உத்தப்புரம் முத்தாலம்மன் கோயிலில் பட்டியல் சமூக மக்கள் வழிபாடு!
தீண்டாமை ஒழிப்பு முன்னணி போராட்டம் மகத்தான வெற்றி!
மதுரை, ஏப். 22 - உத்தப்புரம் முத்தாலம்மன் கோயி லுக்குள் சென்று பட்டியல் சமூக மக்கள் வழிபாடு நடத்தினர். இதன்மூலம் மக்கள் மன்றத்திலும், நீதிமன்றத்திலும் பட்டியல் சமூக மக்களும், தீண்டாமை ஒழிப்பு முன்னணியும் நடத்திவந்த போராட்டம் வெற்றி பெற்றுள்ளது. இதுதொடர்பாக, தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலத் தலைவர் த.செல்லக்கண்ணு, மாநிலச் பொதுச் செயலாளர் கே. சாமுவேல்ராஜ் ஆகி யோர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு: உத்தப்புரம் முத்தாலம்மன் கோயி லில் பட்டியலின மக்களின் அரசமர வழிபாட்டை சாதி ஆதிக்க சக்திகள், தடுத்து வந்ததால் பல ஆண்டுகளாக கோவில் திருவிழா நடைபெறாமல் இருந்தது. இதுதொடர்பாக சென்னை உயர்நீதி மன்ற மதுரைக் கிளையில் நடைபெற்ற வழக்கில் பட்டியலின மக்களின் வழிபாட்டு உரிமையை தடுக்கக்கூடாது என்று தீர்ப்பளிக்கப்பட்டது. அதன்படி செவ்வாயன்று பட்டியலின மக்கள் கோவிலுக்குள் சென்று வழிபாடு நடத்தினர். முத்தாலம்மன் கோயில் வழிபாட்டிற்கு சென்று திரும்பிய பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த பெரியவரும், ஊர்த் தலைவருமான என். பாண்டி “பேசுகையில், நான் கோவிலுக்கு சென்று 40 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. இப்போது தான் மீண்டும் சென்று வந்தேன். காணிக்கையும் செலுத்தினேன்” என்றார். பி. சங்கர் கணேஷ் என்ற இளைஞர் பேசுகிற போது, “எனக்கு 25 வயதாகிறது; இதுவரை நான் 2 முறை தான், முத்தாலம்மன் கோவிலுக்குள் சென்றுள்ளேன்; முதல்முறையாக தீண்டாமை ஒழிப்பு முன்னணி போராட்டத்தின் போது சென்றேன். தற்போது இரண்டாவது முறையாக சென்றுள்ளேன்” என்றார். திருவிழாவையொட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புறநகர் மாவட்டச் செயலாளர் கே. ராஜேந்திரன், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலத் தலைவர் த. செல்லக்கண்ணு, மதுரை மாவட்டச் செயலாளர் செ.முத்துராணி, சிபிஎம் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் சமயன், சேடபட்டி ஒன்றியச் செயலாளர் பி. காசிமாயன், செல்லம்பட்டி ஒன்றியச் செயலாளர் பி.எஸ். முத்துப்பாண்டி, உசிலம்பட்டி வட்டச் செயலாளர் பி. ராமர் உள்ளிட்டோரும் உத்தப்புரம் சென்றிருந்தனர். உரிமைக்கான போராட்டத்தில் உறுதியுடன் இடைவிடாமல் போராடிய உத்தப்புரம் பட்டியலின மக்களுக்கும், சட்டப்போராட்டத்தில் உதவிய வழக்கறிஞர்களுக்கும், 2008 முதல் உத்தப்புரம் பட்டியலின மக்களின் உரிமைக்கான போராட்டத்தில் மகத்தான பங்களிப்பை செய்து வரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மதுரை புறநகர் - மாநகர் மாவட்டக்குழுக்களுக்கும், நீதிமன்ற தீர்ப்பிற்குப் பிறகு பட்டியலின மக்களின் வழிபாட்டிற்கு அமைதியான முறையில் ஒத்துழைப்பு வழங்கிய உத்தப்புரத்தின் அனைத்துப்பகுதி மக்களுக்கும் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலக்குழு சார்பில் நன்றியையும், பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அறிக்கையில் கூறப் பட்டுள்ளது.