இலங்கைத் தமிழர்கள், இஸ்லாமியர்கள், மலையகத் தமிழர்கள் சமத்துவத்துடன் வாழவும் - மாகாணங்களுக்கான அதிகாரப் பரவலை உறுதி செய்திடவும் இலங்கை அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. அத்தீர்மானம் வருமாறு: இலங்கையில் தமிழ் மக்கள் சமத்துவமின்மைக்கும், நீண்டகாலமாக இனவெறி தாக்குதலுக்கும் ஆளாகி வந்த நிலையில், அது உள்நாட்டு யுத்தத்திற்கும், அமைதியின்மைக்கும் வழி வகுத்தது. அதனால் அனைத்துப் பகுதி மக்களும் பாதிப்புக்கு உள்ளாகினர். தற்போது இலங்கைத் தமிழர்கள் உட்பட அனைத்து சிறுபான்மை மக்களின் ஆதரவு பெற்ற தேசிய மக்கள் சக்தி, அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி பீடத்தில் அமர்ந்துள்ளது. இச்சுமூகமான சூழ்நிலையைப் பயன்படுத்தி சமத்துவத்தையும் மாகாணங்களுக்கான அதிகாரப் பரவலையும் உறுதி செய்ய வேண்டுமென இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது. தற்போது நடத்தப்படாமல் உள்ள இலங்கையின் அனைத்து மாகாணங்களுக்குமான தேர்தலை மிக விரைவாக நடத்தி, மாகாண சபைகளுக்கு உரிய அதிகாரங்களை வழங்குவதன் ஊடாக , தமிழ் மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் இலங்கை அரசு முன் வர வேண்டும் என இம் மாநாடு கேட்டுக் கொள்கிறது . இலங்கைத் தமிழர்கள், இஸ்லாமியர்கள் மலையகத் தமிழர்களின் நம்பிக்கையை பெறும் வகையில் உரிய கருத்துப் பரிமாற்றங்களை நடத்தி தீர்வுகளை உருவாக்க வேண்டும். மாகாணங்களுக்கான அதிகாரப் பரவலாக்கத்தின் போது எந்த வித கட்டுப்பாடுகளும் விதிக்காது, கல்வி, சுகாதாரம், விவசாயம், வீட்டுவசதி, நிலம், காவல்துறை போன்ற அம்சங்களில் மாகாண அரசாங்கங்களுக்கு அதிகாரம் வழங்கப்பட வேண்டுமென இம் மாநாடு வலியுறுத்துகிறது. இவ்வாறு தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்தை கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் சு.வெங்கடேசன் எம்.பி. முன்மொழிய, மாநிலக் குழு உறுப்பினர் எம்.சின்னத்துரை எம்எல்ஏ வழிமொழிந்தார்.