திரும்பப் பெற வேண்டும். தீராம்பாளையம், வீராணி, வெல்லக்குளம் போன்ற கிராமங்களில் அரசு கட்டி கொடுத்த வீடுகளில் குடியிருந்து வரும் பயனாளிகளுக்கு வீட்டு மனைப் பட்டா வழங்க வேண்டும். சிறுப்பத்தூர் அருகே உள்ள உப்பாறு நீர்த் தேக்கத்திற்கு, கால்வாய் ஏற்படுத்தி மழைநீர் வீணாவதை தடுக்கவும், விவசாயிகளின் நிலங்களுக்கு நீரைப் பயன்படுத்திக் கொள்ள வசதியாக கால்வாய் அமைக்க வேண்டும். ஓமாந்தூர், அமினிமங்களம், புத்தனாம்பட்டி, கோட்டத்தூர், கீழ்நடுவலூர், மேல் நடுவலூர் உள்ளிட்ட கிராமங்களில் குரங்கு, காட்டுப்பன்றி, மயில், மான் போன்றவைகளால் விவசாயிகள் பயிரிடும் தானியங்கள் சேதமாகின்றன. இதை தடுக்க நடவடிக்கை தேவை. ஓமாந்தூரில் உள்ள வனத்துறைக்கு சொந்தமான ஏரியில் படர்ந்து கிடக்கும் கருவேல மரங்களை அகற்றிடவும், ஏரியை சுற்றி தூர்வாரவும், 2 மதில்கள் தூர்பிடித்து உள்ளதை புதுப்பிக்கவும் வேண்டும். விவசாய நிலங்களுக்கு தண்ணீர் வசதியை ஏற்படுத்த வேண்டும் என்பன உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மண்ணச்சநல்லூர் மேற்கு ஒன்றிய குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருச்சி மாவட்டம் திருவெள்ளறை கடைவீதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சங்க தலைவர் மனோகரன் தலைமை வகித்தார். ஒன்றியச் செயலாளர் முருகேசன் துவக்க உரையாற்றினார். அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்க ஒன்றிய செயலாளர் சுப்பிரமணியன், சிபிஎம் ஒன்றியச் செயலாளர் சுப்ரமணியன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் நடராஜன் சிறப்புரையாற்றினார். ஒன்றியக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.