21 புதிய மருத்துவக் கட்டடங்களை மாநில அமைச்சர்கள் திறந்து வைத்தனர்
புதுக்கோட்டை, ஜுன் 10- புதுக்கோட்டை மாவட்டத்தில் ரூ.7.62 கோடி செலவில் 21 புதிய மருத்துவக் கட்டடங்களை திறந்து வைத்து, ரூ.9.88 கோடி மதிப்பீட்டில் 11 மருத்துவ கட்டடப் பணிகளுக்கு மாநில அமைச்சர்கள் எஸ்.ரகுபதி, மா.சுப்பிரமணியன், சிவ.வீ. மெய்யநாதன் ஆகியோர் செவ்வாய்க்கிழமை அடிக்கல் நாட்டினர். அதனைத்தொடர்ந்து, புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ரூ.67.20 லட்சம் மதிப்பீட்டில் நவீன வசதிகளுடன் கூடிய கட்டண படுக்கைகள் கட்டடப் பிரிவினை திறந்து வைத்து, அங்கு நடைபெற்ற 3 ஆவது பட்டமளிப்பு விழாவில் பட்டம் பெறும் 141 இளங்கலை மருத்துவ மாணாக்கர்களுக்கு பட்டம் மற்றும் பதக்கங்களை வழங்கினர். மேற்கண்ட நிகழ்வுகளுக்கு மாவட்ட ஆடசியர் மு.அருணா தலைமை வகித்தார். நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எம். அப்துல்லா, மாநகராட்சி மேயர் திலகவதி செந்தில், சட்டமன்ற உறுப்பினர்கள் எம்.சின்னதுரை (கந்தர்வகோட்டை), வை.முத்துராஜா (புதுக்கோட்டை), முன்னாள் அரசு வழக்கறிஞர் கே.கே. செல்லப்பாண்டியன், துணை மேயர் எம். லியாகத் அலி, மருத்துவக்கல்லூரி முதல்வர் எஸ். கலைவாணி, இணை இயக்குநர் (மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள்) சா.ஸ்ரீபிரியா தேன்மொழி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.