அனைவரும் சமமென நினைத்திடு
அமைதியை உலகில் நாட்டிடு
அன்பைப் பிறரிடம் செலுத்திடு
அதிகாரப் போக்கினைத் துரத்திடு!
அறிவை நாளும் பெருக்கிடு
அடிமை வாழ்வினை விலக்கிடு
அகத்தில் வாய்மை புதைத்திடு
அழகாய்த் தமிழில் பேசிடு!
அறிவின் காலைத் தொழுதிடு
அன்பால் தீமை துரத்திடு
ஆசை வளர்ந்தால் அணையிடு
அதையே அளவாய் மதிப்பிடு!
உயர்வைப் பெறவே உழைத்திடு
உறவைத் தினமும் போற்றிடு
உண்மை பேசப் பழகிடு
உலகு போற்றச் செயல்படு!
நல்லதை நாளும் செய்திடு
நானிலம் போற்ற வாழ்ந்திடு
வள்ளுவன் குறள்நெறி ஏற்றிடு
வாழ்க்கை இனித்திடும் மகிழ்ந்திடு!