tamilnadu

img

திருத்துறைப்பூண்டி அருகே லஞ்சம் வாங்கிய கோவில் செயல் அலுவலர் கைது

திருத்துறைப்பூண்டி அருகே
லஞ்சம் வாங்கிய கோவில் செயல் அலுவலர் கைது

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி தாலுகா, கீராலத்தூர் ஊராட்சி, திருக்கொள்ளிக்காடு பொங்கு சனீஸ்வரர் திருக்கோவிலின் செயல் அலுவலராக பணியாற்றி வருபவர் ஜோதி. இவர் மீது, கடந்த இரண்டு வருடங்களாக பல்வேறு ஊழல் முறைகேடுகள் கூறப்பட்டு வந்த நிலையில், இவருக்கு இந்து சமய அறநிலைத்துறை உயர் அதிகாரிகள் பாதுகாப்பு அரணாக இருந்து வந்ததாகவும், அதனால், இவர் எதைப்பற்றியும் கவலைப்படாமல் மேலும் மேலும் ஊழல், லஞ்சம் போன்ற செயல்களில் ஈடுபட்ட நிலையில், சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் நடவடிக்கை எடுக்கக் கோரி வந்தனர். இந்நிலையில், திருக்கோவிலில் பணியாற்றி வருபவர் சதீஷ்குமார் என்பவர், கடந்த 2005 ஆண்டு முதல் திருக்கோவிலில் எழுத்தர் ஆக பணியாற்றி வருகிறார். இவருக்குக் கிடைக்க வேண்டிய அரியர்ஸ் தொகையான ரூ.2,86,000-ஐ விடுவிக்கக் கோரி, தொடர்ந்து செயல் அலுவலர் ஜோதியிடம் வேண்டுகோள் விடுத்தார். இதனைத் தொடர்ந்து, அவருக்கு பணம் வழங்காமல் காலம் கடத்தி வந்தார். தனக்கு ஒரு லட்சம் ரூபாய் கொடுத்தால் இரண்டு லட்ச ரூபாயை விடுவிப்பதாகக் கூறிவந்ததாகக் கூறப்படுகிறது.  மிகுந்த சிரமத்திற்கும், மன உலச்சலுக்கும் உள்ளாகி, லஞ்ச ஒழிப்புத்துறையிடம் சதீஷ்குமார் புகார் அளித்தார். லெள்ளிக்கிழமை காலை மன்னார்குடியில் உள்ள ஆனந்த விநாயகர் திருக்கோவிலில் பொறுப்பில் இருந்த செயல் அலுவலர் ஜோதியிடம், ஒரு லட்சம் ரூபாயை கொடுத்தபோது, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறையினர், ஜோதியை கையும் களவுமாகப் பிடித்து கைதுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அண்ணா சிலை மீது திமுக கொடியுடன் பா.ஜ.க, கொடியை இணைத்து போடப்பட்டிருந்ததால் பரபரப்பு

தஞ்சாவூரில், அண்ணா சிலை மீது, பா.ஜ.க, தி.மு.க., கொடியை ஒன்றாக இணைந்து போடப்பட்டிருந்தால் சனிக்கிழமை பரபரப்பு ஏற்பட்டது. தஞ்சாவூர் பழையபேருந்து நிலையம் அருகே, அண்ணா சிலை உள்ளது. சனிக்கிழமை காலை, திமுக, பாஜக கொடி இணைக்கப்பட்டு, அண்ணா சிலையில் போடப்பட்டிருந்தது. இதனைப் பார்த்த அப்பகுதியினர், மேற்கு காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். அங்கு வந்த காவல்துறையினர், அண்ணா சிலை மீது இருந்த கொடியை அகற்றி, விசாரணையில் ஈடுபட்டனர். இதற்கிடையே, அண்ணா சிலை அருகே உள்ள மாநகராட்சி நுாற்றாண்டு அரங்கத்தில், திமுக மகளிர் அணி, முகவர்கள், தொண்டர் அணியின் பயிற்சி பட்டறைக் கூட்டம் நடந்தது. அப்போது, கூட்டத்திற்காக வந்த திமுகவினர் பலரும், அண்ணா சிலையில், பாஜக, திமுக கொடியுடன் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். மேலும், காவல்துறையினர் கொடியை அகற்றிய பிறகு, அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து, மரியாதை செய்து விட்டு திமுகவினர் கூட்டத்திற்குச் சென்றனர். இதுதொடர்பாக, காவல்துறையினர் நடத்திய விசாரணையில், அப்பகுதியில் சுற்றித் திரிந்த மனநலம் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் தான், திமுக, கம்யூனிஸ்ட், பாஜக, அதிமுக கொடிகளை இணைத்து, அண்ணா சிலைக்கு போட்டது தெரிந்தது. அவரிடம் காவல்துறையினர் விசாரித்த போது, கொடியை சேகரித்து கீழே வைத்தால், யாராவது எடுத்துக்கொண்டு போய் விடுகிறார்கள். அதனால் தான் அண்ணா சிலை மீது போட்டு விட்டு, டிராபிக்கை கிளியர் செய்து கொண்டு இருந்தேன் என பதில் அளித்து விட்டுச் சென்றார். இதனால் காவல்துறையினர் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.