சென்னை, மார்ச் 27 - மார்ச் 28, 29 தேதிகளில் நடக்கும் அகில இந்திய வேலை நிறுத்தத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் முழுமையாக பங்கேற்கும் என இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் தமிழ் மாநிலக் குழு தெரிவித்துள்ளது. இதுகுறித்து சங்கத்தின் மாநிலச் செயலாளர் எஸ்.பாலா மற்றும் மாநிலத் தலைவர் என்.ரெஜீஸ்குமார் ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்கக் கூடாது, தொழிலாளர் விரோத சட்டங்களை திரும்பப் பெற வேண்டும். பெட்ரோலிய பொருட்கள் மீதான விலை உயர்வை ரத்து செய்ய வேண்டும். முறைசாரா தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை நசுக்கக் கூடாது. விவசாயிகள்-விவசாய தொழிலாளர்களின் உரிமைகளை தட்டிப் பறிக்கக் கூடாது. மின்சார திருத்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும். தேசிய பணமாக்கும் கொள்கை உள்ளிட்ட எந்த பெயராலும் பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்க கூடாது. புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும். குறைந்தபட்ச ஓய்வூதியத்தை அதிகப்படுத்த வேண்டும் உள்ளிட்ட மக்கள், விவசாயிகள், தொழிலாளர்கள் கோரிக்கைகளை முன்வைத்து மார்ச் 28, 29 தேதிகளில் சிஐடியு உள்ளிட்ட மத்திய தொழிற்சங்கங்கள் முன்னின்று நடத்தும் வேலைநிறுத்தப் போராட்டத்தை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் ஆதரிக்கிறது. மக்கள் விரோத நடவடிக்கைகளை எதிர்க்கும் வகையில் நடைபெறும் அகில இந்திய வேலை நிறுத்தத்தை வெற்றி பெற செய்யும் நடவடிக்கைகளில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் முழுமையாக பங்கேற்கும். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.