நமது நாட்டின் நிலை என்ன? ஒவ்வொரு பதினைந்து நிமிடங்களுக்கும் ஒரு பெண் பாலியல் வன்முறைக்கு ஆளாகிறார். கடந்த 2023-ஆம் ஆண்டில் மட்டும் மூன்று லட்சத்து அறுபத்தையாயிரத்து நூறு பெண்கள் மீதான வன்முறைகளும், அறுபத்து மூன்றாயிரத்து நானூற்று பதினான்கு சிறுமிகள் மீதான குற்றங்களும் பதிவாகியுள்ளன. இவை வெறும் புள்ளிவிவரங்கள் அல்ல - ஒவ்வொன்றும் ஓர் உயிரின் வலி.
மூன்று, நான்கு வயது குழந்தைகளைக் கூட வெளியே அனுப்ப முடியாத நிலை. பள்ளிக்குச் சென்ற பிள்ளை பத்திரமாக வீடு திரும்புவாளா என்ற பயம். இது எந்த நாகரிக சமூகத்தின் அடையாளம்? பெண்ணை வெறும் நுகர்வுப் பொருளாகப் பார்க்கும் சிந்தனை எங்கும் படர்ந்துள்ளது.
நமது மாதர் சங்கம் வாச்சாத்தி வழக்கில் 19 ஆண்டுகள் போராடி, 252 காவல்துறை மற்றும் வனத்துறை அதிகாரிகளின் சட்டையைக் கழற்றி கம்பி எண்ண வைத்த வரலாறு நமக்கு உண்டு. ஆனால் இன்றைய சூழல் வேறு. பில்கிஸ்பானு வழக்கில் குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டபோதும், தில்லியில் விளையாட்டு வீராங்கனைகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானபோதும் குரல் கொடுத்தது நமது மாதர் சங்கம்தான்.
அண்ணா பல்கலைக்கழக சம்பவத்தில் நடந்தது என்ன? யார் பின்னணியில் இருந்தார்கள்? இன்றும் விடைகள் தெளிவில்லை. தமிழக அரசுக்கு இதில் பெரும் பொறுப்பிருக்கிறது. காவல்துறையினர் சரியான சாட்சிகளை நிறுத்தவில்லை. ஆனால் இங்கே அண்ணாமலையின் நாடகம் வேடிக்கையானது. உத்தரப்பிரதேசத்தில் எத்தனையோ பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகிறார்கள் - அங்கே போய் சவுக்கால் அடித்துக் கொண்டால் எவ்வளவு குற்றங்கள் தடுக்கப்படும்! ஆனால் அவர் அங்கே போவதில்லை. குஜராத்தில் நடக்கும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை காணாதவர்கள், தமிழகத்தில் மட்டும் சவுக்கு சுழற்றுகிறார்கள்.
இன்னும் கேவலமான விஷயம் என்னவென்றால், ஈஷா மையத்தில் பெண் குழந்தைகள் காணாமல் போகிறார்கள். அடையாளம் தெரியாத வகையில் கடத்தப்படுகிறார்கள். அந்த மையத்திற்குள் சென்றவர்கள் உயிரோடு திரும்புவதே இல்லை - இது ஒரு மர்ம மாளிகையாக, ஆன்மீக மடமாக மாறியிருப்பது தமிழகத்திற்கே கேவலம். ஆனால் இதற்கெல்லாம் அண்ணாமலையின் சவுக்கு செயல்படுவதில்லை. மாறாக, அண்ணா பல்கலையில் பாதிக்கப்பட்ட சகோதரிக்காக மட்டும் சவுக்கால் அடித்துக் கொண்டு நாடகம் நடத்துகிறார்.
இனி நாம் என்ன செய்ய வேண்டும்? காவல்துறையையும், அரசாங்க அமைப்பு
களையும் மட்டும் நம்பியிருக்க முடியாது. ஒவ்வொரு தாலுகாவிலும், ஊராட்சியிலும் பெண்களைக் கொண்ட பாதுகாப்புக் குழுக்களை உருவாக்க வேண்டும். ‘வெண்படை’ என்ற பெயரில் இளம்பெண்களுக்கு தற்காப்புப் பயிற்சி அளிக்க வேண்டும். கிராமங்களின் எல்லைகளில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும். சாதி, மத, பொருளாதார வேறுபாடுகளைக் கடந்து பெண்கள் ஒன்றிணைய வேண்டும்.
நாமே மகளிர் காவலர்களாக மாற வேண்டும். நகர்ப்புறங்களிலும், கிராமப்புறங்களி லும் குழந்தைகள் பாதுகாப்பு மையங்களை அமைக்க வேண்டும். மக்களின் பங்களிப்போடு இதை சாத்தியமாக்க முடியும். நமது போராட்டம் தொடரும். ஆனால் இனி அது வெறும் எதிர்ப்பு மட்டுமல்ல - மாற்றத்தை நாமே உருவாக்குவோம். பெண்களின் பாதுகாப்பிற்கு நாமே பொறுப்பேற்போம்!
பெண்கள், குழந்தைகள் மீதான வன்முறையை ஒழிக்க வலியுறுத்தி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் டிசம்பர் 29 அன்று ஈரோட்டில் நடைபெற்ற மண்டல மாநாட்டில் ஆற்றிய உரையின் பகுதிகள்.