செந்தொண்டர் அணிவகுப்பு நிகழ்ச்சி, கருத்தரங்கம்
மதுரையில் நடைபெறும் சிபிஎம் 24 ஆவது அகில இந்திய மாநாட்டை முன்னிட்டு, விடுதலைப் போராட்ட வீரர்கள் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் நினைவு தினமான மார்ச் 23 அன்று, செந்தொண்டர் அணிவகுப்பு நிகழ்ச்சி பெரம்பலூரில் செந்தொண்டர் உபகுழு மாவட்ட கன்வீனர் ஏ. ரெங்கநாதன் தலைமையில் நடைபெற்றது. செந்தொண்டர் அணிவகுப்பினை, கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் சாமி.நடராஜன் கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த அணிவகுப்பானது, பெரம்பலூர் ரோவர் ஆர்ச் அருகிலிருந்து தொடங்கி, கிருஷ்ணா தியேட்டர், வெங்கடேசபுரம், பாலக்கரை வழியாக புதிய பேருந்து நிலையத்தில் நிறைவடைந்தது. கருத்தரங்கம்: தொடர்ந்து புதிய பேருந்து நிலையத்தில் செந்தொண்டர்களும், பொதுமக்களும் தெரிந்து கொள்ளும் வகையில் மாநாடு குறித்தும், இந்த மாநாட்டால் பொதுமக்கள் பயன்படும் வகையில் நிகழ இருக்கும் அரசியல் மாற்றம் குறித்தும் மாநிலக் குழு உறுப்பினர் சாமி.நடராஜன், மாவட்டச் செயலாளர் ரமேஷ் ஆகியோர் பேசினர். இந்நிகழ்ச்சியில், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கலையரசி, எஸ். அகஸ்டின், ஏ.கே ராஜேந்திரன், மாவட்டக் குழு உறுப்பினர்கள் இரா.எட்வின், கருணாநிதி, கிருஷ்ணமூர்த்தி, இந்திய மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் ராமகிருஷ்ணன் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். திருச்சிராப்பள்ளி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருச்சி மாநகர் மாவட்டக்குழு சார்பில் ஞாயிறன்று மாவீரன் பகத்சிங் நினைவு தின செந்தொண்டர் பேரணி ஒத்திகை நிகழ்ச்சி திருச்சியில் நடைபெற்றது. பேரணிக்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் பா.லெனின் தலைமை தாங்கினார். செந்தொண்டர் கன்வீனர் சேதுபதி வரவேற்றார். பேரணியை மாநில செயற்குழு உறுப்பினர் பாலபாரதி, மாநகர் மாவட்டச் செயலாளர் கோவி.வெற்றிச் செல்வம், மூத்த தோழர்கள் சம்பத், சுப்பிரமணியன் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர். இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். திருச்சி காந்தி மார்க்கெட் கமால் வளைவில் துவங்கிய பேரணி, டவுன்ஹாலில் நிறைவடைந்தது. மாவட்டக்குழு உறுப்பினர் சரஸ்வதி நன்றி கூறினார்.