tamilnadu

img

சிறுகதை- புங்க மரம்

மதியம் உச்சி வெயில் உடம்பில் இருந்த வியர் வையை வெளியேற்றி உடம்பின் மேல் ஆறாக ஓடவைத்தது, பருத்திக்காட்டில் குனிந்து களைபிடுங்கிக் கொண்டிருந்த மரகதம் நிமிர்ந்து முந்தானையை எடுத்து முகத்தில் வடிந்த வியர்வையை துடைத்துக் கொண்டு, மதிய உணவு நேரம் நெருங்கிவிட்டதா? என்று வானத்தை அண்ணாந்து பார்த்தாள். அவளருகில் களைபிடுங்கிய ராசாத்தி “ஏ மரகதா சோத்து நேரம் ஆகிருச்சா? இந்த பாழாப்போன வெயில் இன்னைக்குன்னு பார்த்து தீயா கொளுத்துது. சரி போ. போலாம் நெகுலுக்கு. சாயங்காலம் கொஞ்சநேரம் சேத்து செஞ்சிட்டு போலாம் வாலே. அவங்களையும் கூப்பிடு” என்றாள். அடுத்தடுத்த பருத்திக்காட்டு விவசாயக்கால்களில் களைகளை பிடுங்கிய வீரம்மா, பழனியம்மா, பூவாத்தா, ரங்கம்மா என எல்லோரையும் மரகதம் அழைக்க, அனை வரும் பருத்திக்காட்டின் வடக்கு மூலையில் வளர்ந்து படர்ந்து  நின்ற புங்கமரத்துக்கு அடியில் சென்றனர். கொரோனா காலத்திற்கு பிறகு சித்திரை மாசத்திலும் அடுத்தடுத்து பெய்த மழையினால் இலைகளை விரித்து பசுமையாக காட்சியளித்து குளுமையான நிழல் கொடுத்தது புங்கமரம். பருத்திக்காட்டு ஈரசேற்றின் அழுக்கும், வியர்வை மணமும், புங்கமரத்தின் நிழலும், பழைய கிழிந்த கைலிகளின் விரிப்புமாக கலந்து ஒரு தற்காலிக ஓய்விடம் அமைத்து, அதில் ஆறுபேரும் சில்லரைக் காசு சத்தங்களைப்போல் சிரித்து மகிழ்ந்து அமர்ந்தனர். “அப்பாடா, புங்கமர நெகிலு நெகிலுதான்” என தான் விரித்த கிழிந்த கைலியின் மேல் தலைக்கு கைகொடுத்து படுத்தாள் வீரம்மா. “சரி படுத்தா சலுப்புல தூங்கிருவோம், கையோட சோத்த தின்னுட்டு சித்த படுத்துக்கலாம்” என்று ரங்கம்மா கூற, “ஆமா ஆமா” என்று தலையாட்டினாள் பழனியம்மா.

ஆறுபேரும் அவரவர் கொண்டுவந்த வாட்டர்கேன் தண்ணீரில் கைகழுவி, அப்படியே ஒரு கை தண்ணீரை முகத்திலும் தெளித்துக்கொண்டு, வட்டமாக அமர்ந்து, அவர வர் கொண்டுவந்த தூக்குபோசி டிபன்கேரியர், சின்னச் சின்ன குளம்பு கப்புகளை திறந்தனர். ஒவ்வொருவரும் ஒருவகை சாப்பாட்டு பதார்த்தம் கொண்டு வந்திருந்தனர். அனைவரின் உணவும் அனைவருக்குமாக கைமாறியது. சாப்பாடு, களி, சாம்பார், ரசம், காய், சட்னி, தயிர், உப்பு, பச்சைமிளகாய், வெங்காயம் என அறுவரின் உணவும் அங்கு ஒன்று கலந்தது. ஆனால் உணவில் சாதி மட்டும் ஒன்றுகலக்க முடியாமல் விலகி நின்றது. உழைக்கும் இடத்தில் சாதிக்கு வேலையில்லாமல் ஆனது. சாப்பாட்டை சாப்பிட்டுக்கொண்டே “நாளைக்கு மரகதா வேற வேலைக்கு வரமாட்டாளாம், ஆளு வேற பத்தாது, நாளையோட முடியற வேலை, நாளுநாளா ஆறுவேரும் செய்த குத்தகை வேலையில, கடைசிநாள் வேற ஒரு ஆள கூப்பிடா, வருவாங்களா?” என்று புலம்பினாள் பூவாத்தா. “ஆமா அவ சங்கத்துக்காரி, நாம சொன்னா கேட்வா போறா, என்ன பண்டறது, ஆறாளு வேலையை அஞ்சாலு செஞ்சு முடிக்கவேண்டியது தான் வேற வழியில்லை” என்றாள் சலுப்புடன் ராசாத்தி. இதைக்கேட்ட மரகதம் “இல்லக்கா இது முக்கியமான கூட்டம், நான் போயே ஆகனும், நம்ம நாட்டு ராணுவத்தையே கான்ட்ரேட்டு விடறாங்களாம், அப்படி உட்டா நம்ம நாடு என்னாகும் தெரியுமா” என்றார். “பருத்திக்காட்டுல களைபுடுங்குற நமக்கு எதுக்கு கூட்டம், ராணுவ விசயமெல்லாம், வேலை செஞ்சோமா, கூலிய வாங்குனோமா, இருந்தோமோன்னு இருக்காம” என்றாள் வீரம்மா. “நாமதான் ஓட்டுப்போட்டு ஆட்சியை கொண்டுவருகிறோம், நாம போட்ட ஓட்டை வாங்கி நமக்கே வேட்டுவெச்சா அவங்களை தட்டிக்கேட்காம, நாம பருத்திக்காட்டுல இருந்தால், அவங்க நம்ம மக்களை பாதிக்கும் திட்டங்களைத்தான் கொண்டுவருவாங்க” என்றார் மரகதம். 

மற்ற ஐந்துபேரும் மரகதத்தின் பேச்சை உன்னிப்பாக கேட்க, தொடர்ந்த அவர் “இப்ப ராணுவத்தில இருக்கிறவங்க நம்ம நாட்டுக்காக உயிரையே கொடுக்க தயாராக இருக்கிறார்கள், அவங்கள மக்கள் பெரும் மரியாதையாக பார்க்கிறார்கள், ஆன இப்ப இருக்கிற டெல்லி கவர்மெண்டு ராணுவத்துக்கு இனிமேல் நிரந்தரமாக ஆளை எடுக்காமல் கான்ட்ராக்ட் அடிப்படையில் நான்கு வருசத்துக்கு மட்டும் ராணுவத்தில் வேலை, அப்புறம் வீட்டுக்கு போயிறனும் அப்படின்னு சொல்லுது, நாலு வருசந்தான் வேலை, அப்புறம் இல்லை, வேலையை விட்டு போனா பென்சன் கூட இல்லை, என்றால் இளம் வயசுல ராணுவத்தில் இருந்து வெளியே வந்து நம்ம பசங்க எங்கே போவார்கள், ஆயுதப் பயிற்சி பெற்ற பசங்களை தப்பான காரியத்துக்கும் பயன்படுத்த முடியாதுன்னு என்ன உத்தரவாதம், அப்ப நம்ம நாட்டில் அமைதி நிலவுமா, அதுமட்டுமல்ல இப்ப ராணுவத்தில் சேரலாமுங்கிற கனவுல பயிற்சி எடுத்து காத்திருக்கும் பசங்க நிலை என்னாவது” என்றார். “இப்ப எந்த வேலையும் நிரந்தரமில்லை, தனியார் கம்பெனிகள் வேலைக்கு தகுந்த கூலி கூட கொடுப்பதில்லை, காலியாக இருக்கிற கவர்மெண்ட் வேலைக்கு கூட ஆள் எடுக்கிறதில்லை, படிச்ச பசங்க லட்சக்கணக்கில் வேலைக்காக காத்திருக்கிறாங்க, எல்லாம் கான்ட்ராக்ட் தான், ராணுவமும் அப்படி என்றால் நம்ம நாட்டோட நிலைமை என்னாவது, 100 நாள் வேலைக்கான பணம் ஒதுக்குவதை குறைச்சிட்டாங்க, பெட்ரோல், டீசல், கேஸ் விலையை உயர்த்தி விலைவாசி உயர்வுல மக்களை தள்ளிட்டாங்க, அதனால் நாம எவ்வளவு சம்பாரிச்சாலும் கடன் தான் மிஞ்சுது, ஆனால் நாம் நம்தலைவிதின்னும் கடவுள் செயல்ன்னும் கம்முனு இருக்கிறோம், நம்ம கஷ்டத்திற்கு எல்லாம் காரணமே கவர்மெண்டு தான், கடவுள் இல்லை, நல்ல கவர.மீண்டும் இருந்தா மக்கள் கஷடத்தை தீர்க்க முடியும், கேரளாவில் இருந்த கவர்மெண்டு கொரோனா காலத்தில மக்கள எப்படி காப்பாத்துச்சுன்னு உங்களுக்குத் தெரியுமா? அதனால இப்படி இருக்க கூடாது ஒன்னு சேர்ந்து போராடனும், போராடுனாதான் மக்கள் அவங்க உரிமையை பெறமுடியும் என்று நம்ம மாதர் சங்கம் கூப்பிடுது, அதனால் நாளைக்கு ஒருநாள் நான் மட்டுமல்ல, நாம எல்லோருமே இந்த போரட்டத்திற்கு போலாம் வாங்க” என்று ஐவரையும் மரகதம் அழைத்தார்.

கொஞ்சநேரம் அங்கு அமைதி நிலவியது “ஆமாலே, மரகதா சொல்லறது எல்லாம் உண்மைதானே, நாமலும் தான் நாளைக்கு ஒருநாள் போராட்டத்திற்கு போயிட்டுத்தான் வருவோமே” என்றார் வீரம்மா. “ஆமாக்கா இன்னிக்கு புங்கமரத்தடியில் ஒரு புத்தி தெளிவு வந்தது, புங்கமரம் நமக்கு ஒரு போதிமரமாயிருச்சு, அதற்கு மரகதம் காரணமாக அமைஞ்சுட்டா” நாளைக்கு போகலாம் என்று பழனியம்மா கூற, அதை பூவாத்தாலும் ரங்கம்மாவும் ஆதரித்தனர். மறுநாள் மாதர் சங்க போராட்டத்திற்கு போகும் ஏகமனதான முடிவுடன் ஆறுபேரும் மதிய உணவை முடித்து கைகழுவி விட்டு, சிறிது நேரம் புங்கமர நிழலில் கண்ணயர்ந்து விட்டு, மீண்டும் பருத்திக்காட்டுக்கு களையெடுக்க புறப்பட்டனர்.