tamilnadu

img

மதுரை மாநாடு சரித்திரத்தில் இடம் பிடிக்கும் ஒட்டன்சத்திரத்தில் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் பேச்சு

 மதுரை மாநாடு சரித்திரத்தில் இடம் பிடிக்கும்

ஒட்டன்சத்திரம், மார்ச் 5 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திண்டுக்கல் மாவட்டக்குழு சார்பிலான சிறப்புப் பேரவைக் கூட்டம் ஒட்டன்சத்திரத்தில் நடைபெற்றது. இதில், கட்சியின் அகில இந்திய மாநாட்டிற்கான இரண்டாவது தவணை நிதியாக ரூ. 23 லட்சம் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகத்திடம் வழங்கப்பட்டது.  இந்நிகழ்ச்சியில் மார்க்சிஸ்ட் கட்சி மதுரை மாநாடு சரித்திரத்தில் இடம் பிடிக்கும் அளவிற்கு பிரம்மாண்டமாக நடக்க உள்ளது என்று பெ.சண்முகம் தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறுகையில், “சித்திரை திருவிழாவிற்கு முன்பு நடைபெறும் முக்கிய திருவிழா வருகின்ற ஏப்ரல் மாதம் நடைபெற உள்ள நமது மதுரை மாநாடு ஆகும். இந்த மாநாட்டில் நடைபெற போகின்ற பேரணி சரித்திரத்தில் இடம் பெற போகிற பேரணி ஆகும். இந்த பேரணி அனைத்து தரப்பு மக்களாலும் பேசப்படும் என்ற பெருமை வாய்ந்ததாகும். இந்த மாநாட்டிற்கு திண்டுக்கல் மாவட்டம் தனி முத்திரையை பதிக்க வேண்டும். கட்சி வேறுபாடு பார்க்காமல் தொழிலாளர்களின் முன்னேற்றத்திற்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராடி தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது என்று அனைத்து கட்சி தொழிலாளர்களும் பாராட்டி வருகின்றனர். எனவே கட்சி வேறுபாடு பார்க்காமல் சக தொழிலாளர்களிடம் மாநாட்டிற்கு அதிகளவு நிதி திரட்டி கொடுக்க வேண்டும்.

\அதே போல குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், சக தொழிலாளிகள் உள்ளிட்டோரிடம் முடிந்த அளவு நிதி திரட்ட வேண்டும். நமது தோழர்கள் ஒரு நாள் ஊதியத்தை மாநாட்டு நிதியாக வழங்க முன்வரவேண்டும். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொழிலாளி வர்க்கத்திற்கான கட்சி என்று திமுக, அதிமுக உள்ளிட்ட அனைத்து கட்சி தொழிற்சங்கங்களும் நம்மை பாராட்டி வருகிறார்கள். எனவே அனைத்து கட்சி தொழிற்சங்கம் உறுப்பினர்களை அணுகி மாநாடு நிதி திரட்ட வேண்டும்.   மாவட்டக் குழு தீர்மானித்துள்ளபடி அனைத்து கிளை கமிட்டியும் 100% நிதியை வசூல் செய்து வழங்கவேண்டும். அதே போல தெருக்களில் செல்லும்போது அங்குள்ள கடைகள் மற்றும் பொதுமக்களிடம் உண்டியலை காண்பித்து முடிந்த நிதியை பெறுவதற்கு தோழர்களின் குடும்ப உறுப்பினர்கள் நடவடிக்கை எடுக்கவேண்டும்” என அவர் பேசினார். இந்த கூட்டத்தில் மாநில செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் ராமலிங்கம், திண்டுக்கல் மக்களவை உறுப்பினர் ஆர்.சச்சிதானந்தம், மாவட்ட செயலாளர் கே.பிரபாகரன், மாநிலக் குழு உறுப்பினர் ஜி.ராணி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.வசந்தாமணி, மாவட்டக் குழு உறுப்பினர்கள் எஸ்.சிவமணி, வி.சுமதி உள்ளிட்டோர் பங்கேற்று உரையாற்றினார்கள்.