மாநில பாடத்திட்டத்தின் தரம் மோசமாக இருப்பதாக விமர்சித்த தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு, மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் எம்.பி பதிலடி கொடுத்துள்ளார்.
சென்னையில் நடந்த தனியார் பள்ளி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட ஆளுநர் ஆர்.என்.ரவி, தேசிய பாடத் திட்டத்தை ஒப்பிடும்போது, மாநில பாடத் திட்டத்தின் தரம் மோசமாக உள்ளதாகவும், மாணவர்களுக்கு செயற்கை நுண்ணறிவு, ரோபோட்டிக்ஸ் போன்றவற்றில் அறிவுத்திறன் குறைவாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். ஆளுநரின் இந்த பேச்சுக்கு மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் எம்.பி பதிலடி கொடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பதிவில் கூறியதாவது:
"மாநில பாடத்திட்டம் தரம் தாழ்ந்து இருப்பதாக ஆளுநர் ஆர்.என். ரவி கூறியுள்ளார்.
புல் புல் பறவை சாவர்க்கரை காப்பாற்றிய கதையோ, முதலைகளிடமிருந்து மோடி தப்பித்த கதையோ தமிழ்நாட்டு பாடங்களில் இல்லை. தனக்கு பிடித்த காட்சி இல்லாத ஏமாற்றத்தை வெளிப்படுத்தும் உரிமை ஆளுநருக்கும் உண்டு." இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.