உணவு, போக்குவரத்து, மருத்துவக் குழுவின் மெச்சத்தகுந்த மாநாட்டுப் பணிகள்
எந்த ஒரு பண்டிகை, விழாவாக இருந்தாலும் அதில் பரிமாறப்படும் உணவு, விருந்து உபசாரம் தான் அந்தப் பண்டிகையின் சிறப்பைக் காலம் காலத்திற்கு உணர்த்துவதாக இருக்கும். அந்த வகையில் மதுரையில் நடை பெறும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாட்டில் பரிமாறப்பட்டு வரும் உணவும், உணவுக் குழுவின் பணியும் சிறப்பாக அமைந்துள்ளது. கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் என்.பாண்டி, மாநிலக்குழு உறுப்பினர் காமராஜ் ஆகியோரை தலைமையாக கொண்ட 11 பேர் கொண்ட உணவுக்குழு மிகுந்த ஈடுபாட்டோடு, அர்ப்பணிப்பு உணர்வோடு இந்தப் பணியை செய்து வருகிறது. இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்துள்ள பிரதிநிதிகள், மாநாட்டில் முழு கவனத்தோடு பங்கேற்பதற்கு ஆரோக்கியமான, சுவையான உணவு அடிப்படை அம்ச மாக உள்ளது. குறித்த நேரத்தில் உணவைத் தயார் செய்து கொடுத்தால்தான் மாநாடு சீராக நடைபெற முடியும். பிரதிநிதிகளுக்கு அந்தந்த மாநில பாரம்பரிய உணவு மற்றும் தமிழ்நாட்டின் பாரம்பரிய உணவு வகைகள் ஆகியவற்றை மெரினா கேட்டரிங் ஆறுமுகம் குழுவினர் தயார் செய்து கொடுத்து வருகின்றனர். அந்தக் குழுவில் சிவா னந்தம், கணேசன், தினேஷ், நாராயணன் ஆகியோர் அர்ப்பணிப்பு உணர்வோடு பணி யாற்றி வருகின்றனர். அவர்கள் கட்சியுடன் உணர்வுபூர்வமாக நெருக்கமான தொடர்பில் இருப்பவர்கள். வியாபார நோக்கம் இல்லாமல் பிரதிநிதிகளுக்கு எந்த உடல் உபாதைகளும் ஏற்பட்டு விடாமல் பார்த்துப் பார்த்து, உணவு சமைத்து கொடுக்கிறார்கள். பிரதிநிதிகள் மிகவும் விரும்பி உணவை சுவைத்து சாப்பிட்டு வருவது இவர்களது பணியின் சிறப்பை உணர்த்துவதாக உள்ளது. ஒவ்வொரு வேளையும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு உணவு பரிமாற வேண்டிய நிலையில், உணவு தயாரிப்பது மட்டுமின்றி உணவு பரிமாறுவதில் மதுரை புறநகர், மாநகர் மாவட்டக் குழு உறுப்பினர்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் பணி யாற்றி வருகின்றனர். இந்த அரங்கத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்கிய நவரத்தின தலை வர்களின் படங்கள் வைக்கப்பட்டுள்ளன. காய்கறிகள் பழங்களிலும் அவர்களது உரு வங்கள் அற்புதமாக செதுக்கப்பட்டுள்ளன.
அழகியல் உணர்வோடும், ஆழமான ஈடுபாட்டோடும் உணவுக் குழுவினர் செய்து வரும் பணியை, இந்தியா முழுவதும் இருந்து மாநாட்டிற்கு வந்த பிரதிநிதிகள் மனப் பூர்வமாக பாராட்டி வருகின்றனர். போக்குவரத்துக்குழு உடல் இயக்கத்திற்கு தடையில்லாத ரத்த ஓட்டம் அவசியம். அதுபோல் மாநாட்டிற்கு தலைவர்கள், பிரதிநிதிகள் தடங்கல் இல்லாமல் குறித்த நேரத்தில் வந்து சேருவது அவசியம். இந்த பணியை சிரமேற்கொண்டு சிறப்பாக செய்து வருகின்றனர் போக்குவரத்துக் குழுவினர். கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் ஜி. சுகுமாரன் கன்வீனராகவும், ஆறுமுக நயினார், பிச்சை ஆகியோர் துணை கன்வீனர்களாகவும் கொண்ட 49 பேர் குழு இதற்காக செயல்பட்டு வருகிறது. வெளிமாநிலங்களில் இருந்து வந்திருக்கக்கூடிய அனைத்து பிரதிநிதிகள் தலை வர்களை ரயில் நிலையம், விமான நிலையம் ஆகிய இடங்களில் குறித்த நேரத்தில் சென்று அழைத்து வந்து அவர்களுக்காக ஒதுக்கப்பட்ட விடுதிகளில் தங்க வைக்கும் ஏற்பாட்டை போக்குவரத்துக் குழுவினர் சிறப்பாக மேற்கொண்டனர். அகில இந்திய மாநாட்டிற்கு மதுரை மண்ணில் கால் வைத்த பிரதிநிதிகள், தோ ழர்களுக்கு அவர்கள் ரயிலில் எந்தப் பெட்டியில் பயணம் செய்தார்களோ, நடை மேடையில் அந்த பெட்டி நிற்கும் இடத்திலேயே அவர்களை வரவேற்று பூங்கொத்து கொடுத்து, தண்ணீர் பாட்டில், இனிப்பு கொடுத்து அழைத்து வந்துள்ளனர். அதுமட்டுமின்றி தங்குமிடங்களில் இருந்து மாநாட்டு அரங்கத்திற்கும், அங்கி ருந்து மீண்டும் தங்குமிடத்திற்கும் அவர்கள் சென்று வருவதற்கு காலை, மதியம், இரவு என திட்டமிட்ட போக்குவரத்து ஏற்பாட்டை செய்துள்ளனர். அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்களுக்கு தனித்தனி வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அதிமுக்கிய பாதுகாப்பு வளையத்தில் இருக்கக்கூடிய காஷ்மீரின் முகமது யூசப் தாரிகாமிக்கு அவர் வந்ததிலிருந்து திரும்பச் சொல்லும் வரை அவரது பாதுகாப்பை கருத்தில் கொண்டு ஒரே வாகனம், ஒரே ஓட்டுநர் ஏற்பாடு செய்யப்பட்டு போக்குவரத்து குழு கண்காணிப்புடன் பணியாற்றி வருகிறது மாநாடு முடிந்து அனைவரும் அவரவர் ஊருக்கு செல்வதற்கு வழியனுப்புவது வரை போக்குவரத்து குழுவினரின் பணி தொடரும். இது மட்டுமின்றி சில தோழர்கள் பயணச்சீட்டு முன்பதிவு செய்வதில் ஏற்பட்ட சிர மங்களை போக்கவும், பயணச்சீட்டை பதிவு செய்து தரவும், அவசர ஒதுக்கீட்டில் அவர்க ளுக்கான பயண சீட்டை உத்தரவாதம் செய்யவும் ரயில்வே அரங்கத் தலைவர்களில் ஒருவரான பேபி ஷகிலா உள்ளிட்ட தோழர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்தக் குழுவினர் பணிக்காக பேருந்து, சிற்றுந்து, வேன், டெம்போ ட்ராவலர், கார் என 49 வாகனங்கள் இயங்கி வருகின்றன. சில தோழர்களின் அவசரத் தேவைக் காக தில்லி சென்று திரும்புவதற்கும் போக்குவரத்துக் குழு ஏற்பாடு செய்து உள்ளது. இத்துடன் திடீர் உடல் நலக்குறைவு ஏற்படும் நிலையில் சம்பந்தப்பட்டவர்களை மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லும் பணியையும் போக்குவரத்துக் குழுவினர் துரிதமாக மேற்கொண்டுள்ளனர். போக்குவரத்துக் குழுவினரின் பணி, பிரதிநிதிகள் மத்தியில் பாராட்டைப் பெற்றுள்ளது.
மருத்துவக் குழு மாநாட்டு வளாகத்தில் டாக்டர் காசி தலைமையில் மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள் குழுவினர், பிரதிநிதிகளின் உடல் நலக் குறைபாடுகளை சரி செய்வ தற்கு தயார் நிலையில் பணியாற்றி வருகின்றனர். கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன் பொறுப்பாளராக இருக்கி றார். மாநாடு தொடங்குவதற்கு முன்பிருந்து ஆறு நாட்கள் தினமும் காலை 8 மணியில் இருந்து இரவு 9 மணி வரை இவர்கள் சேவை தொடர்கிறது. பிரதிநிதிகள், பார்வையாளர்கள், உதவியாளர்கள், தொண்டர்கள், சமையலர்கள் என மாநாட்டுப் பணிகளில் பங்கேற்றுள்ளோர் பலரும் வந்து பரிசோதனை செய்து கொள்கின்றனர். ஒவ்வொரு நாளும் சராசரியாக 225 பேர் ரத்த அழுத்தம், சர்க்கரை மற்றும் இதர உடல் பரிசோதனை செய்து வருகின்றனர். தேவைப்படுவோருக்கு மருந்து களும் வழங்கப்படுகின்றன. அப்பல்லோ செவிலியர் குழுவினர் பரிசோதனை பணி களை மேற்கொண்டுள்ளனர். மருந்து விற்பனைப் பிரதிநிதிகள் சங்கத்தைச் சேர்ந்த சத்ய நாராயணா தலை மையிலான குழுவினர் தேவையான மருந்துகளை ஏற்பாடு செய்து முகாமில் வழங்கி வருகின்றனர். கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் ஆறுமுக நயினார் கண்காணித்துத் தேவையான உதவிகளைச் செய்து வருகிறார்.
இங்கு பங்கேற்றுள்ள மூத்த மருத்துவர்கள் சுப்பையா, முருகேசன், பிரகாஷ்காரத் ஆகியோர் 1972ஆம் ஆண்டு மதுரையில் நடைபெற்ற 9ஆவது அகில இந்திய மாநாட்டிலும் மருத்துவக்குழுத் தொண்டர்களாக வேலை செய்ததாகத் தெரிவித்தனர். குறிப்பாக மதுரை மருத்துவக் கல்லூரி மாணவர்களாக இருந்து எஸ்எப்ஐ-யில் சேர்ந்து அதன் மூலம் கட்சியில் உறுப்பினராக சேர்க்கப்பட்டதாகத் தெரிவித்தனர். 9-ஆவது மாநாட்டின்போது பிரதிநிதிகளுக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டு அரசு மருத்துவமனையில் தேவையான சிகிச்சை அளித்தோம். அப்போது மேற்கு வங்கத்தில் இருந்து வந்த அமைச்சர் ஒருவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்பட்டது என்று 53 வருடங்களுக்கு முந்தைய தங்கள் அனுபவத்தை அவர்கள் பகிர்ந்து கொண்டனர். -வே.தூயவன்