கணேஷ்
“சமுத்திரகுப்தர் இந்திய நெப்போலியன் என்று அழைக்கப்படுகிறார்” என்று ஆசிரியர் சொன்னவுடன், இரண்டு, மூன்று மாணவர்களிடம் முணுமுணுப்பு எழுந்தது. “என்ன ஆச்சு ?” “ஒண்ணுமில்ல சார்..” “அப்புறம் எதுக்கு முணுமுணுப்பு?” மறுபுறத்தில் இருந்து, “எதுக்கு சார் அவர இந்திய நெப்போலியன்னு சொல்றோம்?” “நெப்போலியன் அளவுக்கு அவரு ஜெயிச்சாரு..” “ஒருதடவ கூட சமுத்திரகுப்தர் தோக்கலையா சார்..” “இல்ல, தோக்கவேயில்ல.” “அப்புறம் எதுக்கு சார் தோத்துப்போன நெப்போலியன் கூட ஒப்பிடணும்...?” ஆசிரியர் விழிகள் விரிந்தன. அடுத்த வினா அவரைப் புரட்டிப் போட்டது. “யார் முதல்ல பொறந்தாங்க?” “சமுத்திர குப்தர்தான்..” “அப்புடினா, நெப்போலியனதான பிரான்ஸ் சமுத்திர குப்தருன்னு சொல்லணும்..” ஜெர்மனி காந்தி, பிரிட்டன் போஸ், அர்ஜெண்டினாவின் பகத்சிங்னுலாம் நாம சொல்றதில்லையே... “அதோட குப்தரோட காலம் பொற்காலமாச்சே..?”என்று ஆசிரியர் தொடர்ந்தார். “எதுக்காக அப்புடி சொல்றாங்க, சார்..” மற்றொரு மாணவர் குறுக்கிட்டார்.. “அவங்க நிறைய ஜெயிச்சுருப்பாங்க..” “அதான் இல்லை.... முக்கியமான சில அறிவியல் உண்மைகளை ஆர்யபட்டா சொன்னாரு. குப்தர் காலத்துலதான் அவரு வாழ்ந்தாரு...” - ஆசிரியர். “சண்டை போட்டு ஜெயிக்குறதுதான் முக்கியம்னு இவ்வளவு நாளா நெனச்சுட்டு இருக்கோம்...” “பலருக்கும் அப்படியொரு எண்ணம் இருக்குறது உண்மைதான்.. ஆனா, ஆர்யபட்டாவோட கண்டுபிடிப்புகளத் தொடர்ந்து ஆய்வு பண்றதுக்கான ஏற்பாடுகள் இருந்துருந்தா நாம அறிவியல்ல எவ்வளவோ முன்னேறியிருப்போம்..” “சார்... 28ஆம் தேதி தேசிய அறிவியல் தினம்... ஆர்யபட்டாவோட கண்டுபிடிப்புகள காட்சிப்படுத்தலாமே சார்... ஆனா, அறிவியல் சார்கிட்ட கேக்கணும்...” “கேக்கணும்தான்... ஆனா வரலாறும் அறிவியல்தான்.. ஏன், எப்படி, எவ்வாறு, எங்கே, எதற்காக என்றெல்லாம் கேள்வி கேட்டு எழுதப்படும், முடிவுக்கு வரும் அனைத்துமே அறிவியல்தான்...” “ஓ..” “ஆமாம்... அது மட்டுமில்ல, கார்பனைச் செலுத்தி காலத்தைக் கண்டுபிடிக்கும் முறை வரலாற்றோடு ஒன்றியதாகிவிட்டது.. சரியான வரலாற்றைச் சொல்ல அறிவியல் முறைகள் தேவையாகிவிட்டன...” “சார்.... வரலாறு முக்கியம் அமைச்சரேன்னு சொன்னது ஞாபகத்துக்கு வருது... ஆனா...” “என்ன, ஆனா..??” “பதிலுக்கு அறிவியல் முக்கியம் மன்னானு அமைச்சர் சொல்லிருக்கணும் சார்...” அனைவரும் கை தட்டினார்கள்.