tamilnadu

img

மியான்மரில் சிக்கித் தவிக்கும் தமிழர்கள்; மீட்புக்கு தீவிர முயற்சிகள் - சு.வெங்கடேசன் எம்.பி கடிதத்திற்கு இந்தியத் தூதர் பதில்

மியான்மரில் சிக்கித் தவிக்கும் தமிழர்களை மீட்க தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளதாக சு.வெங்கடேசன் எம்.பி கடிதத்திற்கு மியான்மர் இந்தியத் தூதர் பதிலளித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது;

மியான்மரில் சிக்கித் தவிக்கும் 4 தமிழர்களை மீட்க வேண்டுமென்று நான் 21.09.2022 அன்று மியான்மரில் உள்ள இந்தியத் தூதருக்கு கடிதம் எழுதி இருந்தேன். அதற்கு இந்தியத் தூதர் வினய்குமார் YAN/ AMB/ 138/ 2022/ 23.09.2022 அன்று பதில் அளித்துள்ளார். 
தாய்லாந்தில் வேலை வாங்கித் தருவதாக இந்திய மற்றும் வேறு சில அந்நிய நாடுகளின் இளைஞர்கள் ஏமாற்றி அழைத்து வந்து சட்ட விரோதமாக மியான்மரில் வைத்திருக்கிற ஒரு சர்வதேச மோசடி இதில் சம்பந்தப்பட்டுள்ளது. மியாவாடி என்கிற இடத்தில் அவர்கள் இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இந்த இடம் மியான்மர் அரசின் முழுக் கட்டுப்பாட்டில் இல்லை. ஆயுதம் தாங்கிய இனக் குழுக்களின் செல்வாக்கின் கீழ் அது உள்ளது. இங்கேதான் இந்திய மற்றும் அந்நிய குடிமக்கள் சட்ட விரோதமாக வைக்கப்பட்டுள்ளனர். இங்கிருந்து அங்கு பயணம் சாத்தியமில்லை. தாய்லாந்து முனையில் இருந்து அவர்கள் அங்கே கொண்டு வரப்பட்டுள்ளனர். 
கிடைத்துள்ள தகவல்களின்படி 90 இந்தியர்கள் இந்த மோசடி வலைக்குள் வீழ்ந்துள்ளனர். அதில் 60 பேர் மியாவாடி பகுதிக்குள் மோசடி கும்பலால் கொண்டு வரப்பட்டுள்ளனர்.
நாங்கள் தொடர்ந்து மியான்மர் அரசுடனான ஒருங்கிணைப்புடன் நிலைமைகளை கவனித்து வருகிறோம். பல்வேறு வழிமுறைகள் வாயிலாக, வணிக சமூகத் தொடர்புகளையும் பயன்படுத்தி இந்தியர்களை மீட்க முயற்சிகள் செய்து வருகிறோம். காரணம் அந்த பகுதி உள்ளூர் அதிகாரிகளின் கட்டுப்பாட்டிற்குள் முழுவதும் இல்லாத நிலை இருப்பதே. இதுவரை மியாவாடி பகுதியில் இருந்து 30 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர். மற்றவர்களையும் விரைவில் மீட்க முயற்சிகள் செய்து வருகிறோம்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
கடிதம் அனுப்பிய 24 மணி நேரத்திற்குள் பதில் தந்துள்ள மியான்மரின் இந்தியத் தூதருக்கு நன்றி. உங்கள் முயற்சிகள் வெற்றி பெற்று எல்லா இந்தியர்களும் மீட்கப்படுவார்கள் என்று நம்புகிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

;