ஒரு காட்டில் ஒரு பெரிய புளிய மரம் இருந்தது. அந்தப் புளியமரத்தில், அணில், ஓணான், பச்சோந்தி, மரநாய், காகம், மைனா, காட்டுப்புறா, தவிட்டுக்குருவி, சிட்டுக்குருவி, தேன் சிட்டு, தையல் சிட்டு, என்று எல்லாவிதமான உயிர்களும் குடியிருந்தன. அந்தப்புளிய மரத்தின் பொந்தில் ஒரு அம்மா அணில் தன் இரண்டு குட்டிகளுக்கும் சிறு தானியங்களைச் சவைத்து கூழாக்கி வாயில் ஊட்டி வளர்த்துக் கொண்டிருந்தது. குட்டிகள் இரண்டும் பார்ப்பதற்கு அழகாக இருந்தன. அதன் உடலில் சாம்பல் நிற உரோமங்கள் வளரத் தொடங்கியிருந்தன. முதுகில் கருப்பு நிறத்தில் மூன்று கோடுகள் தெரிந்தன. கண்களை உருட்டி உருட்டி அந்தக் குட்டிகள் பார்க்கும்போது அவ்வளவு அழகாக இருந்தது.
இரண்டு குட்டிகளில் மூத்தது கொஞ்சம் குறும்பு. அடிக்கடி பொந்தை விட்டு வெளியே வந்து விடும். அருகில் இருக்கும் கிளைகளில் தவ்விக் குதிக்கும். கீச் கீச் கீச் என்று கத்தும். திரும்பி வேகமாகப் பொந்துக்குள் ஓடி விடும். ஆனால் இளையது பயந்தாங்குளி. பொந்தை விட்டு வெளியவே வராது. காய்ந்த குச்சிகள் கீழே விழும் சத்தம் கேட்டாலும் பயந்து நடுங்கும். அம்மா அணில், “ பயப்படாதேடா செல்லம்.. பயந்தால் நம்முடைய மூளை வேலை செய்யாது.. தைரியமும் துணிச்சலும் வேண்டும்..” என்று அதன் உடல் முழுவதும் நாவால் தடவிக் கொடுத்துத் தைரியம் சொல்லும். அம்மா அருகில் இருக்கும் போது கொஞ்சம் தைரியம் வரும். அம்மா அருகில் இல்லை என்றாலோ அவ்வளவுதான். எங்கிருந்து தான் வருமோ? மெல்ல மெல்ல பயம் வந்து விடும். அந்தப் புளிய மரத்துக்குக் கீழே ஒரு பாம்பு அங்கேயிருந்த எறும்புப்புற்றில் வசித்து வந்தது. மரத்தில் கூடு கட்டும் பறவைகளின் முட்டைகளையும் சிறு குஞ்சுகளையும் கீழே தரையில் ஓடும் எலிகளையும் தவளைகளையும் சாப்பிட்டது. ஒருநாள் அந்தப் பாம்புக்கு எந்த உணவும் கிடைக்கவில்லை. மெல்ல புளீய மரத்தின் மீது ஊர்ந்து ஏறியது. நாக்கால் முகர்ந்து கொண்டே அணில் குட்டிகள் இருந்த பொந்தை நோக்கி வந்தது. அப்போது அங்கே அம்மா அணில் இல்லை. இரை தேடப் போயிருந்தது. சரசரவென்ற சத்தம் கேட்டு மூத்த அணில் லேசாய் எட்டிப் பார்த்தது. கீழே பாம்பின் வால் தெரிந்தது. அவ்வளவு தான்.
தம்பி.. ஆபத்து… ஓடிரு.. தம்பி ஆபத்து.. ஓடிரு.. “ என்று சொல்லிக் கொண்டே மேலே இருந்த கிளைக்குத் தாவி ஓடியது.
தம்பி அணிலுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. இதுவரை வெளியில் போனது இல்லை. கிளைகளில் தாவியது இல்லை. இப்போது எப்படித் தப்பிப்பது என்று தெரியவில்லை.
அவ்வளவுதான்.. முடிந்தது நம் கதை.. என்று தம்பி அணில் நினைத்தது.
பாம்பு பொந்துக்கு அருகில் வந்து விட்டது.
அப்போது எங்கிருந்தோ அம்மாவின் குரல் கேட்டது,
“ தம்பி குதி.. தைரியமாகக் குதி..”
பாம்பு பொந்துக்குள் தலையை நீட்டியது. தம்பி அணிலுக்கு எங்கிருந்து தான் அவ்வளவு துணிச்சல் வந்ததோ, பாம்பின் தலையைத் தாண்டி ஒரே குதி!
சொய்ய்ய்ய்ங்ங்….
கீழே இருந்த கிளையில் வந்து குதித்து நின்றது. அம்மா அணிலும் அண்ணன் அணிலும் கை தட்டிப் பாராட்டினார்கள்.
தம்பி அணிலுக்குத் துணிச்சல் வந்து விட்டது.