tamilnadu

img

இவர்கள் சூழல் போராளிகள் -

பன்னாட்டு நிறுவனங்கள், தங்கள் நாட்டின் அரசாங்கங்களை நீதிமன்றத்திற்கு இட்டுச்சென்று  சூழலுக்காகப் போராடி வென்ற பழங்குடியின செயல் வீரர்கள், வழக்கறிஞர்களுக்கு 2022ஆம் ஆண்டிற்கான கோல்டு மேன் சூழல் விருது வழங்கப்பட்டுள்ளது. சூழ லுக்காக உயிரை துச்சமாக மதித்துப் போராடும் சூழலிய லாளர்களுக்கு ஆண்டுதோறும் இந்த விருதுகள் வழங்கப் படுகின்றன. 1989இல் நிறுவப்பட்ட இந்த விருது இதுவரை 93 நாடுகளைச் சேர்ந்த 213 சூழல் போராளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.  பணபலமும் ஆள்பலமும் உடைய பன்னாட்டு நிறு வனங்களை எதிர்த்து சூழலுக்ககாப் போராடுவது என்பது  உயிருக்கே ஆபத்தாக முடியும் ஒன்று என்றாலும் இவர்கள்  அன்னை பூமியைக் காக்க போராடி வென்றுள்ளனர். ஒன்றுபட்ட சமூகத்தின் செயல்பாடு, விடாமுயற்சி, நீதி  கோரிப் போராடியது ஆகியவை இவர்களை வெற்றிப் பாதைக்கு இட்டுச்சென்றது.

டச்சு அரசை நீதிமன்றத்திற்கு இழுத்தவர்

முன்பு புதைபடிவ எரிபொருள் துறையுடன் தொடர்பு கொண்டு பின்னாளில் சூழல் காக்க முனைப்புடன் செயல்படத் தொடங்கிய பொதுமக்களின் பங்களிப்பைப் பெருமளவில் திரட்டி, குடிமக்களை காலநிலை சீரழிவிலிருந்து காக்கத் தவறிய டச்சு அரசிற்கு எதிராக  வழக்கு தொடுத்து வென்று பசுமைக்குடில் வாயுக்கள் உமிழ்வைக் குறைக்கவைத்து இது போன்ற வழக்குகளை பல நாடுகளிலும் தொடரக் காரணமாக இருந்த மார்ஜன் மினஸ்மா (Marjan Minnesma) (55) விருது பெற்றவர்களில் ஒருவர்.'

நைஜர் டெல்டாவைக் காப்பாற்றியவர் 

விருது பெற்றவர்களில் மற்றொருவர் நைஜீரியாவைச் சேர்ந்த 52 வயதான சூழல் வழக்கறிஞர் சீமா வில்லியம்ஸ்  (Chima Williams). இவர் நைஜர் டெல்டாவில் ராயல் டச்சு ஷெல் (Shell) கம்பெனி பரவலாக ஏற்படுத்திய சூழல்,  சமூகப் பொருளாதார நாசத்திற்கு எதிராக தி ஹேக் நீதிமன்றத் தில் இருபது ஆண்டுகள் போராடி வெற்றி பெற்றார்.

தங்கவயல்களை மூடவைத்த இளைஞர்கள்

தென்னமெரிக்க நாடான  ஈக்வெடாரில் இரு இளைஞர்கள்  காஃபான் (Cofaan) பழங்குடியினத்தவருக்கு பாரம்பரிய மாக சொந்தமாக இருந்த உயிர்ப்பன்மயத்தன்மை செழுமை மிக்க 32,000 ஹெக்டேர் மழைக்காடுகளை அவர்களின் ஒப்புத லின்றி 52 தங்கச் சுரங்கங்கள் தோண்ட தனியாருக்கு அனுமதி அளித்த அரசிற்கு எதிராக இயக்கம் தொடங்கினர். மக்களை ஒன்றுதிரட்டி இதற்காக நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து 2018 அக்டோபரில் வென்ற அலெக்ஸ் லூசிடாண்ட்டே (Alex Lucitante) (29), அலெக்சாண்ட்ரா நார்வீஸ் (Alexandra Narvaez) (20) ஆகியோர் விருதை இணைந்து பெற்றுள்ளனர். சமுதாயத்தால் ஏற்பாடு  செய்து நடத்தப்பட்ட வனப்பகுதி ரோந்து, கேமராக்கள், புவி  தகவல் தொழில்நுட்பம் (GIS), ட்ரோன்கள் ஆகியவை மூலம் பெறப்பட்ட விவரங்களே நீதிமன்றத்தில் முக்கிய சாட்சிகளாக இருந்தன.

முதல் இளம்பெண்

விருது பெற்றவர்களில் ஒருவரான நார்வீஸே லா  கார்டியா (La Guardia) என்று அழைக்கப்படும் வனப் பகுதியை ரோந்து சுற்ற மற்ற ஆண் போராளிகளுடன் இணைந்த முதல் பெண். இது மற்ற பழங்குடி பெண்களையும் காடு காக்கும் ரோந்துப் பணியில் ஈடுபடத் தூண்டியது. பெண்களாக இருக்கும் நாங்கள் அன்னை பூமியைக் காக்க, எங்கள் வருங்கால சந்ததியினருக்காகக் குரல் கொடுக்க, எங்கள் வாழ்க்கை முறையை தற்காத்துக்கொள்ள  போராடத் தயாராகவேண்டும் என்கிறார் நர்வீஸ்.

பூமியில் ஆபத்தான இடம்

சூழல் உரிமை, நிலம் தொடர்பான உரிமையை காப்பதில் உலகில் மிக ஆபத்தான இடம் தென்னமெரிக்கா. பழங்குடி யினரை கலந்தாலோசிக்காமல் பாரம்பரிய வனப்பகுதிகள் அவர்களிடமிருந்து பறிக்கப்படுவது இங்கு வாடிக்கையாக நடைபெறுகிறது. 2015இல் கோல்டு மேன் விருது பெற்ற லெங்கா (Lenca) இனத்தைச் சேர்ந்த பழங்குடியினத் தலைவர் பெர்டா காசியர்ஸ் (Berta Caceres) 2016ல் வனப்பகுதியில் முறையான மக்கள் கருத்து கேட்பு இல்லாமல்ஹாண்டுரஸ் அரசால் அனுமதியளித்து பந்நாட்டு நிதியுதவியுடன் கட்டப்படும் நீர்மின் நிலைய அநைக்கட்டு திட்டத்தை  எதிர்த்துப் போராடியதற்காக கொல்லப்பட்டார்.

தாய்லாந்தின் ஓய்வுபெற்ற ஆசிரியர்

தாய்லாந்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ஆசிரியர் நிவாட் ராய்க்கிவ் (Niwat Roykaew) உணவு, மருந்து, நீர்ப்பாசனம், கலாச்சாரம் என அனைத்திற்கும் ஆதாரமாக மக்கள்  நம்பியிருக்கும் மெகாங் (Mekong) நதியில் செயல்படுத்தப் படவிருந்த கால்வாய் திட்டத்திற்கு எதிராக மக்களை ஒன்றுதிரட்டி போராடி வெற்றிபெற்றார். ஆசியாவில் சூழலை  நாசப்படுத்தும் அரசுகளின் ஒத்துழைப்புடன் நடக்கும் இது போன்ற பிரம்மாண்ட திட்டங்களுக்கு எதிராகப் போராடி பெற்ற அபூர்வ வெற்றி இது  என்று கருதப்படுகிறது.

புற்றுநோயுடன் போராடிய வீரப்பெண்

பன்னாட்டு புதைபடிவ எரிபொருள் நிறுவனங்கள் கடும் எதிர்ப்புகளுக்கு இடையிலும் காசு பார்க்கும் சுயநல  வேலையைத் தொடர்ந்துகொண்டிருக்கின்றன. எண்ணெய்  வயல்களுடன் நட்புடைய அமெரிக்காவின் மிக மோசமான மாசுபட்ட நகரமான லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் எண்ணைக்கிணறு மாசினால் பாதிக்கப்பட்டு மற்ற குழந்தைகளுடன் அதை மூட நடந்த போராட்டத்தில் நலாலி கோபோ (Nalleli Cobo) என்ற ஒன்பது வயது சிறுமி  பங்கேற்றார். தாயுடன் அவர் வாழ்ந்த பகுதியில் வீடுகளின் கதவு களைத் தட்டி புகார்களை தயாரித்தார். பேரணிகளில் பங்கேற் றார். டவுன் ஹாலில் நடந்த கூட்டத்தில் எண்ணெய்க் கிணறு உருவாக்கிய சூழல் மாசினால் ஏற்பட்ட இடை விடாத தலைவலி, மூக்கில் நீர்வழிதல், உடல் வலி போன்ற வற்றால் தான் துன்பப்படுவதை எடுத்துக்கூறினார். 2015இல் மற்றவர்களுடன் இணைந்து தெற்கு மத்திய  இளைஞர் தலைமைப்பண்பு கூட்டமைப்பு (The South Central Youth Leadership Coalition) என்ற இயக்கத்தைத்  தோற்றுவித்தார். இந்த அமைப்பு நகர நிர்வாகத்திற்கு  எதிராக சூழல் இனவெறிப் பாகுபாடு (Environmental racism) காட்டப்படுவதை குறிப்பாக இலத்தீன், கறுப்பினத்தவர் வாழும் பகுதிகளில் முறையற்றவகையில் எண்ணெய்க்கிணறுகள் தோண்ட அனுமதி அளிக்கப்படுவதை சுட்டிக்காட்டி போராடியது.

இதன் பலனாக நகரக் கவுன்சில் நடைமுறையில் இருக்கும் எண்ணெய்த் திட்டங்களை படிப்படியாக மூட முடிவுசெய்தது. இது மிகப்பெரிய வெற்றியாகக் கருதப்படுகிறது. இதனால் இப்போது 580,000 மக்கள் கால் மைலுக்கும் குறைவான தூரத்தில் ஒரு எண்ணைக்கிணறுக்கு அருகில் வாழும் அவலநிலை மாறும். 19 வயதில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு கீமோ சிகிச்சை எடுக்கத் தொடங்கிய கோபோ “என்னைப் போல வேறெந்த குழந்தைக்கும் இனி வரும்காலத்தில் வீட்டுக்கு வெளியில் விளையாடும் உரிமை மறுக்கப்படக்கூடாது என்பதற் காகவே நான் தொடர்ந்து போராடினேன்” என்கிறார். 21 வயதாகும் இந்த இளம் பெண் பல்கலைக்கழகத்தில் அரசியல் கற்கிறார். 2036 அமெரிக்க அதிபர் தேர்தலில் தான் போட்டியிடப்போவதாக நம்பிக்கையுடன் கூறுகிறார்.  கையில் அதிகாரமில்லை என்று கருதி தங்கள் சக்தியை உணராமல் இருக்கும் பாமர மக்கள் தங்களுக்கும் கேள்வி கேட்க உரிமை உண்டு என்பதையே விருது பெற்ற இந்த போராளிகள் உணர்த்துகின்றனர். பல கோடி மில்லியன் டாலர்கள் நிதியுடன் பன்னாட்டு பணக்கார நிறுவனங்கள் ஆட்சியாளர்கள் ஒத்துழைப்புடன் செய்யும் சூழலை அழிக்கும் திட்டங்களுக்கு எதிராக போராடி ஜெயித்துக்காட்டமுடியும் என்பதை இப்போராளிகள் எடுத்துக்காட்டுகின்றனர்.