tamilnadu

img

வெள்ளை அங்கி அணிந்து பட்டம் பெற வந்த இந்திய மாணவர் சங்க மாநிலத் தலைவர் காவல்துறையால் வெளியேற்றம்

தஞ்சாவூர், ஏப்.24-  தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற 13- ஆவது பட்ட மளிப்பு விழாவில் மாணவர்களுக்கு தமிழக ஆளுநரும், பல்கலைக் கழக வேந்தருமான ஆர்.என்.ரவி பட்டங்களை வழங்கினார். இந்த விழாவில், பட்டம் பெற வந்த, இதே  பல்கலைக் கழகத்தின் மாணவரான இந்திய மாணவர் சங்க மாநிலத்  தலைவரை காவல்துறையினர் வலுக்கட்டாய மாக வெளியேற்றினர்.  தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் ஞாயிற்றுக்கிழமை 13- ஆவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. விழாவுக்கு வந்தவர்களை வரவேற்று, ஆண்டறிக்கையை பல்கலைக் கழக துணைவேந்தர் வி.திருவள்ளுவன் வாசித்  தார். பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில்  மகேஷ் பொய்யாமொழி, தமிழ் வளர்ச்சித்துறை  செயலாளர் செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில், தமிழ்நாடு எம்ஜிஆர் மருத்து வப் பல்கலைக் கழக முன்னாள் துணைவேந் தர் சுதா சேஷய்யன் பட்டமளிப்பு விழாப் பேருரை யாற்றி பேசியதாவது:  தமிழ் இலக்கியம் என்பது மாபெரும் கடல்,  பற்பல வகைகள், பற்பல முறைகள், தகவல்கள் எனும் பெரும்பரப்பைக் கொண்டது. இன்னும் வெளியே எடுக்கப்படாத தங்கப் பாளங்கள் பல இந்த சுரங்கத்துக்குள் உள்ளன. எடுத்துக் கோர்க்கப்படாத முத்துக்களும், பவளங்களும் இந்தக் கடலுக்குள் மின்னிக் கொண்டுள்ளன. வைரங்களும், கோமேதகங்களும், மாணிக்கங்  களும், மரகதங்களும் தமிழ் எனும் தனிப் பெரும் மலையின் இலக்கிய மடிப்புகளுக்குள் பொதிந்து கிடக்கின்றன. பட்டம் பெற்றுள்ள நீங்கள் இவைதனை வெளிக் கொண்டு வர வேண்டும்” என்றார்.

இதைத் தொடர்ந்து தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, முன்னாள் காவல் அதிகாரிகள் கு. பெரியய்யா, அ.கலியமூர்த்தி உள்பட 302 பேருக்கு, முனைவர் பட்டங்களை வழங்கி உறுதி மொழியினை வாசித்தார். அதனைத் தொடர்ந்து  490 எம்.பில்., மாணவர்கள், 119 முதுகலை மாணவர்கள், 2 இளங்கலை மாணவர்கள், 257  பி.எட். மாணவர்கள், தொலைநிலைக் கல்வியில் பயின்ற 9,670 பேர் என மொத்தம் 10 ஆயி ரத்து 840 பேருக்கு பேருக்கு பட்டங்கள் வழங்  கப்பட்டன. மாணவர் தலைவர் வெளியேற்றம் முன்னதாக தமிழ்ப் பல்கலைக் கழகத்துக்கு  வரும் ஆளுநருக்கு எதிராக சிபிஐ, சிபிஎம் கட்சி யினர் கருப்புக் கொடி போராட்டம் நடத்தப் போவதாக ஏற்கெனவே அறிவித்திருந்தனர். இதையடுத்து தஞ்சாவூரில் தமிழ்ப் பல்க லைக் கழகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஏராளமான காவல்துறையினர் பாதுகாப்பு பணி யில் குவிக்கப்பட்டிருந்தனர். அப்போது விழா அரங்கில் இந்திய மாணவர்  சங்கத்தின் மாநிலத் தலைவர் ஜி.அரவிந்தசாமி, தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் படித்து எம்.பில்., பட்டம் பெற வந்திருந்தார். அவர் வெள்ளை நிற அங்கி அணிந்திருந்தார். 

அப்போது அங்கு வந்த புலனாய்த்துறை மற்றும் தனிப்பிரிவு, க்யூ பிரிவு காவல்துறை யினர் அரவிந்த்சாமியை அரங்குக்கு வெளியே அழைத்துச் சென்று விசாரித்தனர். மேலும் அவர்  கருப்பு சட்டை அணிந்திருந்ததால், அவரிடம் மேலும் விசாரணை நடத்தினர்.  பின்னர் தனி அறைக்கு அழைத்துச் சென்று  அவரிடம் கருப்புக் கொடி உள்ளிட்ட ஏதாவது  பொருட்கள் இருக்கிறதா என சோதனை நடத்தினர்.  சுமார் 30 நிமிடங்கள் அவரை சோதனை நடத்திய பின்னர் மீண்டும் விழா அரங்குக்கு அழைத்து வந்தனர். தொடர்ந்து, ஆளுநர் விழா அரங்கத்துக்குள் வந்ததும், காவல்துறை யினர் அரவிந்த்சாமியை வலுக்கட்டாயமாக  அரங்கத்தை விட்டு வெளியே அழைத்துச் சென்று தங்களது “காவலில்” அவரை வைத்துக்  கொண்டனர். அதே போல் முனைவர் பட்டம் பெற வந்த  தமிழ்நாடு மாணவர் கூட்டியக்கத்தின் மாவட்டத்  தலைவர் ஜான்வின்சென்ட் என்பவரையும், பட்டம் பெறுவதற்கு முன்பாக காவல்துறை யினர்  வலுக்கட்டாயமாக அரங்கத்தை விட்டு வெளியே அழைத்துச் சென்றனர். தொடர்ந்து தமிழக ஆளுநர் ஆன்.என்.ரவி தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு புறப்பட்டுச்  சென்ற பின்னர் பல்கலைக் கழக துணைவேந் தர் திருவள்ளுவன், அரவிந்த்சாமி மற்றும் ஜான்வின்சென்ட் ஆகியோருக்கு பட்டங்களை வழங்கினார்.

சிபிஎம் போராட்டம் 

இந்நிலையில், இந்திய மாணவர் சங்க மாநிலத் தலைவர் அரவிந்தசாமியை பட்ட மளிப்பு அரங்கத்தில் இருந்து வெளியேற்றி யதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அவருக்கு உட னடியாக பட்டம் வழங்க வேண்டும் என வலி யுறுத்தியும், ஆளுநருக்கு கருப்புக் கொடி  காட்டும் போராட்டம் நடத்தி கைது செய்யப்பட்டு  தனியார் மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த இடத்  தில் உள்ளிருப்பு போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஈடுபட்டனர். 

மனித உரிமை மீறல் 

இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் சின்னை. பாண்டியன் கூறுகையில், ஆளுநரின் பாதுகாப்புக்காக வந்தி ருந்த காவல்துறையினர் அத்துமீறி நடந்துள்ள னர். இந்திய மாணவர் சங்கத்தின் மாநில தலை வர் அரவிந்தசாமியை நாள் முழுக்க எலக்ட்ரிக்  கோடவுன் அறையில் அடைத்து வைத்து, அவ ருடைய ஆடைகளை களைந்து சோதனை நடத்தி யுள்ளனர். இது மனித உரிமை மீறல் நடை பெற்றுள்ளது. பட்டம் பெற வந்த மாணவரை பட்டமளிப்பு விழா அரங்கில் இருந்து வெளி யேற்றி, மாணவராக அவருக்குள்ள உரிமையை பறித்துள்ளனர். தன்னுடைய மாணவரின் உரிமையை பாதுகாக்க தமிழ்ப் பல்க லைக்கழக நிர்வாகம் தவறிவிட்டது இதில் சம்பந்தப்பட்ட மாநில காவல் துறையும் ஆளு நரின் பாதுகாப்புக்காக வந்திருந்த காவல்துறை அதிகாரிகள் மீதும் அரசு விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார். 

‘தோழர்’ என்றாலே அலர்ஜி!

காவல்துறையினரால் விடுவிக்கப்பட்ட பின்னர் மாணவர் சங்க மாநிலத் தலைவர் அர விந்தசாமி செய்தியாளர்களிடம் கூறுகையில், “பட்டமளிப்பு விழா அரங்கில் அமர வைக்கப் பட்டிருந்த என்னை காலை 9.20 மணிக்கு காவல்  துறையினர் அழைத்துச் சென்று விசாரித்து திரும்ப அமர வைத்தனர். சற்று நேரத்தில் காவல் துறையின் வேறொரு பிரிவு அதிகாரி கள் வந்து தனியே அழைத்துச் சென்று மின்  இணைப்புகள் உள்ள ஒரு குடோன் போன்ற  அறையில் தங்க வைத்தனர். காலை முதல்  மாலை 3 மணி வரை என்னை விடுவிக்கவில்லை.  அதன் பின்னர் பட்டமளிப்பு சான்றிதழ் காண வில்லை என சாக்குபோக்கு கூறினர். பின்னர் போராடி தேர்வு கட்டுப்பாட்டு அலுவலரிடம் சென்று என்னுடைய பட்டத்தை பெறும் நிலை  ஏற்பட்டது. மாணவர் என்ற முறையில் என்னு டைய உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளன. மாணவர்  சங்க மாநில தலைவராக இருக்கிறேன் என்ற  காரணத்தினாலேயே என்னை கைது செய்து காவலில் வைத்தனர். அந்த அரங்கில் என்னைக் கண்ட மாணவர்கள் ‘தோழரே நலமா’ என்று கேட்டதற்காக, ‘தோழர்’ என்று சொன்ன அனைத்து மாணவர்களையும் அழைத்துச் சென்று காவல்துறையினர் விசாரணை நடத்தினர். இதில் மனித உரிமை ஆணையம் தலையிட வேண்டும்” என்றார்.

இந்திய மாணவர் சங்கம் கண்டனம்

இதுகுறித்து இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் க.நிருபன் சக்கரவர்த்தி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “திங்கட்கிழமை தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இந்த பட்டமளிப்பு விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டுள்ளார். பல்கலைக்கழகத்தில் படித்த மாணவராக, பட்டம் பெற வந்திருந்த இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலத் தலைவர் கோ.அரவிந்தசாமியை, எவ்வித காரணமுமின்றி அராஜகமாக தஞ்சை மாவட்ட காவல்துறை கைது செய்துள்ளது. காலை 8 மணிமுதல் போன் உள்ளிட்டவற்றை பறித்துக் கொண்டு காவல் வாகனத்திலேயே வைத்திருக்கிறது. ‘ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு பாதுகாப்பு’ என்ற பெயரில் பல்கலைக்கழகத்தின் மாணவரையே கைது செய்திருப்பது மாணவர்களின் மீதான அடக்குமுறையே ஆகும். தஞ்சை காவல்துறையின் இந்த அராஜகப் போக்கை இந்திய மாணவர் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது. உடனடியாக தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் மாணவரும் இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலத் தலைவருமான தோழர் கோ.அரவிந்தசாமியை விடுதலை செய்து, அவர் பட்டம் பெறுவதை உறுதி செய்ய வேண்டும். தமிழக அரசு, இத்தகைய அராஜகப் போக்கில் ஈடுபட்ட காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.