மின்சாரம் பாய்ந்து ஒருவர் பலி
தூத்துக்குடி, மே 31-தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் அருகே மாசார்பட்டி கிராமம், மேற்கு தெருவைச் சேர்ந்தவர் ராமலிங்கம் மகன் சரவணன் (38). எலக்ட்ரீஷியனான இவர் அதே பகுதியில் உள்ள வீட்டில் எலக்ட்ரீஷியன் வேலைபார்த்துக் கொண்டிருந்தபோது திடீரென மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து மாசார்பட்டி போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாணவி தற்கொலை
தூத்துக்குடி, மே 31-தூத்துக்குடி மாவட்டம், பசுவந்தனை அருகே உள்ள பூங்காவரநத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் நாகராஜன். இவரது மகள் முருகலெட்சுமி (வயது 22). பிளஸ் 2 முடித்துவிட்டு, நர்சிங் படித்து வந்தார். படிப்பில் போதிய கவனம் செலுத்த முடியாததால் மன வேதனையில் இருந்து வந்தாராம். இந்நிலையில் அவர் வியாழனன்று தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து பசுவந்தனை போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பேருந்தில் பெண்ணிடம் ரூ.4.5 லட்சம் நகை பணம் திருட்டு
தூத்துக்குடி, மே 31- மெஞ்ஞானபுரம் அருகே பேருந்தில் பயணம் செய்த பெண்ணிடம் ரூ.4.5 லட்சம் நகை, பணம் திருடுபோனது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.தூத்துக்குடி மாவட்டம் மெஞ்ஞானபுரம் ரெனிஸ் தெருவைச் சேர்ந்தவர் வேதமுத்து மனைவி கமலா (63). இவர், வியாழனன்று நாசரேத் செல்வதற்காக மெஞ்ஞானபுரம் பஸ் ஸ்டாப்பில் பஸ் ஏறியுள்ளார். பஸ்சில் பயணம்செய்தபோது அவரது கைப்பை திடீரென மாயமானது. அதில், ரூ.60ஆயிரம் பணம், மற்றும் 30 பவுன் தங்க நகைகள்வைத்திருந்தாராம். இதன் மொத்த மதிப்பு ரூ.4.5 லட்சம் ஆகும். இதனை மர்ம நபர்கள் திருடியிருக்கலாம் எனத்தெரிகிறது. இது தொடர்பாக நாசரேத் காவல் நிலையத்தில்கமலா புகார் செய்துள்ளார். இன்ஸ்பெக்டர் சகாய காந்திவழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
ஸ்கூட்டர் கவிழ்ந்து விபத்து: செவிலியர் பரிதாபச் சாவு
தூத்துக்குடி, மே 31- மாசார்பட்டி அருகே ஸ்கூட்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அரசு ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர் பரிதாபமாக இறந்தார்.தூத்துக்குடி மாவட்டம், மாசார்பட்டி அருகே உள்ள அச்சன்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் முனியசாமி மனைவி விஜயலெட்சுமி (35). இந்த தம்பதியருக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். விஜயலெட்சுமி நாகலாபுரததில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியராக பணிபுரிந்து வருகிறார். வியாழன் மாலை வேலைமுடிந்து தனது வீட்டிற்கு ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தார்.அப்போது சாலையில் கிடந்த சரலைக் கற்கள் மீதுவாகனம் சென்றபோது நிலை தடுமாறு கீழே விழுந்தார்.இதில் தலையில் பலத்த காயம் அடைந்த அவர், அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்ப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி வெள்ளியன்று காலை இறந்தார். இதுகுறித்து மாசார்பட்டி போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாவல்பழ சீசன் தொடக்கம்
திருநெல்வேலி, மே 31-நெல்லையில் நாவல்பழ சீசன் தொடங்கியுள்ளது.ஆண்டுதோறும் ஜூன் மாதத் தொடக்கத்தில் நாவல்பழ சீசன் தொடங்கும். இந்த ஆண்டு சில நாள்களுக்கு முன்பாகவே நாவல் பழம் வரத் தொடங்கியுள்ளது. சீதா, அன்னாசி, மாம்பழம் உள்ளிட்டவை சீசனுக்கு ஏற்ப சாலையோரக் கடைகள், தள்ளுவண்டிக் கடைகள், பழக்கடைகளில் விற்பனைக்கு வரும். தற்போது அனைத்து சாலையோரக் கடைகளிலும் நாவல் பழங்கள் விற்பனைக்கு குவிந்துள்ளன. இப்பழத்தில் பலவித மருத்துவக் குணங்கள் இருப்பதால் மக்கள் இதை விரும்பி வாங்கிச் செல்கின்றனர். எனினும், விலையில் பெரிய மாற்றம் ஏதும் இல்லை, கால் கிலோ ரூ.60க்கு நாவல் பழம் விற்பனை ஆகி வருகிறது.
கொக்கிரகுளம் பகுதிகளில் இன்று மின்நிறுத்தம்
திருநெல்வேலி, மே 31-நெல்லை மாநகரம் கொக்கிரகுளம் சுற்றுவட்டார பகுதிகளில் சனிக்கிழமை (ஜூன் 1) மின்விநியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இதுதொடர்பாக தமிழ்நாடு மின்சார வாரியத்தின் நெல்லை நகர்ப்புற செயற்பொறியாளர் முத்துக்குட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது- கொக்கிரகுளம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ள இருப்பதால் சனிக்கிழமை காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை நெல்லை சந்திப்பு, கொக்கிரகுளம், மீனாட்சிபுரம், மணிமூர்த்தீஸ்வரம், உடையார்பட்டி, முருகன்குறிச்சி, திருவனந்தபுரம் சாலை, வடக்கு மற்றும் தெற்கு புறவழிச்சாலை, வண்ணார்பேட்டை, குருந்துடையார்புரம், குறிச்சி, நத்தம் உள்ளிட்ட பகுதிகளில் மின்விநியோகம் நிறுத்தப்படும்.இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருந்தது.