புதுமைப் பெண், தமிழ்ப் புதல்வன் திட்டத்தின் கீழ் பயனடையும் மாணவர்களிடம் ஆட்சியர் கலந்துரையாடல்
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம் “நிறைந்தது மனம்“ நிகழ்ச்சியின் வாயிலாக, புதுமைப் பெண் மற்றும் தமிழ்ப் புதல்வன் திட்டத்தின் கீழ் பயன்பெறுவது குறித்தும், தொகை மாதம் தவறாமல் கிடைக்கப் பெறுகிறதா என்பது குறித்தும் மாணவ, மாணவிகளிடம் கலந்துரையாடினார். புதுமைப் பெண் திட்டத்தின் கீழ், 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் படித்து, மேற்படிப்பில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும் பட்டப் படிப்பு, பட்டயப்படிப்பு, தொழிற்படிப்பு ஆகியவற்றில் இடைநிற்றல் இன்றி முடிக்கும் வரை மாதம் ரூ.1,000 வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் பயனடைந்து வரும் தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் வட்டத்தைச் மாணவி சுருதி தெரிவிக்கையில், நான் கும்பகோணம் அரசு மகளிர் கல்லூரியில் 3- ஆம் ஆண்டு பொறியியல் துறையில் பயின்று வருகிறேன். புதுமைப் பெண் திட்டத்தின் மூலம் மாதாந்திர உயர் கல்வி உதவித்தொகை 1000 ரூபாய் கிடைக்கிறது. இவற்றில் சிறிதளவு சேமித்து கணினி பயிற்சி மற்றும் தட்டச்சு பயிற்சி முடித்துள்ளேன். மேலும் கூடுதல் திறன் பயிற்சிகளை பெற்று என்னை மேம்படுத்தி வருகிறேன். எங்கள் கல்வி வளர்ச்சிக்கு உதவி புரிந்து வரும் முதல்வருக்கு நன்றி என ஆட்சியரிடம் தெரிவித்தார். தமிழ்ப் புதல்வன் திட்டம் தமிழ்ப் புதல்வன் திட்டத்தின் கீழ் பயனடைந்து வரும் தஞ்சாவூர் வட்டத்தைச் சார்ந்த மாணவர் ஹரிஹரன் தெரிவிக்கையில், நான் தஞ்சாவூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறேன். தமிழ்ப் புதல்வன் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் தொகையான மாதம் ரூ.1000 பெறுவதன் மூலம் நோட்டு புத்தகங்கள் வாங்க பயன்படுகிறது. இத்திட்டத்தை என் போன்ற மாணாக்கர்களுக்கு வழங்கிய முதல்வருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.