சாந்தி துணிச்சலான பெண் என்று பழங்குடியினப் பெண்கள் மத்தியில் பேரெடுத்தவள். குடிகாரக் கணவன் பார்த்திபனுடன் வாழ்வதைவிட கணவன் இல்லாமல் வாழ்வதே மேல் என்ற முடிவுக்கு வந்தவள் சாந்தி. தனது தங்கை வேண்டாவுக்கும் அப்பாவுக்கும் சேர்த்து உழைத்து வந்தாள்.
சாந்தியின் மனம் மட்டும் காட்டாபீசர் தன்னிடம் நடந்துகொண்ட விதத்தை நினைத்து இந்த ராத்திரியிலும் கேள்விக் கணைகளுடன் சண்டையிட்டுக் கொண்டிருந்தது.
“நாமளும் ஒரு ஆளுதான! நமக்குப் பாதுகாப்புக்காக சட்டமும் இருக்கு. ஆனா வெறும் சட்டம் மட்டும் போதாது. சாட்சி, ஆதாரம்தான் எல்லாத்துக்கும் முக்கியம். அதுல கோட்டை விட்டுடக் கூடாதுன்னு அடிக்கடி கூ படிச்ச பொன்னம்மா சொல்வாளே!”
விடிஞ்சா வேலயப் பாத்துட்டுப் பத்து மணிக்குப் போலீஸ் ஸ்டேஷன் போகனும். இப்பவே நடு ராத்திரியத் தாண்டியாச்சி. தூக்கமும் வரல.
சலித்துக் கொண்ட மனதுடன் சண்டையிட்டுக் கண்களை இறுக மூடினாள் சாந்தி. இப்போது தூக்கம் மெல்லத் தழுவியது.
நீளமான பெஞ்சில் சாந்தி, தங்கை வேண்டாவும் உட்கார்ந்தனர். எதிரில் எஸ்.ஐ. அருள் பெட்டிஷனை வைத்துக் கொண்டு வாச்சரையும் சாந்தியையும் மாறி மாறிப் பார்த்தார். வாச்சர் ராமுவின் பக்கத்தில் அவனது ஆபீசர் உட்கார்ந்திருந்தார்.
வாச்சர் ராமு தன்னிடம் நடந்துகொண்ட தகாத விதத்தை விவரித்தாள் சாந்தி.
“சார், அந்தப் பொண்ணுங்க ரெண்டு பேர் கையில சேரு இருந்ததா இல்லையான்னு கேளுங்க”
வாச்சர் எள் என்றால் எண்ணெயாகக் கேட்டார் எஸ்.ஐ.
“ஏம்மா, சார் சொல்றது உண்மதானம்மா”
“சேறு இருந்தது உண்மைதான்.”
“பாத்திங்களா! செங்காந்தள் கிழங்கெடுத்த சமயத்துல ஆனதுதான் அந்த சேறு. அது சட்டப்படி குற்றம்னு கேட்டதுக்குத்தான் இப்பிடி எம்மேல அபாண்டமா பழி போட்டு பெட்டிஷன் குடுத்திருக்கு.” இது வாச்சர் ராமு.
குறுக்கிட்ட சாந்தி
“அவனவன் காட்டு மரங்களக் கடத்தி விக்கிறான். அதையெல்லாம் கண்டுக்காம விடற நீங்க நான் வைத்தியத்துக்கு எதோ கெழங்கெடுத்ததுக்குப் பதிலா என்னயப் படுக்கக் கூப்பிடுறியே நீயெல்லாம் ஒரு கவர்மென்ட் சர்வன்டா?”
எனப் பொறிந்து தள்ளினாள் சாந்தி. குறுக்கிட்ட காட்டிலாகா ஆபீசர்,
“அப்படியெல்லாம் தப்புத் தப்பா பேசாதமா!”என்றதும்,
“எது தப்பு? அப்டியே கெழங்கெடுத்திருந்தாலும் அதுக்கென்ன அபராதமோ, கேசோ போட்டுட்டுப் போவியா, படுக்கக் கூப்டுவியா”
கோபம் தொப்புளிக்கப் பேசினாள் சாந்தி.
எஸ்.ஐ. அருள், இன்ஸ்பெக்டர் அறைக்குச் சென்று பத்து நிமிடத்தில் திரும்பி தன் இருக்கையில் வந்தமர்ந்தார்.
இப்போது இன்ஸ்பெக்டர் அழைப்பின் பேரில் சென்ற வாச்சர் ராமுவும் அதிகாரியும் பத்து நிமிடத்தில் முகமலர்ச்சியுடன் திரும்பினர்.
இப்போது இன்ஸ்பெக்டர் சாந்தியையும் அவள் தங்கையையும் தனியே உள்ளே அழைத்தார். வாச்சர் ராமுவின் வயிற்றில் புளியைக் கரைத்தது.
இப்போது வாச்சர் ராமுவை உள்ளே அழைத்தார் இன்ஸ்பெக்டர்.
“அந்தப் பொண்ணே புத்திசாலித்தனமான ஆதாரத்தை வச்சில்லன்னு வை, அவங்களையும் எங்களையும் மட்டுமில்ல, டி.எஸ்.பி, எஸ்.பி, கலெக்டர்னு எல்லாரையுமே ஏமாத்திடுவ!”
இன்ஸ்பெக்டர் பேசிக் கொண்டிருக்கும்போதே குறுக்கிட்ட வாச்சர் ராமு,
“மேடம். உங்க கால்ல விழுறன் மேடம். மன்னிச்சிக்கங்க மேடம். இந்த விசயம் என் ஒய்புக்குத் தெரிஞ்சா தூக்கு மாட்டிக்குவா மேடம்.” சொல்லிக் கொண்டே இன்ஸ்பெக்டர் காலில் விழப் போக,
“சீ! எங்காலில் விழுறத அவ காலில் விழு! அப்பக்கூட மனசு இறங்கறதுக்கு வாய்ப்பில்ல! மூனு மணி நேரமா நீ உத்தமன்னும் அவதான் குற்றவாளின்னும் வாதாடுன பாரு இதுக்கப்புறமும் அவ இறங்குவான்னு தப்புக் கணக்குப் போடாத! அவளும் பொண்ணுதான, அவளுக்கெல்லாம் மனசுன்னு ஒன்னு இருக்காதா என்ன? நானே மப்டியில காட்டுப் பக்கம் போனா, எனக்கும் இதே நெலதான! உனக்கெல்லாம் பாடம் கத்துக் குடுக்க சாந்தி மாதிரி பொன்னுங்களாலதான் முடியும்!”
இப்போது எஸ்.ஐ. அருளைப் பார்த்து,
“அருள், இன்னமும் அவங்ககிட்ட கொழஞ்சிக் கொழஞ்சி வீணாப் போகாம ஆக வேண்டிய காரியத்தப் பாரு! எப்.ஐ.ஆர். நீட்டா இருக்கனும், சாட்சிகளோடயும் சட்ட நுணுக்கங்களோடயும் பக்காவா தயார் பண்ணனும். டி.எஸ்.பிக்கு இன்பார்ம் பண்ணியாச்சி. அவர் வர்ரதுக்குள்ள எல்லாமே கரெக்டா ரெடி பண்ணனும். நான் சாப்டு வரேன். நீங்க எல்லாருமே சாப்டு வாங்க” என்றபடி கிளம்பினார் இன்ஸ்பெக்டர்.
சூரியன் மறையும்போதுதான் வந்தார் இன்ஸ்பெக்டர். வந்த ஐந்து நிமிடத்தில் டி.எஸ்.பி.யும் வந்துவிட்டார்.
திடீரென்று ஒரு வெள்ளை நிற கார் வந்து நின்றது. தலைகுனிந்தபடி வந்த வாச்சர் ராமுவுக்கு முன்னும் பின்னும் போலீஸ். கூட எஸ்.ஐ. கார் பறந்தது. ஊடகவியலாளர்கள் வீடியோ எடுத்தனர்.
சாந்தியை அறைக்கு வருமாறு அழைத்தார் டி.எஸ்.பி. சாட்சிகள் நான்கு பேரையும் அழைத்தார். கையெழுத்து நடைமுறைகள் முடிந்தன.
எப்.ஐ.ஆர். நகலை சாந்தியிடம் கொடுத்த டி.எஸ்.பி,
“சாந்தி! நீ கிளவரா நடந்துக்கிட்டதாலத்தான் ராமுவ அரெஸ்ட் பண்ண முடிஞ்சது.” என்றார்.
“ஆதார வீடியோவ வேணும்னா வாட்சப்ல அனுப்புறேன். ஃபோனக் கொடுக்கமாட்டேன்னு உறுதியா இருந்தப் பாரு, அதான் உன்னோட வலிமை. இன்ஸ்பெக்டரயே நீ நம்பமாட்டேங்கிறியேன்னு நான் கோபப்படல, ஒரு பெண்ணோட நெலையில உன்னைப் பாராட்றேன். வெல்டன்.”
இப்படி இன்ஸ்பெக்டர் சொன்னதும் சாந்தியின் கைகளிலிருந்த எப்.ஐ.ஆர் நகலின் மீது அவளது கண்ணீர்த் துளிகள் விழுந்தன.