மணல் கடத்தலை தடுத்து நிறுத்துக! விவசாயிகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்குக! சிபிஎம் குளித்தலை ஒன்றியச் செயலாளர் வலியுறுத்தல்
சிபிஎம் குளித்தலை ஒன்றியச் செயலாளர் வலியுறுத்தல்
கரூர், 17- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் குளித்தலை ஒன்றியச் செயலாளர் இரா.முத்துச்செல்வன் தனது அறிக்கையில் கூறி யிருப்பதாவது: கரூர் மாவட்டம் குளித்தலை வட்டம், நங்கவரம் பேரூராட்சிக்கு உட்பட்ட, நங்கவரம் தெற்கு (ll) கிராமம், ஆண்டிப்பட்டி காட்டுவாரியில் தொடர்ச்சியாக இரவு நேரங்களில் லாரி, டிராக்டர், பொலிரோ பிக் அப், ஆகிய வாகனங்களில் மணல் மாபியா கும்பல் மணல் கடத்தலில் ஈடுபட்டு வருகின்றனர் மணல் கடத்தும் எந்த வாகனத்திற்கும் நம்பர் பிளேட் கிடையாது. சார் ஆட்சியரிடம் புகார் கட்டுக்கடங்காமல் கடத்தப்படும் இந்த மணல் கடத்தலை கட்டுப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு ஆண்டிப்பட்டியை சேர்ந்த பழனியாண்டி என்ற விவசாயி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களை நேரில் சந்தித்து மணல் கடத்தலைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார். இதனைத் தொடர்ந்து, 21.4.2025 அன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் குளித்தலை ஒன்றியச் செயலாளர் இரா. முத்துச்செல்வன், மாவட்ட குழு உறுப்பினர் பி.சங்கரநாராயணன், நங்கவரம் கிளை செயலாளர் ராஜலிங்கம், விவசாயி பழனியாண்டி ஆகியோர் குளித்தலை சார் ஆட்சியரை நேரில் சந்தித்து, ஆண்டிப்பட்டியில் நடைபெறும் மணல் கடத்தலை தடுத்து நிறுத்த கோரியும், மணல் கடத்தலில் ஈடுபடும் மணல் மாஃபியா கும்பல் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் குளித்தலை ஒன்றிய குழு சார்பில் புகார் மனுவை வழங்கினர். சார் ஆட்சியர் நடவடிக்கையில் மணல் கொள்ளை 15 நாள் நிறுத்தம் புகார் மனுவை பெற்றுக்கொண்டு, உரிய நடவடிக்கை எடுப்பதாக சார் ஆட்சியர் உறுதியளித்தார். அத ன்படி உறுதியான நடவடிக்கையை எடுத்ததன் விளைவாக கடந்த 15 நாட்களுக்கு மேலாக அப்பகுதியில் மணல் கொள்ளை தடுத்து நிறுத்தப்பட்டது. ஆனால் மீண்டும் அதே பகுதியில் 9.5.2025 முதல் மணல் கடத்தல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. காரை ஏற்றிக் கொல்ல முயற்சி 10.5.2025 அன்று இரவு மணல் கடத்தலில் மாபியா கும்பல் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, வாகன சத்தம் கேட்டு விவசாயி பழனியாண்டி என்பவர், அருகில் சென்று பார்த்தபோது, மணல் கடத்தல் மாஃபியா கும்பலின் தலைவன் எஸ். அன்புச்செல்வன் மற்றும் அடையாளம் தெரியாத 5 நபர்கள், பொலிரோ பிக் அப் வாகனத்தை பயன்படுத்தி பழனியாண்டி மீது ஏற்றி கொலை செய்ய முயற்சி செய்து உள்ளார்கள். அங்கிருந்து விவசாயி பழனியாண்டி தப்பித்து வந்து கொலை செய்து விடுவார்களோ என பயந்து இரவு முழுவதும் தலைமறைவாகி பிறகு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களுக்கு தகவல் கொடுத்துள்ளார். அதன் அடிப்படையில், 12.5.2025 அன்று விவசாயி பழனியாண்டியை கொலை செய்ய முயற்சி செய்த மணல் கடத்தல் மாபியா கும்பல் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி நங்கவரம் காவல் நிலையத்தில் புகார் மனு கட்சியின் சார்பில் வழங்கப்பட்டது. கடத்தலை தடுத்திடுக, பாதுகாப்பை வழங்குக! உடனடியாக தமிழக அரசும், கரூர் மாவட்ட நிர்வாகமும் இந்த புகார் மனு மீது உரிய விசாரணை மேற்கொண்டு, கொலை செய்ய முயற்சித்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆண்டிப்பட்டி பகுதியில் நடைபெறும் மணல் கடத்தலை உடனடியாக தடுத்து நிறுத்தவும், மணல் கடத்தல் சம்பந்தமாக புகார் கொடுக்கும் விவசாயிகளுக்கு காவல்துறை உரிய பாதுகாப்பும் வழங்கிடவும், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் குளித்தலை ஒன்றிய குழு சார்பில் கேட்டுக்கொள்கிறோம். இத்ல், கோரிக்கை மீது, மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில், மணல் கடத்தலை தடுத்து நிறுத்த வலியுறுத்தியும், புகார் மீது விவசாயிகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வலியுறுத்தியும், குளித்தலை சார் ஆட்சியர் அலுவலகம் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.