சுதந்திரப் போராட்ட வீரர்களான பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் என்ற பெயர்கள் நமக்கு மிகவும் பரிச்சயமானவை. அவர்களில்,1908 ஆகஸ்ட் 24 அன்று மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் கேட் (Khed) எனும் நகரில் பிறந்தவர் சிவ்ராம் ஹரி ராஜகுரு. இந்தியாவை அடிமைப்படுத்திய ஆங்கிலேய அரசின் அட்டூழியங்களுக்கு எதிரான மனநிலை கொண்ட இவரது குடும்பம், ஆங்கிலேய எதிர்ப்பு, தேசப்பற்று உணர்வுகளைக் கொண்டிருந்தது. இவர் தனது இளமைப் பருவத்தில் இந்துஸ்தான் சோசலிஸ்ட் குடியரசுக் கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். இந்த கழகம் 1928 இல் சந்திரசேகர் ஆசாத், பகத்சிங் உள்ளிட்டோரால் நிறுவப்பட்டது. ராஜகுரு ஒரு சிறந்த துப்பாக்கிச் சுடும் வீரராவார். சுதந்திரப் போராட்டத் தலைவர் லாலா லஜபதிராய் கொலை செய்யப்பட்டதற்கு பழிக்குப் பழியாக, காவல் உதவி கண்காணிப்பாளர் சாண்டர்சை கொன்றதற்காக ஆங்கிலேயே அரசாங்கம், பகத்சிங், சுகதேவ் உட்பட இவருக்கும் தூக்குத் தண்டனை விதித்தது. இவரது அர்ப்பணிப்பு, தியாகம், வீரத்துக்கு மரியாதை செய்யும் வகையில், மத்திய தபால்துறை சிறப்புத் தபால்தலை வெளியிட்டதும், இவர் பிறந்த நகரான கேட் நகருக்கு ராஜ்குருநகர் என பெயரிடப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.