புதுதில்லி, ஜூலை 26 - கேரள அரசு தொடர்ந்த வழக்கில், ஒன்றிய அரசு மற்றும் கேரள ஆளுநர் மூன்று வாரங்களில் பதிலளிக்குமாறு உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது. கேரள சட்டமன்றத்தில் நிறைவேற்றப் பட்ட நான்கு மசோதாக்களை குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்காக அனுப்பி வைத்த கேரள மாநில ஆளுநரின் செயல்பாடும், அந்த மசோதாக்களை எவ்வித காரணமும் கூறாமல் குடியரசுத் தலைவர் நிராகரித்ததும் அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என்று அறிவிக்க வேண்டும்; 2021 மற்றும் 2022ஆம் ஆண்டு களில் நிறைவேற்றப்பட்ட 6 மசோதாக்களு க்கு கேரள ஆளுநர் உடனடியாக ஒப்புதல் அளிக்க உத்தரவிட வேண்டும் என்றும் வலி யுறுத்தி, கேரள அரசு உச்சநீதிமன்றத்தில்ரிட் மனு தாக்கல் செய்திருந்தது. அரசியலமைப்பின் 32-வது பிரிவின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட அந்த ரிட் மனுவில், “மசோதாக்களை குடி யரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்ததற்கு ஆளுநர் கூறும் காரணங்கள் ஒன்றிய அரசு அல்லது மாநில சட்ட மன்றத்திற்கு இடையேயான உறவுமுறைக்கு எந்தத் தொடர்பும் இல்லை. இது சம்பந்தமாக, அரசிய லமைப்பின் 213-வது பிரிவின் விதி தெளிவாக குறிப்பிடு கிறது. ஒரு அவசரச் சட்டத்தை கொண்டுவரும் போது மட்டுமே குடியரசுத் தலைவரின் ஒப்புதல் தேவை என்பதை அது தெரிவிக்கிறது. ஆனால், கேரள அரசின் மசோதாக்கள் மாநில பல்கலைக்கழகங்கள் மற்றும் கூட்டுறவுச் சங்கங்கள் தொடர்பான சட்டங்களில் திருத்தங்கள் தொடர்பானவை. இதுபோன்ற ஒன்றிய - மாநில உறவுகள் தொடர்பான மசோதாக்கள் எதற்கும் குடியரசுத் தலைவரின் ஒப்புதல் தேவையில்லை. அந்த வகையில், மசோதாக்களை குடியரசுத் தலை வருக்கு அனுப்பும் ஆளுநரின் நடவடிக்கை தவறானது. ஆனால், பேரவையில் நிறைவேற்றப்பட்ட நாளிலிருந்து 7 மாதங்கள் முதல் 24 மாதங்கள் வரை ஆளுநர் இந்த மசோதாக்களை பல மாதங்களாக நிலுவையில் வைத் துள்ளார். இது கூட்டாட்சி கோட்பாட்டை சீர்குலைப்ப தாகும்” என்று குறிப்பிட்டு இருந்தது.
இந்த மனு, ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த படி ஜூலை 26 அன்று உச்ச நீதிமன்றத்தில், தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், நீதிபதிகள் ஜே.பி. பர்திவாலா மற்றும் மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. கேரள அரசுத் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞரும், இந்தியாவின் முன்னாள் அட்டர்னி ஜெனரலுமான கே.கே. வேணுகோபால் ஆஜராகி வாதாடினார். அவர், “மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பதில் தங்களுக்கு என்ன அதிகாரம் உள்ளது என்பதில் நாட்டில் உள்ள பல்வேறு ஆளுநர்கள் மனதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது” என்று கூறியதுடன், “தற்போதைய நிலையில், கேரளத்தில் 8 மசோதாக் களில் இரண்டு மசோதாக்கள் 23 மாதங்களாக நிலுவை யில் உள்ளன. ஒன்று 15 மாதங்களாகவும், மற்றொன்று 13 மாதங்களாகவும் நிலுவையில் உள்ளன” என்பதைச் சுட்டிக்காட்டினார். இந்த சூழலில், “ஆளுநர்கள் எப்போது மசோதாக்களை திரும்பப் பெறலாம் மற்றும் குடியரசுத் தலைவருக்கு பரிந்துரைக்கலாம் என்பதற்கான வழிகாட்டுதல்களை நீதிமன்றம் வகுத்தளிக்க வேண்டிய அவசியம் உள்ளது” என்றும் குறிப்பிட்டார். அவரின் வாதங்களை ஏற்றுக்கொண்ட தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வு, 3 வாரங்களுக்குள் பதிலளிக்குமாறு இந்திய ஒன்றிய அரசு (உள்துறை அமைச்சகத்தின் செயலாளர் மூலம்) மற்றும் கேரள ஆளுநர் ஆரிப் முகமது கானின் கூடுதல் தலைமைச் செயலாளர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவு பிறப்பித்தது. தேவைப்பட்டால் ஒன்றிய உள்துறை அமைச்சகத்தையும் வழக்கில் சேர்க்க நீதிபதிகள் உத்தரவிட்டனர். அப்போது, இதே பிரச்சனையுடன் நாங்களும் வழக்கு தாக்கல் செய்திருக்கிறோம் என மேற்குவங்க அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி ஆஜரானார். அவரது வாதங்களை ஏற்று, மேற்குவங்க மாநில ஆளுநரின் செயலாளர் மற்றும் ஒன்றிய அரசுக்கும் நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.