சென்னை,ஜூன் 1- சென்னை - போடிநாயக்கனூருக்கு ரயிலை உடனடியாக இயக்க வேண்டும். அம்ரித் பாரத் திட்டத்தில் தமிழ்நாட்டிற்கு கூடுதலாக இரண்டு ரயில் நிலையங்களை இணைக்க வேண்டும் என்று ரயில்வே அமைச்சரிடம் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு .வெங்கடேசன் வலியுறுத்தினார். ரயில்வே துறைக்கான நாடாளுமன்ற ஆலோசனைக் குழுக் கூட்டம் ஜூன் 1 அன்று ரயில்வே துறை அமைச்சர் அஸ்வின் வைஷ்ணவ் தலைமையில் நடைபெற்றது. அதில் பங்கேற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் பேசியதாவது: மதுரை -போடிநாயக்கனூரில் அகல ரயில் பாதை பணிகள் முடிவுற்று பல மாதங்கள் ஆகிவிட்டன. ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்ட காலமும் கடந்துவிட்டது. அமைச்சரின் தேதிக்காக காத்திருப்பதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
எனவே இனியும் காலம் தாழ்த்தாமல் தாங்கள் உடனடியாக போடிநாயக்கனூர் -சென்னை இடையிலான ரயிலை இயக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். அதேபோல அம்ரித் பாரத் என்ற திட்டத்தின் அடிப்படையில் இந்தியா முழுவதும் 1275 ரயில் நிலையங்கள் நவீனப்படுத்தப்பட உள்ளதாக ரயில்வே துறை கூறியுள்ளது. இதில் தெற்கு ரயில்வேயில் தமிழ்நாட்டில் 73 நிலையங்கள் புதுப்பிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை 75 ரயில் நிலையங்களாக உயர்த்தி கூடல் நகர், திருப்பரங்குன்றம் ரயில் நிலையங்களை இதில் இணைத்திட வேண்டும். இந்த திட்டத்தில் நகரும் படிக்கட்டுகள், மின்தூக்கிகள், ரயில் நிலையத்தில் இருபுறமும் வாயில்கள், கழிவறை கள், பயணிகள் தங்கும் இடங்கள், கடைகள் யாவும் அமைக்கப்படும். இந்த திட்டத்தில் மதுரை, ராமேஸ்வரம், பழனி உள்ளிட்ட கோவில் உள்ள நிலையங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. அதன் தொடர்ச்சியாக திருப்பரங்குன்றத்தையும் சேர்க்க வேண்டும் . அதேபோல கூடல் நகர் இரண்டாவது முனையமாக மாற்றும் முயற்சிகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில் இந்த ரயில் நிலையத்தை எல்லா வசதிகளையும் கொண்ட நிலையமாக மாற்றும் வகையில் அம்ரித் பாரத் திட்டத்தில் சேர்க்க வேண்டும். இவ்வாறு அவர் கோரியுள்ளார்.