மார்க்சிஸ்ட் கட்சிக்கு டிசம்பர் 3 இயக்கம் பாராட்டு
பார்வை மாற்றுத்திறனாளியை மாவட்டச் செயலாளராக தேர்ந்தெடுத்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு டிசம்பர் 3 இயக்கம் பாராட்டு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக டிசம்பர் 3 இயக்கத்தின் தலைவர் டி.எம்.தீபக், பொதுச்செயலாளர் எஸ்.அண்ணாமலை விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சமூக நீதி என்பது சம வாய்ப்பு கொடுப்பதுதான். இதை நிரூபிக்கும் வகையில் மாற்றுத்திறனாளிகள் உரிமையும் சமூக நீதிதான் என்பதற்கு உதாரணமாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செங்கல்பட்டு மாவட்டச் செயலாளராக பார்வை மாற்றுத்திறனாளி பி.எஸ்.பாரதி அண்ணா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்திய அரசியல் வரலாற்றில் ஒரு புரட்சியை ஏற்படுத்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு டிசம்பர் 3 இயக்கம் மனமார்ந்த வாழ்த்துக்களை யும் நன்றியும் தெரிவித்துக் கொள்கிறது. இதை முன்னுதாரணமாக கொண்டு அனைத்து அரசியல் கட்சிகளும், ஐநா உடன்படிக்கை 29(பி)-யின் படி மாற்றுத்திறனாளிகள் உரிமையை நிலைநாட்ட வேண்டும். அமைப்பின் உயர் பதவி களில் திறமையும், அனுபவமும் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு சம வாய்ப்புகள் கொடுக்க வேண்டும். மாற்றுத்திற னாளிகளின் உரிமையை (சமூக நீதியை) நிலை நாட்ட வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில்கூறப்பட்டுள்ளது.
“மார்க்சிஸ்ட் கட்சியின் செங்கல்பட்டு மாவட்ட மாநாடு நிறைவடைந் துள்ளது. இதில் கட்சியின் மாவட்டக்குழுவிற்கு புதிய செயலாளராக தோழர் பாரதி அண்ணா தேர் வாகியுள்ளார். அவர் வழக்கறிஞர். 100சதவீதம் பார்வை மாற்றுத்திறனாளியும் ஆவார். இந்தியாவிலேயே பார்வை மாற்றுத்திறனாளி ஒருவர் ஒரு கட்சியின் மாவட்டச் செயலாளராக தேர்வாகி செயல்பட முடியும் என்ற முன்னுதார ணத்தை வழங்கி இருக்கும் செங்கல்பட்டு மாவட்டக்குழுவிற்கும் மாவட்டச் செயலாளர் பாரதி அண்ணாவிற்கும் எனது புரட்சிகர வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன்”. - சிபிஎம் மாநிலச் செயலாளர் கே.பால கிருஷ்ணனின் இந்தப் பதிவு வெளியானவுடன் சமூக ஊடகங்கள் அனைத்திலும் வைர லானது. சமவாய்ப்பு என்பது சமூக நீதியின் ஒரு பகுதி என்பதை நிலைநாட்டியுள்ள மார்க்சிஸ்ட் கட்சியின் மகத்தான ஊழியர்களில் ஒருவரான பாரதி அண்ணாவின் பயணம். இந்திய மாணவர் சங்கத்தில் துவங்கியது. ஒன்றுபட்ட காஞ்சிபுரம் - திருவள்ளூர் மாவட்டத்தில் மதுராந்தகம் அருகே உள்ள பாக்கம் எனும் கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர் பாரதி அண்ணா. ஆசிரியர் பலராமன் -பத்மா வதி தம்பதியின் மூத்தமகன். தனது பள்ளிப் படிப்பை ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளி பாக்க த்தில் தொடங்கியவர். நடுநிலை கல்வியை மது ராந்தகம் இந்து கார்னேஷன் பள்ளியிலும், உயர்நிலை மேல்நிலைப்பள்ளி படிப்புகளை இந்து மேல்நிலைப் பள்ளியிலும் முடித்தார். சென்னை மீனம்பாக்கம் ஏ.எம்.ஜெயின் கல் லூரியில் இளநிலை கணிதம் பட்டப் படிப்பை முடித்தவர். பிறகு, சென்னை அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் சட்டப் படிப்பை நிறைவு செய்தார்.
இந்திய மாணவர் சங்கத்தில் துவங்கிய பயணம்
ல் மாணவராக இருந்தபோது இந்திய மாணவர் சங்கத்தின் அறிமுகம் கிடைக்கிறது. முதல் சந்திப்பிலேயே தன்னை மாணவர் சங்கத்தில் இணைத்துக்கொண்டு இடதுசாரிப் பாதையில் தனது பயணத்தை துவக்கினார். இதற்கு முழுமுதற் காரணம் அவரது தந்தை ஆசிரியர் பலராமன். ஆசிரியர் அரங்கில் அவ்வப்போது நடக்கும் நிகழ்ச்சிகளுக்கு சிறுவ னாக இருந்த பாரதி அண்ணாவை அழைத்துச் செல்வது வழக்கம். அத்துடன் ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி உருவானபோது மதுரையில் இருந்து சென்னை வரை நடந்த சைக்கிள் பிரச்சா ரத்தில் பங்கேற்றார். அப்போது மாச. முனுசாமி, வழக்கறிஞர் டி.கிருஷ்ணராஜ் போன்ற தலை வர்களுடன் ஏற்பட்ட நட்பு தோழமையாக உரு வெடுத்து பிறகு குடும்ப உறவுகளாக மாறியது. தனது சொந்த கிராமமான பாக்கத்தில் சாதியச் சங்கம் அசுர வேகம் எடுத்த அந்த காலகட்டத்தில், இந்திய மாணவர் சங்கத்தினால் ஏற்பட்ட முற்போக்கு சிந்தனையாளர்களின் தொடர்பால், தற்போதைய தீக்கதிர் துணை ஆசிரியர் சி.ஸ்ரீராமுலுவுடன் இணைந்து பாக்கம் கிராமத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க கிளையை உருவாக்கி தலித் மற்றும் தலித் அல்லாதவர்களையும் சங்கத்தில் சேர்த்து, சாதிய மோதல்களை முடிவுக்கு கொண்டு வந்தவர் பாரதி அண்ணா.
பெண் ஒருவரை ஊராட்சி மன்றத் தலைவராக போட்டியின்றி தேர்ந்தெடுக்க கிராமத்தில் ஒற்றுமையை உருவாக்கியது மட்டுமின்றி சமத்துவ வழிபாட்டு உரிமையையும் நிலை நாட்டி சமூக ஒற்றுமை உருவாக்கப்பட்டது. இதற்கிடையில் கல்லூரி படிப்பையும் முடித்தார். பிறகு, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தில் ஒன்றுபட்ட காஞ்சிபுரம் - திருவள்ளூர் மாவட்ட செயற்குழு உறுப்பினராக பணியாற்றி வந்தார். இளம் வயதிலேயே மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியில் தன்னை உறுப்பினராக இணை த்துக் கொண்டார். அவர் மட்டுமல்ல தனது கிரா மத்தில் சி.ஸ்ரீராமுலு உள்ளிட்ட 11 இளம் தோழர் களை ஒன்றிணைத்து கட்சிக்கிளையை உரு வாக்கினார். மிக இளம் வயதில் (22) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வட்ட செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டு சிறப்பாக பணியாற்றி னார். சில ஆண்டுகால இடைவெளிக்குப் பிறகு, சென்னை அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் சேர்ந்து சட்டப் படிப்பை தொடர்ந்தார். மீண்டும் இந்திய மாணவர் சங்கத்தில் இணைந்து மாநிலச் செயற்குழு உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். அன்றைய ஒன்றுபட்ட செங்கல் பட்டு மாவட்டத்தில் இந்திய மாணவர் சங்கத்தின் அமைப்பாளராகவும் பணியாற்றினார். அப்போது காஞ்சிபுரம் பச்சையப்பன் கல்லூரி யில் நடந்த நிகழ்வில் சுதந்திரப் போராட்ட வீரரும் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவருமான தோழர் என்.சங்கரய்யா சொற்பொழிவு நிகழ்த்தியது குறிப்பிடத்தக்கது. மேற்குவங்க மாநிலம் மிட்னாபூரில் நடந்த இந்திய மாணவர் சங்கத்தின் அகில இந்தி மாநாட்டு பிரதிநிதியாகவும் பாரதி அண்ணா சென்று வந்தார்.
கட்சியின் உறுதிமிக்க ஊழியராக...
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் காஞ்சி புரம் மாவட்டக்குழு உதயமான போது அதன் மாவட்டக்குழு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப் பட்டார். பின்னர், மாவட்ட செயற்குழு உறுப்பின ராக உயர்ந்தார். தற்போது, காஞ்சிபுரம் மாவட்ட த்தை இரண்டாக பிரித்தபோது செங்கல்பட்டு மாவட்ட செயற்குழு உறுப்பினராக செயல்பட்டு வந்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாட்டில் மூன்று முறை பிரதிநிதியாக பங்கேற்றிருக்கிறார். சட்டப்படிப்பை முடித்ததும் வழக்கறிஞர் பணியை தொடர்ந்தாலும் கட்சி பணியை முழுநேரமாக செய்து வருகிறார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் தஞ்சை மாவட்டம் குத்தாலம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்ட பணி யாற்றி மறைந்த தோழர் கோ.பாரதிமோகன், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தை உருவாக்கிய தலைவர்களில் ஒருவருமான குஞ்சிதம் ஆகியோரின் மகள் குணவதியைத் திருமணம் செய்து கொண்டுள்ளார். இவருக்கு பாரதி மித்ரா என்கின்ற மகள் உள்ளார்.
1990 ஆம் ஆண்டில் ஜெயலலிதா தலைமை யிலான அன்றைய அதிமுக அரசு உயர்த்திய பேருந்துக் கட்டணத்தை திரும்பப்பெற வலி யுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் நடத்திய மறியல் போராட்டத்தில் கைது செய்யப் பட்டு சென்னை மத்திய சிறையில் 10 நாட்கள் அடைக்கப்பட்டார். போரூர் ராமச்சந்திரா கல்லூரி நிர்வாகத்திற்கு எதிரான போராட்ட அறிவிப்பைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கை யாக கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்ட போது மற்ற தோழர்கள் தலை மறைவாக இருந்து எழுதிக்கொடுத்த கண்டன பேனரை, பாரதி அண்ணாவின் தாயார் பத்மாவதி கிராம தெருக்கள் முழுவதும் கட்டியது குறிப்பிடத்தக்கது.
ஆதாரங்களுடன் வாதாடும் வழக்கறிஞராக...
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்திற்குப் பிறகு, 2000 ஆம் ஆண்டில் வழக்கறிஞராக பதிவு செய்து அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தின் மாநிலக் குழு உறுப்பினராகவும் காஞ்சிபுரம் மாவட்ட வழக்கறிஞராகவும் செயல்பட்டு வழக்கறிஞர்களை ஒன்று திரட்டி னார். பார்வை இல்லை என்றாலும் பிரதி வாத த்தை கூர்மையாகவும், நம்பகத் தன்மையுட னும், ஆதாரங்களுடன் வாதாடுவதில் மிகச் சிறந்த வழக்கறிஞர் என்று வழக்கறிஞர்கள் மட்டுமன்றி சில நீதிபதிகளாலும் பாராட்டு பெற்ற வர் பாரதி அண்ணா.பிறகு, தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட செயலாளராகவும், மாநில துணை பொதுச் செயலாளராகவும் பொறுப்பேற்று பணியாற்றி வந்தார். இக்கால கட்டத்தில், அருட்தந்தை ஜான் சுரேஷ், வழக்கறி ஞர் ஏசு மரியான், விடுதலை சிறுத்தைகளின் விடுதலை செல்வன், பாசறை செல்வராஜ், தன்னார்வ தொண்டு நிறுவன அமைப்பாளர் தயாளன் உள்ளிட்டோருடன் இணைந்து பட்டிய லின மக்களின் உரிமை போராட்டத்திலும் முன்னின்று செயல்பட்டார்.
நிலப் போராட்டங்களில்...
புதிரை வண்ணார், பஞ்சமி நிலம் மீட்பு, சுடுகாட்டு பிரச்சனையில் சம உரிமை கேட்டு போராடிய தச்சூர் ராஜேந்திரன் படுகொலைக்கு நீதி கேட்டு பயணம், சிறுதாவூர், கருங்குழி பள்ளம், உத்திரமேரூர் அருகே திருப்புலிவனம், அச்சரப்பாக்கம் அருகே ஆத்தூர், ஓரத்தூர், விநாயக நல்லூர், திருவள்ளூர் மாவட்டம் கும்மி டிப்பூண்டி சிதிலப்பாக்கம் உள்ளிட்ட 52 க்கும் மேற்பட்ட நில போராட்டம் மற்றும் சமூக ஒடுக்கு முறைக்கு எதிரான போராட்டங்களில் உறுதி யாக நின்று, கண்பார்வையும் உடல் மாற்றமும் ஒரு தடையில்லை என்பதை நிரூபித்துக் காட்டினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 2015 ஆம் ஆண்டில் அமைத்த பட்டியலின - பழங்குடி யினருக்கான சட்ட வரைவு அறிக்கை தயாரிக்கும் ஐந்து பேர் கொண்ட அகில இந்திய கல்வி குழுவில் கேரள மாநில முன்னாள் சட்டப்பேரவைத் தலைவர் கே.ராதாகிரு ஷ்ணன், தற்போதைய ஆந்திர மாநில சிபிஎம் செயலாளர் பி.சீனிவாச ராவ் உள்ளிட்டோருடன் தமிழ்நாட்டிலிருந்து பாரதி அண்ணா இடம் பெற்றிருந்தார். மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் மாநில துணை தலைவராகவும் ஊன முற்றோர் உரிமைக்கான தேசிய மேடையின் தேசிய செயற்குழு உறுப்பினராகவும் இருந்து வருகிறார்.
பார்வை முற்றாக இழந்த போதிலும்...
1971ஆம் ஆண்டில் பிறந்த பாரதி அண்ணா வுக்கு, சிறுவயதிலிருந்தே அதீத பார்வை இழப்பு பிரச்சனை இருந்து வந்தது. இதற்காக, இரு முறை அறுவை சிகிச்சையும் செய்து கொண்டு பார்வை கண்ணாடி அணிந்து கொண்டார். தனது நாற்பதாவது வயதில், 2010ஆம் ஆண்டு க்குப் பிறகுதான் பார்வை இழப்பு பிரச்சனை பெரிய அளவுக்கு தெரிய வருகிறது. அவரது சகோ தரர் பானுகோபன் மருத்துவராக இருப்பதால் மருத்துவ ரீதியிலான அனைத்து சிகிச்சை களும் அளிக்கப்பட்டன. ஆனாலும், நான்காண்டுகளில் அந்த பிரச்சனை 2014 இல் மேலும் தீவிரமானது. நரம்பு பாதிப்பின் காரண மாக குறிப்பிட்ட வயதிற்குப் பிறகு பார்வையை முழுமையாக இழக்க நேரிட்டது. படிப்படியாக அதிகரித்துக்கொண்டே சென்ற இழப்பு 100 விழுக்காடு பார்வையை பாதித்தது. ஆனாலும், வாசிப்பு ஒலி செயலி, திரை வாசிப்பு செயலி போன்ற நவீன தொழில்நுட்ப உதவிகளுடன் வாசித்து வருகிறார். குறிப்பாக தினசரி நாளிதழ்கள், வார பத்திரிக்கைகள் முதல் நூல்களை படித்து விடுகிறார். இதேபோன்று ஆங்கில பத்திரிகைகளையும் எளிதில் படித்து விடுகிறார். குறிப்பாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வெளியீடுகளான தீக்கதிர், பீப்பிள்ஸ் டெமாக்ரசி, மார்க்சிஸ்ட் மற்றும் ஆங்கில இந்து, தமிழ் இந்து, பிரண்ட்லைன் என பல்வேறு இதழ்கள், புத்தகங்களுக்கு ஆன்லைன் மூலம் பணம் செலுத்தி வாசித்து வருகிறார்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் கட்சிப் பணியில் முழுநேரமாக ஈடுபட்டுவரும் பாரதி அண்ணா, கட்சி ஊதியம் எதுவும் பெறுவதில்லை. தற்போது, செங்கல்பட்டு நகரில் நடந்து முடிந்த இருபத்தி மூன்றாவது மாவட்ட மாநாட்டில் மாவட்டச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டு, முத்திரை பதித்துள்ளார் பாரதி அண்ணா.