வேளாண் விளைபொருட்களுக்கான குறைந்த ஆதார விலை அறிவிப்பு ஒன்றிய பாஜக அரசு மீண்டும் விவசாயிகளுக்கு அநீதி!
தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் அறிக்கை
சென்னை, மே 29 - ஒன்றிய அரசு அறிவித்துள்ள வேளாண் விளைப்பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை விவசாயிகளுக்கு பெருத்த ஏமாற்றத்தை அளித்திருப்பதாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கூறியுள்ளது. இதுதொடர்பாக சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் சாமி.நடராஜன் அறிக்கை ஒன்றை விடுத்துள்ளார். அதில், அவர் கூறியிருப்பதாவது: கடுமையான அதிகரித்த உரம், பூச்சிமருந்து விலைகள் ஒன்றிய அரசு அறிவித்துள்ள வேளாண் விளைப்பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை விவசாயிகளுக்கு பெருத்த ஏமாற்றத்தை அளித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் வேளாண் உற்பத்திச் செலவுகள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. ஒன்றிய அரசின் வேளாண் விரோத கொள்கையின் விளைவாக ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகளின் விலைகள் பல மடங்கு உயர்ந்துள்ளன. வேளாண் கருவிகளின் வாடகை மற்றும் கூலி உயர்வு அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் ஒன்றிய அரசு அறிவித்துள்ள 14 வேளாண் விளைப்பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை உற்பத்தி செலவுடன் ஒப்பிடும் போது மிக மிக குறைந்த அளவிலேயே அறிவிக்கப்பட்டுள்ளது. வெறும் 69 ரூபாய் உயர்வை அறிவித்த ஒன்றிய அரசு குறிப்பாக, நெல்லுக்கு குவிண்டாலுக்கு வெறும் 69 ரூபாய் மட்டும் விலையை உயர்த்தி அறிவித்துள்ளது. உற்பத்திச் செலவு ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வரும் சூழலில், 1 கிலோ நெல்லுக்கு வெறும் 69 காசுகள் மட்டும் உயர்த்தி விலையாக அறிவித்துள்ளது. 2014 ஆட்சிக்கு வருவதற்கு முன்பாக வேளாண் விளைபொருளுக்கு குறைந்தபட்ச ஆதார விலைக்கான மத்திய சட்டத்தை நாடாளுமன்றத்தில் கொண்டு வருவோம் என்று இந்திய விவசாயிகளுக்கு வாக்குறுதி கொடுத்த பிரதமர் மோடி, இதுவரை குறைந்தபட்ச ஆதார விலைக்கான மத்திய சட்டத்தை கொண்டு வராமல் விவசாயிகளுக்கு தொடர்ந்து துரோகம் செய்து வருகிறார். நெல் குவிண்டாலுக்கு ரூ. 766 இழப்பு வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன் குழு பரிந்துரை செய்த சி2 +50-இன் அடிப்படையில் குறைந்தபட்ச ஆதார விலையை விவசாயிகளுக்கு வழங்குவதற்கு ஒன்றிய பாஜக அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது. குறிப்பாக எம்.எஸ். சுவாமிநாதன் குழு பரிந்துரை அடிப்படையில் நெல்லுக்கு விலை அறிவிக்கப்பட்டிருந்தால் ஒரு குவிண்டாலுக்கு ரூ. 3135 விலை கிடைத்திருக்கும். ஆனால் ஒன்றிய அரசு இப்போது அறிவித்துள்ள விலை ஒரு குவிண்டாலுக்கு ரூ. 2369 மட்டுமே, குவிண்டாலுக்கு இழப்பு ரூ. 766. அதேபோல், மக்காச்சோளத்திற்கு அறிவித்துள்ள விலை ரூ. 2400, சி2+50-இன் படி ரூ. 2928 கிடைக்க வேண்டும், இழப்பு குவிண்டாலுக்கு ரூ. 528. உளுந்துக்கு அறிவித்துள்ள விலை ரூ. 7800, சி2+50-இன்படி ரூ. 10243 வழங்கப்பட வேண்டும். இந்த வகையில் இழப்பு குவிண்டாலுக்கு ரூ. 2443. பருத்திக்கு அறிவிக்கப்பட்டிருப்பது ரூ. 7710. சி2+50-இன்படி ரூ. 10075 அறிவிக்கப்பட வேண்டும். இழப்பு குவிண்டாலுக்கு ரூ. 2305. பல லட்சம் கோடி ரூபாய் வருவாயை இழக்கும் விவசாயிகள் இவ்வாறு ஒவ்வொரு விளைப்பொருளுக்கும் மிகக் குறைந்த அளவிலேயே குறைந்தபட்ச ஆதார விலை என்பது ஒன்றிய அரசால் அறிவிக்கப்படுகிறது. இதன் விளைவாக ஒவ்வொரு ஆண்டும் இந்திய விவசாயிகள் பல லட்சம் கோடி வருவாயை இழக்கின்றனர். இயற்கையோடு போராடி உணவுத் தேவையை பூர்த்தி செய்யக்கூடிய விவசாயிகள் காலம் முழுவதும் கடன் வலையில் சிக்கியுள்ளனர். அரசின் தவறானக் கொள்கைகளால் இந்திய வேளாண் துறையே மிகப்பெரிய நெருக்கடியில் சிக்கியிருக்கக்கூடிய இந்த சூழலில், ஒன்றிய அரசு அறிவித்துள்ள குறைந்தபட்ச ஆதார விலை என்பது யானை பசிக்கு சோளப்பொறி போட்ட கதையைப் போல் உள்ளது. எனவே, வேளாண் உற்பத்தி செலவுகளை முறையாக கணக்கீடு செய்து எம்.எஸ். சுவாமிநாதன் குழு பரிந்துரைத்த உற்பத்தி செலவுகளோடு, 50 சதவிகிதம் சேர்த்து ஒன்றிய அரசு குறைந்தபட்ச ஆதார விலையை அறிவிக்க வேண்டுமென தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஒன்றிய அரசை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு சாமி.நடராஜன் குறிப்பிட்டுள்ளார்.