நெசவுத்துறை எதிர்கொள்ளும் பல்வேறு நெருக்கடிகள் குறித்து நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு ஒன்றிய ஜவுளித்துறை இணை அமைச்சர் பபித்ர மார்கெரிட்டா அளித்துள்ள பதில் ஏமாற்றமளிப்பதாகவும், பொறுப்பற்றதாகவும் உள்ளதாக மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கடுமையாக விமர்சித்துள்ளார். நாடாளுமன்றத்தின் 2024 டிசம்பர் 17 அன்று விவாதத்துக்கு வந்த கேள்வி எண் 3515-இல் நெசவாலைகள் மூடப்படுவதால் ஏற்படும் வேலையிழப்பு, கச்சாப் பொருட்களின் விலையேற்றம் காரணமாக தொழில்துறையும் ஏற்றுமதியும் பாதிக்கப்பட்டுள்ள நிலை, பருத்தி மற்றும் பிற கச்சாப் பொருட்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், வங்கிக் கடன் கிடைப்பதை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகள் குறித்த முக்கிய கேள்விகளை எழுப்பியிருந்தார். இந்த கேள்விகளுக்கு நேரடி பதில் அளிக்காத அமைச்சர், பி.எம். மித்ரா ஜவுளிப் பூங்காக்கள், கைத்தறி துணி உற்பத்தி ஊக்குவிப்புத் திட்டம், தேசிய தொழில்நுட்ப ஜவுளி இயக்கம், சமர்த் திறன் மேம்பாட்டுத் திட்டம், பட்டு சமக்ர-2, தேசிய கைவினைத் திட்டம், கைத்தறி மேம்பாட்டுத் திட்டம், கச்சாப் பொருள் வழங்கல் திட்டம் என அரசின் திட்டங்களின் பட்டியலை மட்டுமே வழங்கியுள்ளார்.
பருத்தி சார்ந்த பிரச்சனைகளுக்கு ஜவுளி ஆலோசனைக் குழு அமைப்பு, கஸ்தூரி காட்டன் பாரத் பிராண்ட் அறிமுகம், நீண்ட இழை பருத்திக்கான அடிப்படை சுங்க வரி நீக்கம், ஆண்டுதோறும் குறைந்தபட்ச ஆதார விலை அறிவிப்பு ஆகிய நான்கு நடவடிக்கைகளை மட்டுமே குறிப்பிட்டுள்ளார். இந்த நடவடிக்கைகள் எதுவும் தற்போதைய நெருக்கடியைச் சமாளிக்க போதுமானதல்ல என்று சுட்டிக்காட்டியுள்ள எம்.பி., நெசவாலைகள் மூடப்படுவதை தடுக்க எந்த உடனடி நடவடிக்கையும், தொழிலாளர்களின் வேலைவாய்ப்பை பாதுகாக்க குறிப்பிட்ட திட்டமும், கச்சாப் பொருட்களின் விலையை கட்டுப்படுத்த தீவிர முயற்சியும், ஏற்றுமதியை மீட்டெடுக்க புதிய முன்முயற்சிகளும், வங்கிக் கடன் நெருக்கடிக்கு தீர்வும் இல்லை என்பதை சுட்டிக்காட்டியுள்ளார். ஒன்றிய அரசு உடனடியாக பருத்தி விலையைக் கட்டுப்படுத்த சிறப்பு தலையீடு, நெசவாலைகளுக்கு அவசரகால நிதி உதவி, வங்கிக் கடன் வழங்குவதை எளிதாக்க புதிய வழிகாட்டுதல்கள், ஏற்றுமதிக்கான சிறப்பு ஊக்கத்தொகை, நெசவுத் தொழிலாளர்களுக்கு சிறப்பு நிவாரணத் தொகை ஆகிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும், இல்லையேல் நாட்டின் நெசவுத்துறை மோசமான நெருக்கடியை எதிர்கொள்ள நேரிடும் என்றும் எச்சரித்துள்ளார்.