மே 20 இல் வேலை நிறுத்தம், மறியல் போராட்டம் ஓய்வூதியர்களும் மறியலில் பங்கேற்க முடிவு
தஞ்சாவூர், மே 15- தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தின் மாவட்ட செயற்குழுக் கூட்டம் தஞ்சாவூரில் மாவட்டத் தலைவர் ஆர்.கலியமூர்த்தி தலைமையில் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் ஆர். தமிழ்மணி நடந்துள்ள வேலைகளையும், எதிர்கால திட்டங்களையும் உறுப்பினர்களின் ஒப்புதலுக்காக முன்வைத்தார். ஒன்றிய அரசின் தொழிலாளர் விரோத நடவடிக்கைகளையும், தொழிற்சங்க உரிமைகளைப் பறிக்கும் நடவடிக்கைகளுக்கு எதிராகவும், சிஐடியு, ஏஐடியுசி, ஐஎன்டியுசி, தொமுச உள்ளிட்ட மத்திய தொழிற்சங்கங்களின் அறைகூவலை ஏற்று, தொழிலாளர் வர்க்கத்தின் சார்பில், மே.20 ஆம் தேதி நடைபெறும் அகில இந்திய வேலை நிறுத்தப் போராட்டத்தை முழுமையாக ஆதரிப்பது எனவும், தஞ்சாவூர் மாவட்டத்தில் தஞ்சை, கும்பகோணம், பட்டுக்கோட்டை, திருவிடைமருதூர் ஆகிய 4 மையங்களில், தலைமை அஞ்சலகம் முன்பு நடைபெறும் மறியல் போராட்டத்தில் பெருவாரியாக கலந்து கொண்டு சிறை ஏகுவது எனவும், மே 17, 18, 19 தேதிகளில் நடைபெறும் பிரச்சார இயக்கங்களில் பங்கேற்பது எனவும் முடிவு செய்யப்பட்டது தஞ்சாவூரில் நடைபெறும் மறியலில் தஞ்சாவூர், திருவையாறு, பூதலூர், பாபநாசம், ஒரத்தநாடு வட்ட ஓய்வூதியர்களும், பட்டுக்கோட்டை, பேராவூரணி ஓய்வூதியர்கள் பட்டுக்கோட்டையிலும், கும்பகோணம், திருவிடமருதூர் வட்ட ஓய்வூதியர்கள் அந்தந்த மைய மறியலிலும் பங்கேற்பது எனவும், வட்ட மாநாடுகளை ஜூலைக்குள் நடத்தி முடிப்பது எனவும், மாவட்ட மாநாட்டை ஆகஸ்ட் மாதம் கும்பகோணத்தில் நடத்துவது எனவும் முடிவுகள் மேற்கொள்ளப்பட்டன. கூட்டத்தில், அனைத்து வட்டங்களிலிருந்தும், மாவட்ட செயற்குழு உறுப்பினர்களும், மாவட்ட நிர்வாகிகளும் பங்கேற்றனர். கூட்டத்தில், பாரதி புத்தகாலயம் வெளியிட்ட தோழர் லெனின் தொகுப்பு நூலின், விற்பனையை மாவட்டத் தலைவர் ஆர். கலியமூர்த்தி துவக்கி வைத்தார். மாவட்டச் செயலாளர் ஆர். தமிழ்மணி பெற்றுக் கொண்டார். கும்பகோணம் பாரதி புத்தகாலய பொறுப்பாளரும் சங்கத்தின் மாநில செயற்குழு உறுப்பினருமான ஆர். ராஜகோபாலன், லெனின் நூல் தொகுப்பு பற்றி தெரிவித்து அனைவரும் வாசிக்குமாறு கேட்டுக் கொண்டார். மாவட்ட துணைத் தலைவர் பூபதி நன்றி கூறினார்.